இந்து சாதனம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்து சாதனம் எனும் தமிழ்ப் பத்திரிகையும் The Hindu Organ எனும் ஆங்கிலப் பத்திரிகையும் 1889 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி முதல் யாழ்ப்பாணத்திலிருந்து சைவபரிபாலன சபையினரால் தமது சைவப்பிரகாச அச்சியந்திரசாலையிற் பிரசுரம் செய்து வெளியிடப்பட்டு வந்தது. அப்பொழுது 'டெமி' பிராமணங் கொண்ட தாளிலே அகத்தில் தமிழும் புறத்தில் ஆங்கிலமும் கொண்ட ஒரு கூட்டுப் பத்திரிகையாக பட்சத்திற்கு ஒருமுறை புதன்கிழமைகளில் வெளிவந்தது.
ஆரம்பத்திலே தமிழ்ப் பத்திரிகாசிரியராக விளங்கியவர் ஆறுமுகநாவலரின் பெறாமகன் நல்லூர் த. கைலாசபிள்ளை; ஆங்கிலப் பத்திரிகாசிரியராக இருந்தவர் திருவனந்தபுரம் பிரதம நீதியரசராக முன்பு விளங்கிய தா. செல்லப்பாபிள்ளை.
1899ஆம் ஆண்டு The Hindu Organ வாரம் ஒருமுறையும் இந்து சாதனம் பட்சத்திற்கு ஒரு முறையும் தனித்தனியாக வெளிவரத் தொடங்கின. இவ்விரு பத்திரிகைகளும் சமய சம்பந்தமான கட்டுரைகளையும் செய்திகளையும் கருத்துகளையும் தாங்கி வந்தன. சமய சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசாரஞ் செய்தன. திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் முதலிய தேவாரம் பெற்ற திருத்தலங்களின் புனருத்தாரணத் திருப்பணிகளுக்கு இவை அளித்து வந்த ஊக்கம் குறிப்பிடத்தக்கது.
த. கைலாசபிள்ளையை அடுத்துத் தமிழ்ப் பத்திரிகாசிரியர்களாகப் பெ. கார்த்திகேய பிள்ளை, கு. சிற்சபேசன், மு. மயில்வாகனம் என்போர் விளங்கியுள்ளனர். செல்லப்பாபிள்ளையைத் தொடர்ந்து அ. சபாபதி, ச. சிவகுருநாதர், தெ. அ. துரையப்பாபிள்ளை, எம். எஸ். இராஜரத்தினம், எம். எஸ். இளையதம்பி, வி. நாகலிங்கம், ஏ. வி. குலசிங்கம், த. முத்துசாமிப்பிள்ளை என்போர் ஆங்கிலப் பத்திரிகாசிரியர்களாக விளங்கியுள்ளனர். இவர்களை அடுத்து நம. சிவப்பிரகாசம் இரு பத்திரிகைகளுக்கும் ஆசிரியராக விளங்கினார்.