பேச்சு:அறிவியல் தமிழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] இராம. கி கருத்துக்கள்
அறிவியல் தமிழ் என்று நிறையப் பேசுகிறோம். அரசு ஏன் எதுவுமே இப்போதெல்லாம் இதற்காக செய்வதில்லை. ஒரு கலைகளஞ்சியத்தை இற்றைப்படுத்த முயற்சியாவது இருக்கிறதா? இணையம் இதில் பங்களிப்பது என்பது எந்த அளவு நடைமுறையில் சாத்தியம்?
அறிவியல் தமிழ் என்பது இன்றைக்கு வெறுமே ஏட்டளவில் தான் இருக்கிறது. இப்பொழுது, நாம் சறுக்கிய நிலையில் உள்ளோம். முன்னே சொன்னது போல் மடிக்குழைப் பள்ளிகள் (matriculation schools) பெருகிக் போய், பள்ளியில் தமிழில் படிப்பதே அருகிய நிலையில், தமிழில் அறிவியல் பெருகும் என்றா நினைக்கிறீர்கள்? நம்மூரில் ஆங்கிலத்தில் பேச்சுத் திறமை வளர்த்துக் கொள்வதற்கும், ஆங்கிலத்தின் மூலமாய் எல்லாவற்றையும் பள்ளியில் படிப்பதற்கும் உள்ள வேறுபாட்டைக் கூடப் பலரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்; சண்டித் தனம் செய்கிறார்கள். நாங்கள் (1964க்கு முன்னால்) பள்ளியில் படிக்கும் போது, மாநிலம் எங்கும், ஒரு பத்துப் பள்ளிகள் மடிக்குழைப் பள்ளிகளாய் இருந்தாலே வியப்பு. இன்றைக்கோ, இரண்டாயிரத்து ஐந்நூற்றிற்கும் மேல் இருக்கின்றன. மாநிலத்தில் தமிழில் படிப்பவன் இன்று முட்டாளாய்த் தெரிகிறான். அவனுக்கு வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாய் இருக்கிறது. "Tamil medium, get out; no job." முதலில் நம் பள்ளிகளில் தமிழ் நிலைத்தால் ஒழிய, அறிவியல் தமிழ் என்பது வளரவே வளராது. முதலில் பள்ளிகளில் நிலைத்து, பின் கல்லூரிக்குப் பரவிப் முடிவில் ஆய்வுக்குப் பழக வேண்டும். இதுவெல்லாம் நடக்கும் என்று 1971 வரை நாங்கள் நினைத்த முயற்சி, கழகத்தாரின் திருகுவேலையால் பின்னடைந்து, உருப்படாது போயிற்று. இப்பொழுது ஆங்கிலவழிப் படிப்பையே இரு கட்சியினரும் போட்டி போட்டு வளர்க்கிறார்கள். தமிழுக்கு அதிகாரம் கொண்டுதர, இன்னொரு இயக்கம் தான் இனிமேல் வரவேண்டும்.
கலைக் களஞ்சியங்களைப் புதுப்பிக்கும் வேலை அங்கொன்றும், இங்கொன்றுமாய் நடைபெறுகிறது. அகரமுதலிகளிலும், தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் பெருஞ் சொல்லகராதி (4 தொகுதிகளோடு நின்று போயிற்று, மேற்கொண்டு காணோம்.), ப,அருளியின் முயற்சியால் வெளிவந்த அருங்கலைச்சொல் அகரமுதலி போன்றவை நல்ல முயற்சிகள். மணவை முஸ்தாபா தனித்து அறிவியல் அகரமுதலிகள் வெளியிட்டு வருகிறார். சென்னைப் பல்கலைக் கழக அகரமுதலி இன்னும் திருத்தி வெளியிடப் படாமல் இருக்கிறது. தமிழ்வளர்ச்சித் துறை வெளியிடும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலில் நான்காம் மடலம் - மூன்றாம் பாகத்துடன் (தௌ வரை) 2004- ஆம் ஆண்டோடு நின்று போனது. அதற்கு அப்புறம் ஒன்றும் காணோம். அந்த அகரமுதலியின் விரிவும் ஆழமும் கூடச் சிறுகச் சிறுகக் குறைந்துவருகிறது. பாவாணருக்குப் பின் கொஞ்சகாலம் இரா.மதிவாணன் பார்த்தார்; இப்பொழுது இருப்பவர்களால், கவனிப்பு குறைந்து போனது என்றே எனக்குத் தோற்றுகிறது.
இணையத்தால் முடியுமா, என்று கேட்டால் முடியும்; ஆனால் நாட்களாகும். இணையத்தில் செய்வதற்குக் கூட, அரசின் உதவியில்லாமல், பெருத்த முதலீடு இல்லாமல், ஒரு நிறுவன முயற்சியில்லாமல், வழியில்லை. என்னைக் கேட்டால், இதைச் செய்வதற்குச் சரியான மானகை நெறியாளர் (managing director) வேண்டும். வல்லுநர்கள் பலரும் நம் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் நெறியாள்கை தான் சரியில்லை. நம்மூர்த் திட்டங்களின் பெருங்குறையே மானகைக் குறை தான்.