சுந்தரபெருமாள் கோவில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சுந்தரபெருமாள் கோவில் ஒரு வளர்ந்து வரும் கிராமம். கும்பகோணத்திலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் 9 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தக் கிராமத்தில் சோழர்கள் காலத்தில் கட்டபட்ட ஸ்ரீ செளந்தராஜ பெருமாள் சன்னதி உள்ளதால் முதலில் அடையாளத்துக்காக செளந்தராஜ பெருமாள் கோவில் என்று அழைக்கப்பட்டு அதுவே பின்னர் மருவி சுந்தரபெருமாள் கோவிலாக ஆகியிருக்க கூடும் என்றும் கருதப்படுகிறது. மேலும் இந்த ஊரின் உண்மையான பெயர் இதுவாக இருக்க முடியாது என்பதே உண்மை. சோழர்கள் ஆட்சிகாலத்தில் தலைநகராக இருந்த பழையாறை இந்த ஊரிலிருந்து தென் கிழக்கு திசையில் 8 கி.மீ தொலைவிலுள்ளது. இங்கு சுந்தரபெருமாள் கோவிலில் விவசாயம் முக்கிய தொழிலாகும். குறிப்பாக ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், முல்லை, சம்பங்கி, காக்கரட்டான் போன்ற மலர்கள் உற்பத்தி அதிகமாக காணப்படுகிறது. மேலும் நெல் உற்பத்தியும் கணிசமான அளவில் நடைபெறுகிறது. இந்த ஊரை சுற்றிலும் காவிரியின் கிளை ஆறுகளான குடமுருட்டி, திருமலைராஜன், சின்னாறு, அரசலாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகள் பாய்வதால் மிகவும் வளமாக காணப்படுகிறது. கோடைகாலத்தில் கூட தண்ணீர்ப் பஞ்சம் இருக்காத அளவுக்கு பசுமையான ஊராக உள்ளது.