பரணர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பரணர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் கி.பி இரண்டாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வாழ்ந்தவர் எனக் கணிக்கப்படுகின்றது. இவர் பல மன்னர்களையும் குறுநில மன்னர்களையும் பாடியுள்ளார். இது அவர் தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்றுள்ளார் என்பதைக் காட்டுகிறது. சங்க நூல்களில் ஒன்றான பதிற்றுப் பத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பத்து இவர் சேரன் செங்குட்டுவன் மீது பாடிய பாடல்களாகும். கரிகால் சோழனின் போர் வெற்றிகள் பற்றியும் இவரது பாடல்களில் காணமுடிகின்றது.
உறையூரை ஆண்ட திட்டன் என்பவனைப் பற்றியும், பாலி நாட்டுத் தலைவனான உதியனைப் பற்றியும், கோசருடன் போரிட்டு வென்ற பொதியமலைக்குத் தலைவனான திதியன் என்பவனைப் பற்றியும் இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.