இந்தியாவில் இரயில் போக்குவரத்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்தியாவில் நெடுந்தொலைவுப் பயணங்களுக்கு இரயில் போக்குவரத்தே முதன்மையாகப் பயன்படுத்தப் படுகிறது. இரயில் போக்குவரத்தானது இந்திய இரயில்வே என்ற அரசு நிறுவனத்தினால் ஆளப்படுகிறது. இரயில் பாதைகள் நாடு முழுதும் பரவியுள்ளது. இதன் மொத்த நீளம் 63,140 கிலோமீட்டர்கள் ஆகும்.இது உலகின் மிகப் பெரிய இரயில் வலையமைப்புகளில் ஒன்று ஆகும்.
இது ஆண்டொன்றுக்கு 500 கோடிக்கும் அதிகமான மக்களையும் 350 மில்லியன் டன்களுக்கு அதிகமான சரக்கையும் இடம்பெயர்க்கிறது. இது 28 மாநிலங்களிலும் மூன்று யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுகிறது. மேலும் இது அண்டை நாடுகளான நேபாளம், பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்றவற்றையும் இணைக்கிறது.
தொடர்வண்டியானது இந்தியாவில் முதலில் 1853-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1947-இல் நாடு விடுதலை அடைந்த போது மொத்தம் 42 தொடர்வண்டி அமைப்புகள் இருந்தன. பின்னர் 1951-இல் இது நாட்டுடமையாக்கப்பட்ட போது இது உலகின் பெரிய தொடர்வண்டி அமைப்புகளில் ஒன்றாக ஆனது.