புரந்தரதாசர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புரந்தரதாசர் (1484 - 1564) கருநாடக இசையின் தந்தை எனப் போற்றப்படுபவர் ஆவார். இவர் ஆரம்ப இசைப் பயிற்சிக்கான ஸ்வராவளிகள், ஜண்டை வரிசைகள், அலங்காரங்கள், கீதங்கள் முதலியவற்றை இயற்றியவர். மாயாமாளவகெளளை என்னும் இராகம் தான் ஆரம்பப் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற ராகம் எனத் தேர்ந்தெடுத்தவரும் இவரே.
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
கன்னட மாநிலத்தில் புரந்தடகட எனும் ஊரில் வரதப்பா எனும் செல்வந்தருக்கு மகனாகப் பிறந்தார். இவர் இளமையில் சீனப்பா என்ற பெயராலும் பின்பு திம்மப்பா, திருமலையப்பா என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் பண்டரினநாதன் மீது பக்தி ஏற்பட்டதால் புரந்தரவிட்டலர் எனும் பெயரும் வழங்குதலாயிற்று. தம் பதினாறாம் வயதில் சரஸ்வதிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
தன் தகப்பனாரின் இரத்தின வியாபாரத்தையே தானும் தொடர்ந்து பெரும் செல்வம் ஈட்டி நவகோடி நாராயணன் என்னும் பெயருடன் விளங்கினார். இவர் தொடக்கத்தில் மிகவும் கருமியாகவும் பணமீட்டுவதிலேயே எண்ணமாகவும் இருந்தார். இப்படியிருந்த இவரை பக்தி வழிக்கு திருப்பியது ஒரு முக்கிய சம்பவமாகும். ஒரு சமயம் இவர் வயிற்று வலியால் அல்லலுற்றார். இதைப் போக்க யாராலும் முடியவில்லை. பண்டரிநாதன் மீது நம்பிக்கை வைத்து மூன்று முறை தீர்த்தயாத்திரை செய்தார். வயிற்று வலி நீங்கியது.
[தொகு] இசைப் பணி
இவர் 475000 கிருதிகளை செய்துள்ளதாக வாசுதேவ நாமாவளிய என்னும் உருப்படியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரின் உருப்படிகள் கன்னடத்திலும் வடமொழியிலும் உள்ளன. இவரின் உருப்படிகளை தாசர்வாள் பதங்கள் என்றும் தேவர் நாமாக்கள் என்றும் குறிப்பிடுவதுண்டு. இவரது முத்திரை புரந்தரவிட்டல என்பது ஆகும். இலகுவான மொழியில் உள்ள இவரின் உருப்படிகளின் நடை மிகவும் எளிது. இவர் கீர்த்தனைகளில் வேதங்கள், உபநிடதங்கள் முதலியவற்றின் சாரம்சத்தைக் காணலாம். மாஞ்சிபைரவி, மாரவி, வசந்தபைரவி, சியாமகல்யாணி போன்ற அபூர்வராகங்களிலும் இவர் உருப்படிகள் செய்துள்ளார்.