ஈரோடு மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஈரோடு மாவட்டம் | |
[[படிமம்:|240px]] ஈரோடு மாவட்டம்:அமைந்த இடம் |
|
தலைநகரம் | ஈரோடு |
மிகப்பெரிய நகரம் | ஈரோடு |
மாவட்ட ஆட்சியர் |
[[]] |
ஆக்கப்பட்ட நாள் | செப்டம்பர் 17, 1979 |
பரப்பளவு | 8710 கி.மீ² (?வது) |
மக்கள் தொகை (2001) அடர்த்தி |
2,574,067 (?வது) 314/கி.மீ² |
வட்டங்கள் | 7 |
ஒன்றியங்கள் | |
நகராட்சிகள் | 5 |
கிராம பஞ்சாயத்துகள் | |
சிறப்பு கிராம பஞ்சாயத்துகள் | |
ஈரோடு மாவட்டம் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள 30 மாவட்டங்களுள் ஒன்றாகும். ஈரோடு இதன் தலைநகராகும். இது தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் கர்நாடக மாநிலம், தெற்கில் திண்டுக்கல் மாவட்டம், மேற்கில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் அமைந்துள்ளன. காவிரி, பவானி, மற்றும் நொய்யல் ஆகிய ஆறுகள் ஈரோடு மாவட்டத்தின் வழியாகப் பாய்கின்றன.
1996-ஆம் வருடம் வரை இது பெரியார் மாவட்டம் என்றழைக்கப்பட்டது.
பொருளடக்கம் |
[தொகு] பெயர்க் காரணம்
பிச்சைக்காரன் ஓடை, பெருபள்ள ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இவ்வூரை ஈரோடை (இரண்டு ஓடை) என்னும் பெயரால் அழைக்கின்றனர். இங்குள்ள கடவுளுக்கும் 'ஈரோடையப்பர்' என்ற பெயரே காணப்படுகிறது.
[தொகு] மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,574,067 மக்கள் இம்மாவட்டத்தில் வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். இம்மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 65.5% ஆகும்,
[தொகு] வரலாறு
கோவை மாவட்டத்திலிருந்து 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது.
[தொகு] வரலாற்றுச் சிறப்பு
பழங்கால கொங்கு மண்டலத்தில் மேல்கொங்கு மண்டலமாக ஈரோடு மாவட்டம் விளங்குகிறது. கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களையும், கரூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியையும், திண்டுக்கல் மாவட்டத்தின் வடக்குப் பகுதியையும் உள்ளடக்கியிருப்பதே கொங்கு நாடு ஆகும். இப்பகுதிகளை கொங்கர் என்னும் ஆயர்கள் ஆண்டு வந்தனர். கொங்கரை வெற்றி கொண்டு சேர நாட்டுடன் பல்யானை செல்கெழு குட்டுவன் சேர்த்துக் கொண்டான் என்று பதிற்றுப்பத்து கூறுகிறது. இங்குள்ள தாராபுரத்தில் உரோம நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. உரோம பேரரசுக்கும் இம்மாவட்ட வணிகர்களுக்கும் வணிகம் நடந்திருக்க வேண்டும் என்பது வரலாற்றறிஞர்களின் கணிப்பு.
இதுபோலவே நொய்யல் ஆற்றின் கரையில் சென்னிமலைக்கு அருகே உள்ள 'கொடுமணல் நாகரிகம்' 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு பல வண்ண மணிகள், ஓடுகள் கிடைத்துள்ளன. சங்க காலத்திற்கு பின்னர் கங்கர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். அவர்களை சோழர்கள் 9-ஆம் நுற்றாண்டில் முறியடித்து கொங்கு மண்டலத்தை ஆளத் தலைப் பட்டனர். சோழர் ஆட்சியில் கொங்கு மண்டலத்தின் பெயர் 'அதிராசராச மண்டலம்' என்று அழைக்கப்பட்டது. இக்காலத்தில் கொங்குவேளிர் பெருங்கதையையும்; பவணந்தி நன்னூலையும்; அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்திற்கு உரையையும் எழுதியுள்ளனர்.
