அரைஞாண்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அரைஞாண் என்பது பெரும்பாலான தமிழ் ஆண்கள், குழந்தைகள் இடுப்பில் அணியும் ஒரு கயிறு ஆகும். ஓரிரு இந்திய ரூபாய் மதிப்புள்ள எளிய கயிறு முதல் விலை மதிப்புடைய வெள்ளி, பொன் கயிறுகள் வரை அவரவர் வசதிக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப இக்கயிற்றை அணிவர். கயிறுகள் கறுப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். பெரும்பாலான தமிழ் இந்துக்கள், கிறித்தவ ஆண்கள், குழந்தைகள் இதை அணிந்திருப்பதைக் காணலாம். சிற்றூர்களில் உள்ள இசுலாமியர்களிடமும் இதை அணியும் பழக்கம் உண்டு.
அரைஞாணைப் பெரும்பாலும் ஆடைக்குள் மறைவாகத் தான் அணிந்திருப்பர். இப்படி அணிவதே கண்ணியமாகக் கருதப்படுகிறது. இடையில் அணியப்படும் வேட்டி, கோவணம் போன்ற ஆடைகளை இறுக்கிக் கட்ட இது பயன்படுகிறது. என்றாலும், belt போன்றவற்றை பயன்படுத்துவோரும் சமய நம்பிக்கை, சமூகப் பழக்கவழக்கங்கள் சார் காரணங்களுக்காக இதை அணிகிறார்கள். இந்து சமயத்தில் ஒருவர் இறக்கும் போதே அரைஞாணை அகற்றுகிறார்கள் என்பதால், ஒருவர் அரைஞாணை அணியாமல் இருப்பதை வீட்டில் உள்ள பெரியவர்கள் விரும்புவதில்லை. தவிர, அரைஞாண் உடலை இரண்டாகப் பகுத்துக் காட்டி, உடை போல் செயல்படுவதால் அரைஞாண் மட்டும் அணிந்தோர் அம்மணமாக இருப்பதாகவும் கருதப்படுவதில்லை. அரைஞாண் அணியாமல் உடையும் இல்லாமல் இருப்பவர்களை "முழு முண்டமாக" இருப்பதாகக் குறிப்பிடுவதையும் காணலாம்.
உடை, சமயம் சார் தேவைகள் போக, நடைமுறை காரணங்களுக்காகவும் இதை அணிகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, கிராமப் புறங்களில் நீச்சல் பழக்கி விடுபவர் அரைஞாணில் சேலை, வேட்டியைக் கட்டிப் அதைப் பிடித்து நீச்சல் பழக்கி விடுவார்கள். நீச்சல் அறியாத பிள்ளைகள் நீர் நிலைகளில் மூழ்க நேர்ந்தாலும், பற்றி இழுப்பதற்கு ஏதுவாக அரைஞாண் உதவுகிறது. சாவிக் கொத்து, முள்வாங்கி போன்றவற்றை கோர்த்து வைத்துக் கொள்ளவும் அரைஞாண் உதவுகிறது.
தமிழ் நிலப்பகுதிகள் போக இந்தியாவிலும் பாக்கிஸ்தானில் சில பகுதிகளிலும் இதை அணிந்திருப்பதை பார்க்கலாம். அரைஞாண் அணிவது இனம் சார் பண்பாட்டு வழக்கமாகப் பார்க்கப்பட்டாலும், இந்து, கிறித்தவ, இசுலாமிய நம்பிக்கைக்குட்பட்டு பெறப்பட்டும் தாயத்துக்களை கோர்த்து வைக்கவும் அரைஞாண் பயன்படுகிறது. இதனால் அரைஞாண் அணிவது மூடப்பழக்கம் என்று சிலரால் விமர்சிக்கப்படுவதும் உண்டு. எனினும், இத்தாயத்துக்களை மணிக்கட்டு, கழுத்து, முழங்கைக்கு மேல் தனிக்கயிற்றிலும் கட்டிக் கொள்ளலாம் என்பதால், அரைஞாண் அணியும் வழக்கம் மூடப்பழக்கம் என்றோ அதை ஊக்குவிக்கிறது என்றோ சொல்ல இயலாது.
[தொகு] பெயர் விளக்கம்
வில்லின் நாண் போன்று நாண் அல்லது ஞாண் என்பது கயிறு, கொடி, நூல் ஆகியவற்றைக் குறிக்கும். நா-ஞா போலிகள். நால்-நாலுதல் என்றால் தொங்குதல். யானைக்கு வாய் தொங்குவதால், நால்வாய் என்று பெயர். உலகம் அந்தரத்தில் தொங்குவதாகக் கருதப்பட்டதால் ஞாலம் (ஞால் = நால்; நாலுதல் = ஞாலுதல்) என்று பெயர். நாண் = ஞாண். அரை = இடுப்பு (அரை உடல்). இடுப்பில் கட்டும் கயிறுக்கு அரைஞாண் என்று பெயர். ஆகவே, அரைஞாண் கயிறு என்று சொல்வது தேவையற்றது. இதனை அருணாக்கயிறு, அர்ணாக்கயிறு என்றும் வேறு பலவிதமாகவும் பேச்சுவழக்கில் கூறுவார்கள்.