தாயுமானவர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாயுமானவர் (1705 - 1742) அவர்கள் தமிழில் மெய்ப்பொருள் பற்றி புகழ்பெற்ற பாடல்களை இயற்றியவர்.
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரணியத்தில் பிறந்தார். இவர் கேடிலியப்ப பிள்ளைக்கும், கெஜவல்லி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். வடமொழி, தமிழ் மொழி ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றவர். திருச்சிராப்பள்ளியை ஆட்சிபுரிந்த விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம் அரச கணக்கராகப் பணிபுரிந்து பின்னர் அப்பதவியைத் துறந்து திருமூலர் மரபில் வந்த திருச்சிராப்பள்ளி மௌன குரு என்பவரிடம் உபதேசம் பெற்றுத் துறவு பூண்டார்.
தவநெறியில் சிறந்து விளங்கிய தாயுமானவர் பல்வேறு திருத்தலங்களுக்கும் சென்று இறைவனைப்பாடி வழிபட்டார். இறுதியில் இராமநாதபுரம் மாவட்டத்து இலட்சுமிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார்.
[தொகு] தாயுமானவர் செய்த ஆக்கங்கள்
தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு என்னும் நூலில் 36 தலைப்புகளில் 1452 பாடல்கள் உள்ளன. அவற்றில் 771 பாடல்கள் கண்ணிகளாகவும், 83 பாடல்கள் வெண்பாக்களாகவும் உள்ளன. இவருடைய பராபரக் கண்ணி மிகவும் புகழுடையது. பராபரக்கண்ணியில்,
எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே
என்னும் இவருடைய வரிகள் புகழ் பெற்றவை.