சோழர்களுக்கு பிறகு பாண்டியர்கள், ஹோய்சாளர்கள், விஜயநகர மன்னர்கள், மைசூர் உடையார்கள், திப்பு சுல்தான் முதலியோர் இப்பகுதியை ஆண்டிருக்கின்றனர். இக்காலங்களில் பட்டக்காரர் வசம் வரிவசூலிப்பு இருந்திருக்கிறது.
[தொகு] எல்லைகள்
தெற்கில் திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கில் சேலம்-கரூர் மாவட்டங்களும், வடக்கில் கர்நாடகமும், மேற்கில் கோவை மாவட்டமும் ஈரோடு மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.
[தொகு] நிர்வாகம்
[தொகு] வட்டங்கள்
ஈரோடு மாவட்டம் 7 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
- பவானி
- தாராபுரம்
- ஈரோடு
- கோபிசெட்டிபாளையம்
- பெருந்துறை
- காங்கேயம்
- சத்தியமங்கலம்
[தொகு] நகராட்சிகள்
- பவானி
- தாராபுரம்
- ஈரோடு
- கோபிசெட்டிபாளையம்
- சத்தியமங்கலம்
[தொகு] சட்டசபை தொகுதிகள்
11 - வெள்ளக்கோயில், காங்கேயம், மொடக்குறிச்சி, பெருந்துறை, ஈரோடு, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர், சத்தியமங்கலம், தாராபுரம்.
[தொகு] பாராளுமன்ற தொகுதி
1 கோபிசெட்டிபாளையம்
[தொகு] புவியியல்
[தொகு] ஆறுகள்
காவிரி, நொய்யல், பவானி, உப்பாறு
[தொகு] அணைக்கட்டுகள்
பவானி சாகர், வறட்டுப்பள்ளம், கொடிவேரி, ஒரத்துப்பள்ளம், உப்பாறு, காளிங்கரான் அணை.
[தொகு] மலைவளம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைகள்: தாளவாடி மலை, திம்பமலை, தல்ல மலை, தவளகிரி மலை, பவள மலை, பன்னாரி மலை, பெருமாள் மலை, பருவாச்சி மலை, பூனாட்சி மலை, அந்தியூர் மலை,வட்டமலை, சென்னிமலை,மலைப்பாளையம்மன் மலை, எழுமாத்துர் மலை, எட்டிமலை, அருள்மலை, சிவகிரி மலை, அறச்சலுர் மலை, அரசன்னா மலை, திண்டல் மலை, விசயகிரி மலை, ஊராட்சி கோட்டை மலை ஆகியவையாகும்.
இம்மாவட்டத்தின் வடக்குப் பகுதி கர்நாடக பீடபூமியின் தொடர்ச்சியாயுள்ளது. இங்கு 900 மீ. முதல் 1700 மீ. உயரம் உள்ள மலைகள் காணப்படுகின்றன. இங்கு வரட்டுப்பள்ளம், வழுக்குப் பாறைப் பள்ளம், தென்வாரிப் பள்ளம், கோரைப் பள்ளம் போன்ற பல பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
[தொகு] காட்டுவளம்
இம்மாவட்டத்தில் காடுகள் நிறைந்து காணப்படுகின்றன. காட்டின் மொத்தப் பரப்பளவு 2,42,953.28 ஹெக்டேர்களாகும். தமிழ்நாட்டிலுள்ள வனக் கோட்டங்களில் ஈரோடு மாவட்ட வனக் கோட்டமே மிகப் பெரியது. இவற்றை 4 ஆக பிரித்துள்ளனர். அவை: சத்தியமங்கலம் சரகம், தல்ல மலை சரகம், பர்கூர் சரகம், அந்தியூர் சரகம் ஆகியவையாகும். தமிழகத்தின் மொத்த சந்தனத்தில் மூன்றில் ஒரு பகுதி ஈரோடு மாவட்டத்திலிருந்து கிடைக்கிறது. சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு அரசின் சந்தன மரக்கிடங்கு ஒன்று உள்ளது. மேட்டூர் சந்தன எண்ணெய்த் தொழிற்சாலைக்கு இங்கிருந்தே மரங்கள் செல்கின்றன. அந்தியூர், பர்கூர் மலைப் பகுதிகளில் தேக்கு மரங்களும், சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம், அந்தியூர்ப் பகுதிகளில் மூங்கில் மரமும் அதிகமாக வளர்கின்றன. இவை காகிதத் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இம்மாவட்டத்திலுள்ள காடுகளில் வேங்கை, கருங்காலி. ஈட்டி, மருது போன்ற பல்வேறு மரங்களும் காணப்படுகின்றன.
