உரும்பராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

உரும்பராய் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்திலே உள்ள ஒரு ஊராகும். இது, யாழ்ப்பாணம் - பலாலி வீதியில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து 3 3/4 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. பலாலி வீதியும், அதற்குக் குறுக்காகச் செல்லும் மருதனார் மடம் - கைதடி வீதியும், இவ்வூரை 4 பிரிவுகளாகப் பிரிக்கின்றன. இவ்விரு வீதிகளும் சந்திக்கும் இடம் உரும்பராய்ச் சந்தி எனப்படுகின்றது. உரும்பராய்க்கு வடக்கில் ஊரெழுவும், தெற்கில் கோண்டாவிலும், மேற்கில் இணுவிலும், கிழக்கில் கோப்பாயும் எல்லைகளாக அமைந்துள்ளன.

செம்மண் பகுதியாகிய இது, நல்ல வளமான மண்ணையும், நல்ல நிலத்தடி நீர் வசதியையும் கொண்டுள்ள ஒரு இடமாகும். உரும்பராய், வாழை, மரவள்ளிக் கிழங்கு, பல வகையான காய்கறி வகைகள் போன்றவற்றுக்குப் பெயர் பெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய பயிர் வகைகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில் அவற்றைப் பயிரிடுவதில் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற இடங்களில் உரும்பிராயும் ஒன்று. யாழ்ப்பாணத்துக்கும் புதிய பயிர்களான, திராட்சை, உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் 70 களிலும் 80 களிலும் வெற்றிகரமாக இங்கே பயிரிடப்பட்டன.

இவ்வூரின் மேற்கு எல்லைக்கு அருகில் பிள்ளையார், முருகன், அம்மன் ஆகிய கடவுளர்களுக்கான மூன்று கோயில்கள் அருகருகே அமைந்துள்ளன. இவற்றுள் கருணாகரப் பிள்ளையார் கோயில், காலத்தால் முந்தியது. கருணாகரத் தொண்டைமானால் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இவற்றைவிட, கற்பகப் பிள்ளையார் கோயில், ஞான வைரவர் கோயில், என்பனவும் இங்கேயுள்ளன. ஆண்டு தோறும் ஆடு,கோழி ஆகியவற்றைப் பலி கொடுத்து விழாவெடுக்கும் வழக்கத்தை மிக அண்மைக்காலம் வரை கொண்டிருந்ததும், யாழ் மாவட்டத்தில் பரவலாக அறியப்பட்டதுமான காட்டு வைரவர் கோயிலும் இங்கேதான் அமைந்துள்ளது. கோயில்களில் விலங்குகளைப் பலி கொடுப்பதை அரசு தடை செய்ததனால் இவ் வழக்கம் கைவிடப்பட்டது.

இங்குள்ள பாடசாலைகளில் பெரியது உரும்பராய் இந்துக் கல்லூரியாகும்.

[தொகு] வெளியிணைப்புக்கள்