பவழமல்லி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பவழமல்லி அல்லது பவளமல்லி என்னும் இம்மரம் தென் - தென்கீழ் ஆசிய நாடுகளில் வளரும். இதன் மலர் தாய்லாந்து நாட்டின் தேசிய மலராகும். பவழ (பவள) நிறக் காம்பும் வெண்ணிறமான இதழ்களும் உடைய பூக்களைக் கொண்டது. இதற்குத் தனிச் சிறப்பான நறுமணம் உண்டு. குளிர் மாதங்களில் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரத்தொடங்கும். இம்மரம் இருக்கும் இடமே நறுமணம் வீசும்.
பொருளடக்கம் |
[தொகு] இயல்புகள்
Nyctanthes arbor-tristis எனும் அறிவியல் பெயருடையது.
இம்மரம் 3 - 4 மீட்டர் உயரத்திற்கு மிக விரைவாக வளரும். நேரடியாக வெயிலிலேயே அல்லாது கொஞ்சம் நிழலிலும் வளர்க்கப்பட வேண்டும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் கூரான முனைகளுடையவையாகக் காணப்படும். கிளை நுனிகளில் பூக்கும் இதன் பூக்கள் வெண்ணிறமாயும் பவள நிறத்திற் காம்பைக் கொண்டவையாயும் உள்ளன. இப்பூகள் 5-7 இதழ்களைக் கொண்டவை. இப்பூக்கள் இரவிற் பூத்து காலையில் உதிர்ந்து விடும். இதன் பழங்கள் தட்டையாக, வட்ட வடிவில் காணப்படும். இரு விதைகளைக் கொண்டிருக்கும்.
நீர்த் தேக்கம் அதிகமில்லாத இடங்களில் நன்கு வளரும். வட அத்த கோளத்தில் இம்மரம் செப்டெம்பர்-டிசம்பர் வரை பூக்கும்.
இதனைப்போலவே இரவில் பூக்கும் இன்னொரு தாவரம் மரமல்லி ஆகும். அதன் அறிவியற் பெயர்: Millingtonia hortensis
[தொகு] பயன்
இலைகள் தளவாடங்களை மெருகேற்றத் தேய்ப்பதற்காகப் பயன்படும்.
பூவின் காம்பிலிருந்து பெறப்படும் பவளநிறச் சாயம் டுசார்(Tussar/Tussore Silk) பட்டு எனப்படும் பட்டுத்துணிகளுக்கு நிறமேற்றப் பயன்படும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் பவளமல்லி விதைகளும் இலைகளும் பூக்களும் வயிற்றுத் தொந்தரவு, மூட்டு/என்பு வலி, காய்ச்சல், தலைவலி என்பவற்றிற்கும் இன்னும் பல விதங்களிலும் மருந்தாகப் பயன்படுகின்றன.
[தொகு] புராணக் கதைகளில்
பாரிஜாதம் என்றும் அறியப்படுகிற பவளமல்லியை தேவலோகத்திலிருந்து இருந்து பூமிக்கு கிருஷ்ணன் கொண்டு வந்ததாக இந்திய புராணக் கதையொன்று சொல்லப்படுகிறது. கிருஷ்ணனின் மனைவியரான சத்திய பாமைக்கும் ருக்மிணிக்கும் இம்மரத்தைக் குறித்துச் சண்டை எழுந்தததாயும், அதைத் தீர்க்கும் முகமாக மரம் பூக்கும் காலங்களில், பவளமல்லிப் பூக்கள் ருக்மிணியின் தோட்டத்தில் உதிரும் வகையில் மரத்தைச் சத்தியபாமையின் தோட்டத்தில் கிருஷ்ணர் நட்டு பிணக்கைத் தீர்த்ததாயும் மேலும் அக்கதையில் கூறப்படுகிறது.
இன்னுமொரு புராணக்கதையும் பவளமல்லி தொடர்பாகச் சொல்லப்படுகிறது. பாரிஜாதகா எனும் இளவரசி சூரியன் மேல் விருப்புற்றதாயும் சூரியன் அவளைக் கைவிட்டபோது தன்னை அழித்துக் கொண்டாள் எனவும் சொல்லப்படுகிறது. அவள் எரிந்த சாம்பலில் இருந்து தோன்றிய மரமே பவளமல்லி மரமெனவும், தன்னைக் கைவிட்ட சூரியனைப் பார்ப்பதைத் தாங்க முடியாமல் இரவில் மட்டுமே பூக்களைத் தரும் மரமாக இருந்து, கண்ணீராக பூக்களைச் சொரிகிறாள் எனவும் கருதப்படுகிறது