[தொகு] விலங்குகள்
பவானி சாகர், தெங்க மராடா, மோயாறு, பன்னாரி ஹாசனுர் காட்டுப் பகுதிகளில் யானைகள் அதிகமாக வாழ்கின்றன. இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக கூறுகின்றனர். தல்லமலைப் பகுதிகளில் புலிகள் வசிக்கின்றன. இப்பகுதியில் காட்டு எருமை, முள்ளம் பன்றி, மான்கள் அதிகமாக உள்ளன.
[தொகு] காடுபடு பொருள்கள்
குங்கிலியம், மட்டிப்பால், சிகைக்காய், தேன், கொம்பரக்கு, பட்டை வகைகளும், கடுக்காய், புங்கம் விதை, ஆவாரம்பட்டை, கொன்னைப் பட்டை ஆகியவையும், எருமை, மான் கொம்புகளும், யானைத் தந்தங்களும் சேகரிக்கப்படுகின்றன.
[தொகு] கனிவளம்
இரும்பு - கீழ்பவானி அணை, தொப்பம்பாளையம், கரிகொட்டாம் பாளையம், பங்களாபுத்துர் பகுதியின் வடக்கு மலைப்பகுதியில் கிடைக்கிறது.
தங்கம் - கோபிச்செட்டிப்பாளையம், எக்காத்துர், ஊதியூர், எழுமாத்துர்.
மைக்கா - வைரமங்கலம், குறிச்சி, புளியம்பட்டி, ஏரப்ப நாயக்கன் பாளையம்.
கருங்கற்கள் - பவானி பாலமலைப் பகுதி. இவை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆஸ்பெஸ்டாஸ் - பெருந்துறை, பர்கூர்.
ஜிப்சம் - தாராபுரம்.
படியூரில் பெரில்ஸ் என்னும் கடல்நிற வைரக்கற்களும், சிவன்மலை, சலங்கிப் பாளையம், சின்ன தாராபுரம் பகுதியில் உயர்தரக் கற்கள் கிடைக்கின்றன. குவார்ட்ஸ் எனப்படும் வெள்ளைக் கல்லும், பெல்ஸ்பர் என்ற சிவப்புக் கல்லும் இம்மாவட்டத்தில் கிடைக்கிறது.
[தொகு] பொருளாதாரம்
ஈரோட்டில் வேளாண்மைக் கருவிகள், இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில், தமிழ்நாடு சிறுதொழில் துறையினரால் நடத்தப்படுகிறது. இவை தவிர எண்ணெய், தோல், பருத்தி ஆலைத் தொழில் சிறப்பாக நடை பெறுகிறது. இதன் அருகில் முட்டையைப் பொடியாக்கி பேக்கிங் செய்யும் தொழில் ஏற்றுமதியில் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. பாத்திரத் தொழிலும் நடந்து வருகிறது. ஈரோடு துணி மார்க்கெட் இந்திய அளவில் 5ஆம் இடம் பெறுகிறது. சிறு சேமிப்பு திட்டத்தில் 33.65 கோடி ரூபாயில் இம்மக்கள் முதலீடு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் மஞ்சள், சமையலில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்களுக்கான முக்கிய சந்தையாகும். மஞ்சளானது துணிகளுக்கு சாயமாகவும் பயன்படுத்தப் படுகிறது. மஞ்சளானது ஈரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள தமிழ்நாட்டு, கர்நாடக மாவட்டங்களிலிருந்தும் வருகிறது. 'ஊத்துக்குளி வெண்ணெய்'யும', 'காங்கேயம் காளை'களும' புகழ் பெற்றவை.
[தொகு] விவசாயம்
மொத்த விவசாய பரப்பு 9 இலட்சம் ஏக்கர்; முக்கிய விளை பொருட்கள்: நெல், நிலக்கடலை, மஞ்சள், கரும்பு, சோளம், பருத்தி, புகையிலை, எள். விவசாயத் தொழிலாளர்கள்: 10,78,256 பேர்கள். மஞ்சள் சந்தை தமிழகத்திலேயே ஈரோட்டில்தான் நடைபெறுகிறது.
[தொகு] தொழில்கள்
பெருந்தொழில் நிறுவனங்கள் - 2; சிறு தொழிற்சாலைகள் 7,249. மற்றும் 1301 குடிசைத் தொழில்கள் நடைபெறுகின்றன.
- கைத்தறி - நெசவுத் தொழில் பெருந்துறை, தாராபுரம், ஈரோடு, பவானி ஆகிய இடங்களில் நடக்கிறது. அந்தியூரில் மட்டும் 3000 விசைத்தறிகள் உள்ளன. இவற்றில் 5000 பேர் பணியாற்றுகின்றனர். இங்கு டையிங் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளன. சென்னிமலை, பவானி ஆகிய இடங்களில் ஜமுக்காளம், போர்வைகள், படுக்கை விரிப்புகளுக்கு புகழ்பெற்றது. கோபிச்செட்டிப் பாளையம், தாளவாடி, சத்தியமங்கலத்தில் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டம் இங்கு தயாரிக்கப்படும் கைத்தறி மற்றும் விசைத்தறி துணிகளுக்கு பெயர்பெற்றது. இங்கு பருத்திப் புடவைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கி, வேட்டிகள் ஆகியன தயாரிக்கப் படுகின்றன.
- சர்க்கரை - சத்திநகர், சித்தோடு, பெருந்துறை, கவுந்தபாடி முதலிய இடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.
- மரம் அறுப்பு - சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையத்தில் மரம் அறுக்கும் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
- மீன்பிடிப்பு - ஈரோடு மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடிப்பே நடந்து வருகிறது. காவிரி, பவானி, நொய்யல், அமராவதி ஆகிய ஆறுகளில் அதிக அளவில் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. தாலக்குளத்தில் மீன் குஞ்சுகள் விற்கப்படுகின்றன. பவானிசாகர் அணையிலும், உப்பாறு அணையிலும் மீன்பிடிப்பு சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு பிடிக்கப்படும் மீனுக்கு 'பவானிகெண்டை' என்றே பெயர் உள்ளது. ஏரி மீன்பிடிப்பில் ஓடத்துறை ஏரி, தலைக்குளம் ஏரியில் மீன்பிடிப்பு நடக்கிறது. இங்கு இறால் மீன் பக்குவப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப் படுகிறது. செம்படவ பாளையத்தில் கையினால் மீன்வலை பின்னும் நிலையம் ஒன்று உள்ளது.
- எண்ணெய் - எண்ணெய் சந்தையைப் பொறுத்த அளவில் கேரளாவில் உள்ள கொச்சிக்கு அடுத்த படியாக, இங்குள்ள காங்கேயம் தான் பெரிய சந்தையாக திகழ்கிறது.
- கால்நடை வளர்ப்பு - ஈரோடு மாவட்டத்தில் பாரம்பரியமாகவே கால்நடை வளர்ப்பு சிறந்த முறையில் நடந்து வருகிறது. தமிழக மாடு வகையில் 'காங்கேயம்' உலகப் புகழ்பெற்றது. இது போலவே பர்கூர் இனக் காளைகளும் தற்போது அதிகமாக வளர்க்கப்படுகின்றன. தாளவாடி, பர்கூர், அந்தியூர் பகுதிகளில் குறும்பை ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும் பரவலாக வளர்க்கப்பட்டு வருகின்றன. கண்ணபுரத்தில் பெரிய மாட்டுச் சந்தையும்; அந்தியூரில் குதிரைச் சந்தையும் ஆண்டுதோறும் கூடுகின்றன.
[தொகு] பண்பாடு
[தொகு] வழிபாட்டிடங்கள்
பண்ணாரி மாரியம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், சென்னிமலை முருகன் கோவில், கொடுமுடி வீரநாராயணப் பெருமாள் கோவில், பாரியூர் அம்மன் கோவில், சிவன்மலை, ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், திண்டல்மலை முருகன் கோவில் முதலியன.
