தேசவழமைச் சட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தேசவழமைச் சட்டம் என்பது ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வழங்கிய சட்ட வழக்கங்களை (customs) பிரதானமாக வைத்து யாழ்ப்பாண ஆதிக்க வகுப்பினரால் தொகுத்து ஒல்லாந்தருக்குச் சட்டமாகக் கொடுக்கப்பட்டது ஆகும். இது கி.பி. 1707 காலப்பகுதியில் இடம்பெற்றது. இச்சட்டம் உடமை உரிமைகள் பற்றியும் திருமணம் பற்றியும் விபரமான வரையறைகளைக் விபரிக்கின்றது.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
கி.பி. 1620 ஆம் ஆண்டுக்கு முன்னர், இலங்கையின் வடபகுதியில், தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தனியான நாடு இருந்தது. இதுவே யாழ்ப்பாண அரசு அல்லது யாழ்ப்பாண இராச்சியம் எனப்படுகின்றது. முடியாட்சி முறையின் கீழ் ஆளப்பட்டுவந்த யாழ்ப்பாண இராச்சியத்தில், சட்டம் ஒழுங்கு முதலியவை எழுத்தில் இல்லாத ஆனால், குறைந்தது மூன்று, நான்கு நூற்றாண்டுகளாகவாவது நடைமுறையில் இருந்து வளர்ந்த ஒரு சட்டமுறை இருந்திருக்கிறது. கி.பி 1620 இல் போத்துக்கீசர் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றித் தங்கள் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்த பின்னரும், அவர்கள், யாழ்ப்பாணத்தின் உள்ளூர் முதலிமார்கள் ஊடாகவே மக்களைக் கட்டுப்படுத்தி வந்தமையால் பழைய நடைமுறைகளே யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் பின்பற்றப்பட்டன.
[தொகு] ஒல்லாந்தர் ஆட்சியில் சட்டவாக்கல்
1658 இல் யாழ்ப்பாணம் போத்துக்கீசரிடமிருந்து ஒல்லாந்தர் கைக்கு மாறியது. எனினும், முன்போலவே, மரபு வழியான விடயங்கள் எல்லாவற்றிலும் பழைய நடைமுறைகளே, அதாவது வழமைகளே பின்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், யாழ்ப்பாண இராச்சியத்தின் குடிகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை எழுத்து மூலமாகத் தொகுக்கும் பொறுப்பு, அன்றைய டச்சு ஆளுனர் கோர்னெலிஸ் ஜோன் சைமன்ஸ் (Cornelis Joan Simons) என்பவரால் யாழ்ப்பாணத்தில் திசாவை (Dessave) பதவி வகித்த கிளாஸ் ஈசாக்ஸ் (Class Issaksz) என்பவருக்கு வழங்கப்பட்டது. அவர், யாழ்ப்பாணத்து முதலியார்கள் 12 பேரின் உதவியுடன் நாட்டின் வழமைகளைத் தொகுத்தார். இதுவே தேசவழமைச் சட்டம் எனப்படுகின்றது. ஜூன் 4, 1707 ஆம் ஆண்டில் ஒல்லாந்த அரசினால் யாழ்ப்பாணத்துக்கு உரிய சட்டமாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இச்சட்டம் டச்சு மொழியில் எழுதப்பட்டுத் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
[தொகு] முக்கிய அம்சங்கள்
கிளாஸ் ஈசாக்ஸ், இத் தொகுப்புக்காகத் தான் எழுதிய முன்னுரையில் இத் தொகுப்பு தொடர்பான பின்வரும் அம்சங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
- தொகுப்பில் அடங்கியவை யாழ்ப்பாண நாயன் பட்டினத்தில் நடந்து வருகிற வழமைகள் என்பது.
- இத் தேசத்தவரின் சென்மசுபாவமான வழமைகளின்படி நியாயத் தலங்களில் நீதி செலுத்தப்பட்டு வருகிறது என்பது.
ஒல்லாந்தர் உள்ளூர் பிரச்சினைகளில் ஈடுபடாமல் ஆதிக்க வகுப்பின் மூலம் ஆட்சியைக் கட்டுப்படுத்தும் தந்திரத்துக்குமையவே தேசவழமைச் சட்டத்தை அப்போதைய யாழ்ப்பாண ஆதிக்க வகுப்பின் ஆளுமைகளைக் கொண்டு தொகுத்தனர். அதுவரைக்கு தமிழர்கள் எழுதப்பட்ட சட்டம் எதனையும் யாழ்ப்பாணத்தில் பின்பற்றியதாக தெரியவில்லை.
"தேசவழமைச் சட்டத்தின்படி கூட்டு உரிமையாளர்கள், கூட்டு முதுசகத்தார்கள், அயல்காணி உரிமையாளர்கள், வட மாகாணத்தில் தம் காணியை ஈடு வைத்துள்ளவர்கள் விலைப்படும் காணியை வாங்குவதற்கு முதல் உரிமையாளராகின்றனர்".[1]
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] உசாத்துணை
- John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, Tellippalai, Ceylon, 1923, (2ம் பதிப்பு: 2003)
[தொகு] அடிக்குறிப்புகள்
- ↑ கீத பொன்கலன், ச., பௌத்த சிங்களவரும் சிறுபான்மையினரும், சென்னை, 1987