அத்வைதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அத்வைதம் (அ + துவைதம், அத்துவிதம்) - அதாவது இரண்டற்ற நிலை. சீவன் (ஜீவாத்மா) என்பதும் இறைவன் (பரமாத்மா) என்பதும் ஒன்றுதான்; வேறல்ல என்றும் சகல உயிரினங்களுக்குள்ளும் பொதுவாக ஆத்மா விளங்குகின்றது என்றும் கூறும் தத்துவம்.

கி.பி. 788-820ம் காலத்தே வாழ்ந்த சங்கரராய் (இவரது காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டு எனவும் ஒரு வாதம் இருக்கின்றது) முதன்முதலில் அத்துவிதத் தத்துவத்தைத் தொகுத்து எழுதி வைத்தார். இவர் யாருக்கும் உபதேசிக்கவோ பிரசாரம் செய்யவோ இல்லை.[1]

அத்துவிதத்தை உபதேசித்தவர் கெளடபாதர் என்னும் சமயப் பேரறிஞர். இவரையே குருவாகக் கொண்டு, அத்துவிதத்தைப் பரப்பியவர் இன்றைய கேரளத்திலுள்ள (அன்றைய சேர நாடு) காலடி எனும் சிற்றூரில் பிறந்த ஆதி சங்கரர் ஆவார்.

[தொகு] அத்வைதத்தின் நான்கு அடிப்படைக்கொள்கைகள்

1. என்றும் நிலைத்திருக்கும் பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுதான் ‘ஸத்’ என்றும், (பரப்-)பிரும்மம் அல்லது பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறது. அதைத்தவிர வேறு எதுவும் மெய்ப்பொருளல்ல.

2. பிரும்மம் என்பது பெயர் உருவம் ஆகிய எந்த குணங்களும் அற்றது. அதனால் அதை நிர்க்குணப்பிரும்மம் என்று சொல்லி, நாம் மனதால் நினைக்கக்கூடிய குணங்களுடன் சேர்ந்த கடவுள் என்ற பரம்பொருளை ஸகுணப்-பிரும்மம் என்றும் வேறுபடுத்தவேண்டும்.

3. அனைத்துயிர்களுக்கும் உயிருக்குயிராகவும் அறிவுக்கறிவாகவும் இருக்கும் ஜீவாத்மா, வெறும் தோற்றமான அகில உலகிற்கும் அடிப்படை மெய்ப்பொருளாக இருக்கும் பரமாத்மா, ஆகிய இரண்டும் இரண்டல்ல, ஒன்றே.

4. உபநிடதங்கள் மெய்ப்பொருளை குணங்களுள்ளதாக விவரிக்கும்போது அதை இடைநிலை விள்க்கங்களாகவும், குணங்களற்றதாக விவரிக்கும்போது அதை கடைநிலை விளக்கமாகவும் கொள்ளவேண்டும்.

[தொகு] ஆன்மா குறித்த ஏனைய தத்துவங்கள்

ஜைனம் பௌத்தம் துவைதம் விசிஷ்டாத்வைதம் முதலியன ஆன்மா குறித்த ஏனைய தத்துவங்களாகும். இவற்றை முறையே மகாவீரர் புத்தர் மத்வர் இராமானுஜர் அகியோர் பிரதானமாக முன்மொழிந்தனர். மத்வரின் துவைதமும் புத்தரின் பௌத்தமும் இணைந்த கருத்துக்களை அத்வைதம் பறைசாற்றுகிறது. அத்வைதத்திற்கு இன்னும் தெளிவினைக் கொடுக்க விசிஷ்டாத்வைதம் இராமானுஜரால் முன்மொழியப்பட்டது.

ஆன்மா என்னும் ஒன்றினை ஏற்கும் இத்தத்துவங்கள் அதன் தன்மையைப் பற்றி தமக்குள் மாறுபட்ட நிலைப் பாட்டினைக் கொண்டுள்ளன. மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் இவற்றுள் பௌத்தம் மற்றும் சமணத்தை தனியானதொரு சமயமாக எழுதியதின் தாக்கம் இவ்விரண்டும் தனி மதங்களாகவும் துவைதம் விசிஷ்டாத்வைதம் மற்றும் அத்வைதம் ஹிந்து மத தத்துவங்களாகவும் இன்று அடையாளங்காணப் படுகின்றன. ஆன்மீகம் என்பது அதன் உண்மைப் பொருளில் ஆன்மாவினை ஏற்றுக் கொள்ளும் இவையனைத்தையும் உள்ளடக்கியதாகும்.

[தொகு] அடிக்குறிப்புகள்

  1. இந்து மதம் 1000 உண்மைகள் - சிங்காரவேலனார்