[தொகு] விழாக்கள்
ஈரோடு மாரியம்மன் பண்டிகை, பண்ணாரி மாரியம்மன் பண்டிகை, அந்தியூர் குருநாதசாமி தேர்த்திருவிழா, சென்னிமலை தைபூசத் திருவிழா, சிவன்மலை தேரோட்டம், பவானி கூடுதுறை ஆடிப் பெருக்கு.
[தொகு] போக்குவரத்து
ஈரோடு மாவட்டத்தின் தொழில் முயற்சிகளுக்குப் பெரிதும் துணையாக இருப்பது போக்குவரத்து; ஈரோட்டிலிருந்து தமிழகத்தின் எல்லா மாவட்டத் தலைநகர்களுக்கும், சென்னைக்கும் சாலை போக்குவரத்து உள்ளது. நேர் விரைவுப் பேருந்து சென்று வருகிறது. இம்மாவட்டத்தின் மொத்த சாலைகளின் நீளம் 9194 கி.மீ. உள்ளதாம்.
அ) ஈரோடு - பவானி, சித்தோடு, பெருந்துறை, விஜயமங்கலம் வழியாக செல்லும் சாலை கர்நாடக மாநிலத்தை அடைகிறது. ஆ) ஈரோடு - அந்தியூர், பர்கூர் வழிச்சாலை தமிழகத்தையும், கர்நாடகத்தையும் இணைக்கிறது. பவானியிலும், ஈரோட்டிலும் காவிரியைக் கடக்கும் பெரிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
[தொகு] இருப்புப் பாதை
முக்கிய புகைவண்டி நிலையங்கள்: ஈரோடு, ஊத்துக்குளி, பெருந்துறை, ஊஞ்சலுர், கொடுமுடி, பாசூர், ஈங்கூர். இம்மாவட்டத்தில் உள்ள இரயில் பாதை அகன்ற இரயில் பாதையாகும். ஈரோடு-கோவை இருப்புப்பாதை ஓர் இரட்டைப் பாதையாகும்.
[தொகு] நீர்வழி
காவிரியாற்றின் போக்கை ஒட்டி படகுப் போக்குவரத்து இங்கு நடைபெறுகிறது.
[தொகு] கல்வி
[தொகு] பள்ளிகள்
தொடக்க நிலை-1,455; நடுநிலை-185; உயர்நிலை-77; மேநிலை-52; கல்லுரிகள் - 8; தொழிற்கல்வி நிறுவனங்கள்-9, தொழிற்பயிற்சி நிறுவனங்கள்-1.
[தொகு] சுற்றுலாத் தலங்கள்
பவானி சாகர் அணைக்கட்டு, கூடுதுறை, கொடிவேரி அணைக்கட்டு, தாளவாடி மலை. வரலாற்று சுற்றுலா தலங்கள்: அரச்சலுர் - கல்வெட்டுகள்; பெருந்துறை- விஜயமங்கலம்; கொடுமணல் புதைபொருள் ஆய்வு இடம்.
[தொகு] தாளவாடி மலை
இது இம்மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசமாகும். இயற்கை எழில் போலவே வனவிலங்குகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. யானை, கரடி, செந்நாய், மான், கருங்குரங்கு, சிறுத்தை போன்றவை இங்குண்டு.
[தொகு] பண்ணாரியம்மன் கோவில்
ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது பண்ணாரியம்மன் கோவில். சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். கொத்த மங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும். பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் துண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. வனத்தின் மேற்கே சுமார் 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தினடியில் மாதேசுரசாமிக் கோவிலும், தீர்த்தக் கிணறும் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பெரிய திருவிழா நடைபெறுகிறது.
