யானை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தந்தம் உள்ள ஓர் யானை. தந்தம் என்பதைக் கோடு என்றும் எயிறு என்றும் கூறுவர். யானையின் பல் தான் தந்தம், எயிறு என்பன. இது வளைந்து உள்ளதால் கோடு என்று பெயர்.
தந்தம் உள்ள ஓர் யானை. தந்தம் என்பதைக் கோடு என்றும் எயிறு என்றும் கூறுவர். யானையின் பல் தான் தந்தம், எயிறு என்பன. இது வளைந்து உள்ளதால் கோடு என்று பெயர்.
தந்தம் இல்லாத தம்புள்ளவில் உள்ள ஓர் இலங்கை யானை
தந்தம் இல்லாத தம்புள்ளவில் உள்ள ஓர் இலங்கை யானை

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மாந்தர்களைத் தவிர்த்த விலங்குகளிலே இதுவே அதிக நாட்கள் வாழும் நில விலங்கு ஆகும். இவை மிகவும் வலிமையானவை. கொடும் விலங்குகளான சிங்கம் (அரிமா), புலி முதலியனவும் நெருங்க முடியாத வலிமை கொண்டவை. ஒரோவொருக்கால் சிங்கங்கள் ஒன்றாகச் சேர்ந்து, தனியாக வர நேரிடும் களைத்த அல்லது இளைத்த யானையைக் கொல்லும், ஆனால் இவ்வகை நிகழ்வுகள் மிக மிக குறைவே. யானைகளை எந்த விலங்கும் வேட்டையாடுவதில்லை (மனிதனைத்தவிர).

யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று உலகில் எஞ்சியுள்ளன. அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், மற்றும் ஆசிய யானைகள் ஆகும். இவைகளுக்கு இடையே சிறப்பான வேறுபாடுகள் உண்டு. பொதுவாக எல்லா யானைகளும் ஏறத்தாழ 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.

ஆண் யானைக்கு களிறு என்று பெயர். பெண் யானைக்கு பிடி என்று பெயர். யானையின் குட்டியைக் கன்று என்றோ குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியை பிளிறுதல் என்பர்.

பொருளடக்கம்

[தொகு] யானையினங்கள்

தர்பூசணிப் பழத்தைத் உண்ணும் ஆசிய யானை
தர்பூசணிப் பழத்தைத் உண்ணும் ஆசிய யானை

ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளை விட உருவத்தில் பெரியவை. பெரிய காது மடல்களைக் கொண்டுள்ளன. ஆப்பிரிக்க யானைகளில் ஆண் பெண் இரண்டும், தந்தங்களைக் கொண்டுள்ளன. ஆனால் ஆசியப் பெண் யானைகளில் தந்தம் அரிதாகவே காணப்படுகிறது. ஆப்பிரிக்க யானைகளின் முதுகுப்புறம், தலைக்கு அடுத்து சற்று உள்நோக்கி வளைந்தும், புடைத்த நெற்றி மேடுகள் இல்லாமல் சமனாகவும் இருக்கும். இவற்றின் துதிக்கை நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும். ஆனால் முன்னங் கால்களில் நான்கு அல்லது ஐந்து நகங்களும், பின்னங் கால்களில் மூன்று நகங்களும் இருக்கும். ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும் காது மடல்கள் சிறியனவாக இருக்கும். துதிக்கை நுனியில் ஒரே ஓர் இதழும் இருக்கும் (மேல் புறம்). முன்னங் கால்களில் ஐந்து நகங்களும், பின்னங் கால்களில் நான்கு நகங்களும் இருக்கும்.

[தொகு] உணவும் வாழிடமும்

யானைகள் மரம் செடிகொடிகளை உண்ணும் இலையுண்ணி அல்லது தாவர உண்ணிகள் ஆகும். இவை மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும் இவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது. எனவே இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது.

