பொன்னம்பலம் அருணாசலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொன்னம்பலம் அருணாசலம் (செப்டம்பர் 14, 1853 - ஜனவரி 9, 1924, கொழும்பு, இலங்கை) அவர்கள் சேர் பொன். அருணாசலம் எனப் பொதுவாக அறியப்பட்டவர். அவரது காலத்தில் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர்.
பொருளடக்கம் |
[தொகு] பிறப்பு
பொன்னம்பலம் அருணாசலம் கேட் முதலியார் என அழைக்கப்பட்ட அருணாசலம் பொன்னம்பலம், செல்லாச்சி (சேர் முத்து குமாரசுவாமியின் சகோதரி) ஆகியோரின் மூன்றாவது புதல்வர். குமாரசாமி முதலியார், சேர். பொன். இராமநாதன் ஆகியோரின் சகோதரர். இவரது மனைவியின் பெயர்: சுவர்ணம் நமசிவாயம். பிள்ளைகள்: அருணாசலம் மகாதேவா, சிவானந்தன் அருணாசலம், அருணாசலம் இராமநாதன் ஆகியோர்.
[தொகு] அரச சேவை
பிற்காலத்தில் றோயல் கல்லூரி எனப் பேர் பெற்ற கொழும்பு வேத்தியர் கல்லூரியில் கல்வி கற்று புலமைப்பரிசில் பெற்று லண்டன் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் கிறைஸ்ட் கல்லூரியில் கலைமாணிப் பட்டம் பெற்றவர். இங்கிலாந்தில் பாரிஸ்டர் ஆகவும் சிவில் சேவை உத்தியோகத்தேர்வில் சித்தி பெற்ற முதல் இலங்கையராகவும் இலங்கை திரும்பினார். 1913 ஆம் ஆண்டு வரை அரசாங்க சேவையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தார். பதிவாளர் நாயகமாக (1888 - 1902) இருந்தவர்.
[தொகு] அரசியலில் ஈடுபாடு
சட்ட நிரூபண சபையில் சேர் பொன் இராமநாதனுக்குப் பின் அங்கத்துவம் வகித்தார். அரசாங்க சேவையில் பணியாற்றும் காலத்திலேயே சுயராஜ்ய உணர்வால் உந்தப்பெற்றார். ஓய்வு பெற்ற பின் அரசியல், சமூக, கல்விப் பண்பாட்டுத் துறைகளிலே ஈடுபட்டார். 1919-ம் ஆண்டு இலங்கையருக்கு கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதனுடைய முதல் தலைவராக 1919 முதல் 1922 வரை பொன்னம்பலம் அருணாசலம் விளங்கினார். ஆனால் சேர். ஜேம்ஸ் பீரிசும், நு. து. சமரவிக்கிரமவும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அருணாசலம் உட்படத் தமிழ்த் தலைவர்கள் காங்கிரசில் இருந்து விலகி, தமிழர் சீர்திருத்தக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினர்.
[தொகு] இயற்றிய சமய நூல்கள்
- A Revel in Bliss - தாயுமான சுவாமிகள் பாடல்களிற் சிலவற்றின் மொழிபெயர்ப்பு, 1895.
- A Few Hymns of Manikka Vachaka and Thayumanavar - ஜி. யூ. போப் அவர்களுடன் இணைந்து மொழிபெயர்த்த மாணிக்கவாசகரினதும் தாயுமானவரினதும் பாடல்கள், சென்னை, 1897.
- Studies and Translations from the Tamil - ஆய்வுகளும் மொழிபெயர்ப்புகளும், சென்னை.
- Studies and Translations, Philosophical and Religious - கட்டுரைத் தொகுதி, முதற் பதிப்பு:1937, மறு பதிப்பு: 1981.
இவை தவிர திருக்கோவையார், கல்லாடம், திருமுருகாற்றுப்படை, ஞானவாசிட்டம், புறநானூறு என்பவற்றிலிருந்தும் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.