[தொகு] பவானி முக்கூடல்
காவிரியும், பவானியும் கலக்கும் இடத்திற்கு தட்சிண பிரயாகை (தென்னாட்டு பிரயாகை) என்று பெயர். வடநாட்டில், கங்கையும் யமுனையும் பிரயாகை என்ற இடத்தில் கூடும்போது சரஸ்வதி அடியில் வந்து கலப்பது போல, இங்கு அமுதநதி அடியில் வந்து கலப்பதாக ஐதீகம். இரண்டு நதிகளும் கூடும் இடத்தில் சங்கமேசுவரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் ஈரோட்டிலிருந்து 12 கி.மீ. துரத்தில் இருக்கிறது. தேவார காலத்தில் இவ்வூரை திருநணா என்றுஅழைக்கப்பட்டிருப்பதை சம்பந்தர் தேவாரத்தால் அறியலாம்.இக்கோவிலுக்கு இரண்டு வாயில்கள். வடக்கு நோக்கிய முக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால் சிறிய பிள்ளையார் கோயில் உள்ளது. கிழக்கு வாயிலுக்கு எதிரேதான் கொடிமரம், பலிபீடம்,விளக்கேற்றும் கற்துண் ஆகியவையெல்லாம் உள்ளன. கிழக்கு வாயில் வழியாக கூடுதுறைக்குச் செல்லலாம். நீராடுவதற்கு வசதியாக படித்துறைகள் அமைந்துள்ளன. கூடுதுறையிலே ஒரு தீர்த்தக் கட்டம் உள்ளது. இதனை 'காயத்திரிமடு' என்றும் கூறுகின்றனர். இதன் கரையில் காயத்திரி லிங்கம், அமுதலிங்கம் என்று இருக்கின்றன. திருக்கோவிலைச் சுற்றி அந்நாளில் கோட்டை இருந்திருக்கிறது.தற்போது இடிந்த சிதைந்த சில பகுதிகளைக் காணலாம். இக்கோவில் தற்போது புதிய திருப்பணியைக் கண்டுள்ளது. இங்கு மகாமண்டபம், இப்பகுதிகளை ஆண்ட இம்மடி கெட்டி முதலியார் என்பவர் காலத்தில் கட்டப்பட்டது. இங்குள்ள இரு பெண்களின் சிற்பம் பார்க்கத்தக்கது.இக்கோவிலுள்ளே பெருமாளுக்கும் ஒரு சந்நிதி உண்டு.
[தொகு] சென்னிமலைக் கோவில்
சென்னிமலைக்கு போவதற்கு ஈரோட்டிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. சென்னிமலையின் அடிவாரத்தில் ஊர் உள்ளது. ஊரின் பெயரும் சென்னிமலைதான். சென்னிமலை அடுக்கடுக்காக உயர்ந்து செல்கிறது. மலை மீது ஏறிச் செல்வதற்கு படிக்கட்டுப் பாதை உண்டு. அடிவாரத்தில் காவல் தெய்வமாக இடும்பன் காட்சி யளிக்கின்றார். இம்மலைத் தலத்தில் சில தீர்த்தங்கள் உள்ளன. மலையின் தென்மேற்குச் சரிவில் மாமங்க தீர்த்தம் உள்ளது. மற்றும் காணாச்சுனை என்னும் தீர்த்தமும், சுப்பிரமணிய தீர்த்தமும் உள்ளன. மலையின் வடபக்கத்தில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. சுப்பிரமணிய தீர்த்தத்திலிருந்து குழாய்கள் மூலம் மலையுச்சி வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மலை கடல் மட்டத்திலிருந்து 1279 அடி உயரத்தில் உள்ளது. எனவே களைப்பாறிச் செல்ல மண்டபங்கள் இருக்கின்றன. திருக்கோபுரவாயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பிரகாரத்தில் விசுவநாதர், விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன. முருகக் கடவுளின் பெயர்: சென்னிமலை நாதர்; மூலவருக்கருகிலேயே மார்க்கண்டேசுவரரும், இமயவல்லியும் உள்ளனர். அருகிலேயே வள்ளி, தெய்வானைக்குத் தனிக்கோவில் உள்ளது. இங்குள்ள சுயம்பு லிங்கத்தை 'அகத்தியர்' என்கின்றனர். இக்கோவிலின் மகாமண்டபத் துண்களில் 7ஆம் நுற்றாண்டில் திருப்பணி செய்த முத்துவசவய்யன் மற்றும் மைசூர்மன்னர் தேவராச உடையார், மனைவி ஆகியோர் உருவச்சிலைகள் காணப்படுகின்றன. இங்கிருந்து செல்லும் ஒற்றையடிப் பாதையில் சென்றால் ஒரு குகை காணப்படுகிறது. அதன் அருகில் சமாதி ஒன்றும் காணப்படுகிறது. இக்குகையை 'சன்னியாசி குகை' என்று மக்கள் அழைக்கின்றனர்.
[தொகு] சிவன் மலைக் கோவில்
காங்கேயத்திலிருந்து திருப்பூர் செல்லும் பாதையில் 5 கி.மீ. தொலைவில் சிவன்மலை அமைந்துள்ளது. இம்மலையைப் பொதுமக்கள் வலம் வருவது உண்டு. பாதி வழியில் பரமேஸ்வரன் கோவிலும் உண்டு. இங்கு அனுமார் சந்நிதியும் உண்டு. மலையில் படிக்கட்டுகள் உண்டு. இளைப்பாறும் மண்டபமும் காணப்படுகிறது. மலைமீது குமரனுக்கும் தனிக் கோவில் காணப்படுகிறது. தொட்டில் மரம் அருகே நஞ்சுண்டேசுவரரும், பர்வதவர்த்தியும் காட்சி தருகின்றனர். திருச்சந்நிதியில் முருகப்பெருமான், வள்ளி நாச்சியாரோடு காணப்படுகிறார். நான்கு கரங்களுடன் 3 அடி உயரத்தில் அமைந்துள்ளார். தைப்பூசத் திருவிழா - இங்கு நடைபெறும் பெரிய திருவிழா ஆகும்.
[தொகு] தொண்டீசுவரக் கோவில்
ஈரோடு நகரத்திலே உள்ளது. மூலவர் திருநாமம் ஈரோடையப்பர். இறைவி: வாரணியம்மை. 12-ஆம் நுற்றாண்டில் கொங்குச் சோழன் கரிகாலன் காலத்தில் கட்டப்பட்டது. ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுரம். சுற்றுப் பிரகாரத்தில் அறுபத்து மூவர் நாயன் மார்களுக்கும் மண்டபம் அமைந்துள்ளது. 63க்கும் சிலைகள் இருக்கின்றன. ஒவ்வொருவருடைய குலம், நட்சத்திரம், காலம், ஊர், பெயர் விவரங்களில் தனித்தனியே எழுதப்பட்டுள்ளன. தட்சிணா மூர்த்தி சிலை காணத்தக்கது. பஞ்சபூத தலங்களின் சித்திரங்கள் அழகு மிளிர வரையப் பெற்றுள்ளன. இதில் தெய்வயானையுடன் முருகப் பெருமான் காட்சி தருகிறார். கருவறையிலுள்ள சிவலிங்கத்தை, கதிரவன் மாசி மாதத்தில் 25,26,27 நாட்களில் தன் ஒளிக்கரத்தால் திருமேனியைத் தொட்டுப் பார்க்கிறான். வன்னிமரத்தின் அடியில் வாரணியம்மையின் பழைய உரு காணப்படுகிறது. வைகாசி விசாகத்தில் இறைவனுக்கு பத்து நாட்கள் பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோவில் திருமுறை விழா, திருவாசக விழாவும் நடைபெறுகின்றன.
[தொகு] மகிமலிசுரர் கோவில்
பல்லவர் காலக் கோவில். மகிமலிசுரர் கோவில். இது நகரின் நடுவேயுள்ள பழைய மருத்துவமனையையொட்டி உள்ளது. ஆறடி விட்டமுள்ள ஆவுடையாரில் மூன்றடி உயரமுள்ள சிவலிங்கம் பெரிய அளவில் காட்சியளிக்கிறது. வாயிற்காப்போர் சிலையும், கோபுரமும் பல்லவர் காலத்தவையேயாகும். துண் ஒன்றில் சுந்தரர் தாடியுடன் பரவை, சங்கிலியாருடன் காட்சியளிக்கிறார். இவருக்குச் சேரமான் கவரி வீசுகிறார். அருகில் மெய்க்காவலர் வில்லேந்தி நிற்கிறான்.