[தொகு] உடலமைப்பு

ஆண் யானைகள் பொதுவாக 3 மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையும் கொண்டவை. யானையின் தோல் மிகவும் தடிப்பானவை. சுமார் 3 செ.மீ தடிப்பு இருக்கும்,. எனினும் மெத்தெனவே இருக்கும். இதனால் கொசு முதலியனவும் கடிக்கும். யானை வலுவான நான்கு கால்களைக் கொண்டிருக்கிறது. யானை பெருத்த உடலைக் கொண்டிருந்தாலும் மலை மீது நெடுங்குத்தான இடங்களிலும் திறம்பட ஏறவும் இறங்கவும் வல்லது. "ஆனைக்கும் அடி சறுக்கும்" என்னும் பழமொழி, யானையின் நெடுங்குத்தான ஏற்ற இறக்கங்களில் அதன் நடைத்திறனைக் குறிப்பிட்டு எழுந்ததாகும்.

[தொகு] தும்பிக்கை

யானையின் சிறப்பான உறுப்பு அதன் தும்பிக்கை ஆகும். இது யானைகளில் மட்டுமே சிறப்பாகக் காணப்படுகின்றது. ஒரு சில விலங்குகளிலே முன் மூக்குப் பகுதி சற்று நீண்டு இருந்தாலும் (நெடுமூக்குக் குரங்கு போல்), தும்பிக்கை போலும் நீண்ட உறுப்புடைய விலங்குகள் இல்லை. தும்பிக்கையானது மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. தும்பிக்கையால் சிறு குச்சி முதல் பெரிய மரம் வரை தூக்க முடியும். இவை பொதுவாக உணவை எடுப்பதற்கும் நீர் பருகுவதற்கும் உதவுகின்றன.

[தொகு] தந்தம்

யானைகள் இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன. இவைகளுக்கு யானைக் கோடு என்று பெயர். இந்த யானைக் கோடானது ஆசிய இந்திய யானைகளில் ஆண் யானைகளுக்கு (களிறுக்கு) மட்டுமே உண்டு பெண் யானைகளுக்குக் (பிடிக்குக்) கிடையா. ஆனால் ஆப்பிரிக்கக் காட்டு யானைகளில் ஆண் பெண் ஆகிய இருபால் யானைகளுக்கும் (களிறு, பிடி ஆகிய இரண்டிற்கும்) கோடு உண்டு. சுமத்ரா போர்னியோ பகுதிகளில் வாழும் யானை, இலங்கையின் யானைகளில் ஆண் பெண் (களிறு, பிடி) ஆகிய இருபால் விலங்குகளுக்கும் பெரும்பாலும் யானைக் கோடு கிடையா. யானைக் கோடானது யானையின் கடைவாய்ப் பற்களின் நீட்சியாகும். இதனால் இவைகளுக்கு யானைகளின் எயிறு அல்லது தந்தம் என்றும் பெயர் (எயிறு, தந்தம் என்றால் பல் என்று பொருள்). தந்தங்கள் 3 மீட்டர் (10 அடி) வரை வளரக்கூடியவை. மேலும் இவை 90 கிலோகிராம் எடை வரை இருக்கலாம்.

[தொகு] இனப்பெருக்கம்

யானையின் சினைக்காலம் 22 மாதங்கள் ஆகும். இதுவே பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலம் ஆகும். பொதுவாக இவை ஒரேயொரு கன்றையே ஈனுகின்றன. இரட்டைகள் பிறப்பது மிகவும் அரிது. பிறந்த யானைக் கன்றானது 90 - 115 கிலோகிராம் எடை வரை இருக்கும். யானை ஈனும் முன்னும், ஈனும் பொழுதும், ஈன்ற பின்னரும் அதனைச் சுற்றிலும் மற்ற வளர்ந்த யானைகள் இருந்து மிகவும் உதவுகின்றன. யானைக்கன்று பிறந்ததில் இருந்து, அது யானைக் கூட்டத்தாலேயே வளர்க்கப்படுகின்றது.

[தொகு] அச்சுறுத்தல்கள்

யானைகளுக்கு முக்கியமான அச்சுறுத்தல் வேட்டையாடுதல் ஆகும். யானைகள் அவற்றின் தந்தங்களுக்காக வேட்டை ஆடப்படுகின்றன. யானைகளின் வாழிடங்கள் அழிக்கப் படுவதும் மற்றொரு முக்கியமான அச்சுறுத்தல் ஆகும். காடழிப்பு யானைகளின் வாழிடத்தைக் குறைக்கின்றது.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org../../../%E0%AE%AF/%E0%AE%BE/%E0%AE%A9/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது