புதுக்கோட்டை மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
|
தலைநகர் | புதுக்கோட்டை |
---|---|
பரப்பு | 4663 ச.கி.மீ |
மக்கள் தொகை | 14,52,269 (2001 கணக்கெடுப்பு) |
கடற்கரை நீளம் | 39 கி.மீ |
புதுக்கோட்டை (Pudukkottai), தமிழ் நாட்டிலுள்ள ஒரு மாவட்டமும் அதன் நலை நகரமும் ஆகும். ஜனவரி 14, 1974ல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுகை (புதுக்கோட்டையின் சுருக்கமான பெயர்) மாவட்டம் உருவாக்கப்பட்டது.
பொருளடக்கம் |
[தொகு] அமைவிடம்
புதுகை மாவட்டம் கிழக்கு நிலைக்கோட்டில் 78.25' மற்றும் 79.15'க்கு இடையேயும் வடக்கு நேர்க்கோட்டில் 9.50' மற்றும் 10.40'க்கு இடையேயும் அமைந்துள்ளது. புதுகை மாவட்டத்தின் வடக்கிலும் மேற்கிலும் திருச்சி மாவட்டமும், தெற்கில் சிவகங்கை மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், வட கிழக்கில் தஞ்சை மாவட்டமும் அமைந்துள்ளன. புதுகை, ஏறக்குறைய ஒரு கடற்கரை மாவட்டமாகும். மாவட்டத்தின் மேற்குப் பகுதி கீழ் கடற்கரைப் பகுதியைக் காட்டிலும் கடல் மட்டத்திலிருந்து சரிவாக 600 அடி உயரத்தில் உள்ளது. நிலப்பரப்பு ஏறத்தாழ சமமானதே, பொன்னமராவதி பகுதி மட்டும் சிறிது ஏற்றயிரக்கம் கொண்டதாக இருக்கும். அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள நார்த்தாமலை குன்றுகள் மற்றும் பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள பிரான்மலை தவிர்த்து பெரிய மலைகள் ஏதும் இம்மாவட்டத்தில் இல்லை.
[தொகு] வரலாறு
இம்மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள் பழங்காலம் தொட்டு இருந்து வருகின்றன. இம்மாவட்டத்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் காணப்படும் இடு நிலங்களிலிருந்து கிடைத்த ஆதாரங்கள் வைத்து, இங்கு வரலாற்றுப் பதிவுகளுக்கு முந்திய மனிதர்கள் (Pre-historic man) வாழ்ந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
தொல் பொருட்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுக் குறிப்புகள் செறிந்து காணப்படும் புதுக்கோட்டையின் பன்முக பாரம்பரியத்தை புரிந்து கொள்ள, புதுக்கோட்டையின் அரசியல் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியமாகிறது. புதுக்கோட்டையின் வரலாறு தென்னிந்திய வரலாற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கருதத்தக்கது. புதுக்கோட்டையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொல் மனிதக் குடியிருப்புகளின் எச்சங்களும் தென்னிந்தியாவில் காணக்கிடைக்கும் மிகப்பழமையான கல்வெட்டுக்களில் சிலவும் காணக்கிடைக்கின்றன. பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்கள், விஜய நகர ஆட்சியாளர்கள், மதுரை நாயக்கர்கள் மற்றும் ஹய்சாளர்கள் பல்வேறு கால கட்டங்களில் புதுக்கோட்டையை ஆண்டுள்ளனர். அவர்கள், புதுக்கோட்டையின் வர்த்தக, சமூக அமைப்புகளின் வளர்ச்சிக்கு உதவியதோடு, தனிச்சிறப்பு வாய்ந்த பல கோயில்களையும் நினைவுச்சின்னங்களையும் அங்கு கட்டினர்.
சங்க இலக்கியத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சில ஊர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஒலியமங்கலம் (திருமயம் வட்டம்), ஒல்லையூர் என்று புறநானூற்றில் குறிப்படப்பட்டுள்ளது. ஒலியமங்கலம், சங்கக் கவிஞர் ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தான் மற்றும் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் ஆகியோரின் பிறந்த இடமாக விளங்கியுள்ளது. அகநானூற்றிலும் ஒல்லையூர் குறிப்படப்பட்டுள்ளது. பாண்டியர் ஆட்சிக் காலத்தில் ஒல்லையூர் முக்கியமான நகரமாகத் திகழ்ந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
இன்னும் 4 ஊர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. அவையாவன: அகநானூறில் குறிப்பிடப்பட்டுள்ள அம்புக்கோவில் (பண்டைய அலும்பில்); ஆவூர்கிழார், ஆவூர் முலம்கிழார் ஆகிய புலவர்களின் ஊரான ஆவூர்; எரிச்சி (பண்டைய எரிச்சலூர்) - புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் உள்ள எரிச்சி கிராமம் (எனினும், அண்மைய ஆய்வுகளின்படி இவ்வூர் இலுப்பூர் அருகே இருப்பதாக கருதப்படுகிறது.) இவ்வூர் மடலன் மதுரைக் குமரனார் என்ற புலவரின் ஊராக இருக்கக்கூடும்; ஔவையாருடன் தொடர்புப்படுத்தி பார்க்கத்தக்க அவயப்பட்டியில் ஔவையார் சிறிது காலம் வாழ்ந்திருக்ககூடும்; பொன்னமராவதி அருகே உள்ள பரம்பு மலையில் (தற்பொழுது பிரான்மலை என்று அழைக்கப்படுகிறது) கடையேழு வள்ளல்களில் முதலாமவரான பாரியின் நிலமாகும். கபிலர், பாரியின் கீழ் அமைச்சராகப் பணியாற்றியவர். இங்கு, செந்தமிழ் கல்லூரி என்ற தமிழ் மொழிக்கான கல்லூரி ஒன்று அமைந்திருக்கிறது.
இம்மாவட்டம் சங்க காலத்தில் முதலாம் பாண்டியப் பேரரசின் கீழ் இருந்தாலும், மாவட்டத்தின் வடக்கு எல்லையை ஒட்டிய சில பகுதிகள் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தன. சில ஊர்களின் பெயர்களின் தொடக்கத்தில் காணப்படும் கிள்ளி, வளவன் ஆகிய சோழர்களின் பட்டங்களைக் கொண்டு இதனை அறியலாம்.
[தொகு] நிர்வாகம்
தற்பொழுது, இம்மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களும் குளத்தூர், இலுப்பூர், ஆலங்குடி, புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, திருமயம், அறந்தாங்கி, ஆவுடையார்கோயில் மற்றும் மணமேல்குடி ஆகிய வட்டங்களும் உள்ளன. இவற்றுள் 756 பெரிய வருவாய் கிராமங்களும் அடங்கும்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் நீர் வரத்து பெரும்பாலும் பருவ மழையை நம்பியே உள்ளது.
[தொகு] சுற்றுலாத் தலங்கள்
- குடுமியான்மலை
- சித்தன்னவாசல்
- கொடும்பாளூர்
- ஆவுடையார்கோயில்
- திருக்கோகர்ணம்
- ஆவூர்
- விராலிமலை
- திருமயம்
[தொகு] வெளி இணைப்புகள்
- புதுக்கோட்டை மாவட்ட அரசு அதிகாரப்பூர்வ இணையத்தளம்
- புதுக்கோட்டை மாவட்ட இணையச் சுற்றுலா
- புதுக்கோட்டையின் பொங்கல் கோலங்கள்
- புதுக்கோட்டையில் நவராத்திரிக் கொண்டாட்டம்
![]() |
தமிழ்நாடு
|
---|---|
தலைநகரம் | சென்னை |
மாவட்டங்கள் | ஈரோடு • கடலூர் • கரூர் • கன்னியாகுமரி •
காஞ்சிபுரம் • கிருஷ்ணகிரி • கோயம்புத்தூர் • சிவகங்கை • சென்னை • சேலம் • தஞ்சாவூர் • தர்மபுரி • திண்டுக்கல் • திருச்சிராப்பள்ளி • திருநெல்வேலி • திருவண்ணாமலை • திருவள்ளூர் • திருவாரூர் • தூத்துக்குடி • தேனி • நாகப்பட்டினம் • நாமக்கல் • நீலகிரி • புதுக்கோட்டை • பெரம்பலூர் • மதுரை • இராமநாதபுரம் • விருதுநகர் • விழுப்புரம் • வேலூர் |
முக்கிய நகரங்கள் | அம்பத்தூர் • ஆலந்தூர் • ஆவடி • ஈரோடு • கடலூர் • காஞ்சிபுரம் • கும்பகோணம் • கோயம்புத்தூர் • சென்னை • சேலம் • தஞ்சாவூர் • தாம்பரம் • திண்டுக்கல் • திருச்சிராப்பள்ளி • திருநெல்வேலி • திருப்பூர் • திருவண்ணாமலை • திருவொற்றியூர் • தூத்துக்குடி • நாகர்கோயில் • நெய்வேலி • பல்லாவரம் • புதுக்கோட்டை • மதுரை • இராஜபாளையம் • வேலூர் |