பூப்புனித நீராடு விழா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒரு பெண் குழந்தை பிறந்து வளர்ந்து பருவமடைந்து தாய்மைக்குத் தகுதி உடையவளாக மாறும் நாள் பூப்படைதல் என்று சொல்லப்படும். பெரும்பாலும் 9 வயது முதல் 12 வயதிற்குள் பூப்படைதல் பெண் குழந்தைக்கு ஏற்பட்ட பின்னரே பரி பூரணமான பெண்ணாக மதிக்கப்படுகிறாள்.
[தொகு] நீராட்டல்
பெண் பூப்படைந்தவுடன் முற்காலத்தில் கிணற்றடியில் காய்ந்த இலைகள் மேல் இருத்தி தாய் மாமன் தேங்காய் உடைக்க, மாமி தண்ணீர் ஊற்றி நீராட்டுவார்கள். கிணற்றடி பொது இடம் பெண்ணில் இருந்து வெளிப்படும் தீட்டு பிறர் கண்ணில் படாது குப்பைக்குள் மறைந்துவிடும் என்பதால் காய்ந்த இலைகளின் மேல் இருத்தி நீராட்டுவார்கள். இக்காலகட்டத்தில் பெண்ணை குளியலறையில் மாமியார் நீராட்டலாம். பின்பு பெண்ணிற்கு புதிய ஆடை அணிவித்து தாய்மாமனிடம் ஆசீர்வாதம் பெற்றபின் ஒரு தனியறையில் பெண்ணை விடவேண்டும். அவ்வறையில் வேப்பிலையையும் காம்புச் சத்தகம் முதலானவற்றை இருப்பிடத்தின் மேலே செருகிவிடுவார்கள். பெண் பூப்படைந்தபோது அணிந்திருந்த ஆடையினை குடும்பச் சலவைத் தொழிலாளிக்குக் கொடுப்பதே மரபாக உள்ளது. தீட்டுக் கழியும் வரை மாற்றுடுப்பு வழங்க வேண்டிய பொறுப்பும் அவரையே சார்ந்துள்ளது. அழுக்கடைந்த சேலையை கட்டாடியார் எடுத்துச் சென்று ஒரு பெண் பூப்படைந்துள்ளார் உறுதிப்படுத்துவார். அவ்வீட்டில் உள்ள அனைவருக்கும் முப்பந்தொன்று நாட்கள் துடக்காகையால் அதை நிவர்த்தி செய்வதற்கு அந்தணரை அழைத்து புண்ணியவாசம் செய்வர். முன்பு கிராமப் புறங்களில் பூப்பெய்தி 4ஆம் நாள் பசுப்பால் வைத்து நீராட்டித் துடக்ககைப் போக்குவார்கள்.
[தொகு] சாமர்த்தியச் சடங்கு
சடங்கு செய்வதற்கு சுபநாளில் ஒன்றைத் தெரிவு செய்து அன்று பருவமடைந்த பெண்ணின் இரண்டு கைகளிலும் ஒவ்வொரு வெற்றிலைக்குள் பாக்கும் சில்லறைக் காசும் வைத்து சுருட்டிக் கொடுத்து, தலையில் வெள்ளைத் துணியால் முகத்திரை இட்டு (அபசகுணங்களைப் பார்க்காமல் இருப்பதற்கு) மாமியார் பால் அறுகு வைக்கும் இடத்திற்கு அழைத்து வந்து, கிழக்கு அல்லது வடக்கு நோக்கி பார்க்கக்கூடியதாக பாயின் மேலோ அல்லது ஒரு பலகைக் குற்றியின் மேலோ ஒரு வெற்றைத் துண்டை இட்டு பருவமடைந்த பெண்ணை உட்கார வைக்கவேண்டும். அவளின் முன் நிறைகுடம், குத்து விளக்குகளும் ஒரு பாத்திரத்தில் பால், அறுகம் புல், சில்லைக் காசுகள் என்பனவும் வேறு ஒரு தட்டில் பழம், பாக்கு, வெற்றிலையும் ஒரு தேங்காயுடன் உடைப்பதற்கு கத்தியும் பாத்திரமும் வைக்கவேண்டும்.