[தொகு] கஸ்துரி ரங்கப் பெருமாள் கோவில்
ஈரோட்டிலே கஸ்துரி ரங்கப்பெருமாள் கோவில் உள்ளது. கோபுரம் இல்லை. திருமாலின் பள்ளி கொண்ட கோலத்தை சிற்ப உருவில் வடித்துள்ளனர். இங்கு திருவேங்கட முடையான் திருச்சந்நிதி உள்ளது. இச்சந்நிதி நிலைப்படியில் தயாகு சாத்தன் சேவித்த நினைவு எனப் பொறிக்கப்பட்டுள்ளது. தாயாரின் திருநாமமே கமலவல்லி நாச்சியார். மூலவரும், உச்சவரும் அருகருகே உள்ளனர். இந்த திருக்கோலத்தில் நாற்கரங்களுடன் உள்ளது. பிரகாரத்தில் விஸ்வத்சேனர் திருப்பாதம் உள்ளது. ஆழ்வார்கள் மண்டபம் காணப்படுகிறது. அனுமார் சந்நிதி உள்ளது. 4 அடி குங்கிலியத்தால் அழகு செய்யப்பட்டுள்ளது. மூலவர் 14 அடி இருப்பார். பள்ளி கொண்ட நாதர்தான் கஸ்துரி ரங்கப் பெருமாள். வைகாசி விசாகத்தையொட்டி பிரம்மோச்சவமும், தேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது. இக்கோவில் மண்டபங்களை 150 ஆண்டுக்கு முன்பு திருப்பணி செய்தோர்: கொண்டமல்லி சங்கய்யா நாயக்கர் மகன் சின்ன முராரி நாயக்கர், லக்காபுரம் முத்துக் குமரக் கவுண்டர். இக்கோவிலில் இன்னொரு சிறு திருப்பணியை செய்தவர்: பெரியார் ஈ.வே.ரா.வின் தாயார். வெளிப்பிரகாரத்தில் உள்ள குத்துக்கல் தெரிவிக்கும் செய்தி: "ஈ வேங்கடாசல நாயக்கர் மனைவியார் சின்னத்தாயம்மாள் தன் சிறுவாட்டுப் பணத்தால் கடப்பைக் கல் பாவிய" செய்தி வெட்டப்பட்டுள்ளது.
[தொகு] மாவட்ட பெரியோர்
தமிழக மக்களால் 'பெரியார்' என்று அழைக்கப்படும் ஈ.வே.ராமசாமி நாயக்கர் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர். நரேந்திர தேவர், காங்கிரஸ் தியாகி. கொடிகாத்த குமரன் பிறந்த இடம் சென்னி மலை தான்.
[தொகு] வெளி இணைப்புகள்
![]() |
தமிழ்நாடு
|
---|---|
தலைநகரம் | சென்னை |
மாவட்டங்கள் | ஈரோடு • கடலூர் • கரூர் • கன்னியாகுமரி •
காஞ்சிபுரம் • கிருஷ்ணகிரி • கோயம்புத்தூர் • சிவகங்கை • சென்னை • சேலம் • தஞ்சாவூர் • தர்மபுரி • திண்டுக்கல் • திருச்சிராப்பள்ளி • திருநெல்வேலி • திருவண்ணாமலை • திருவள்ளூர் • திருவாரூர் • தூத்துக்குடி • தேனி • நாகப்பட்டினம் • நாமக்கல் • நீலகிரி • புதுக்கோட்டை • பெரம்பலூர் • மதுரை • இராமநாதபுரம் • விருதுநகர் • விழுப்புரம் • வேலூர் |
முக்கிய நகரங்கள் | அம்பத்தூர் • ஆலந்தூர் • ஆவடி • ஈரோடு • கடலூர் • காஞ்சிபுரம் • கும்பகோணம் • கோயம்புத்தூர் • சென்னை • சேலம் • தஞ்சாவூர் • தாம்பரம் • திண்டுக்கல் • திருச்சிராப்பள்ளி • திருநெல்வேலி • திருப்பூர் • திருவண்ணாமலை • திருவொற்றியூர் • தூத்துக்குடி • நாகர்கோயில் • நெய்வேலி • பல்லாவரம் • புதுக்கோட்டை • மதுரை • இராஜபாளையம் • வேலூர் |