யாழ்ப்பாணத்துச் சீதன முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

திருமணத்தின் போது மணப்பெண்ணின் வீட்டார் பெண்ணுக்குக் கொடுக்கும் பணம், பொருள் மற்றும் வேறுவகையான சொத்துக்கள் யாழ்ப்பாணத்தில் சீதனம் எனப்படுகின்றது. தற்காலத்தில், யாழ்ப்பாணத்துச் சீதன முறை மிகக் கடுமையானது என்று கருதப்படுகின்றது. சமுதாய நோக்குக் கொண்டவர்களாலும், [[பெண்ணுரிமைக் குழுக்களாலும் பெரிதும் கண்டிக்கப்படுகின்ற ஒரு வழமையாக இது நீடித்து வருகிறது. வேறு பல சமுதாயங்களில் காணப்படும், மாப்பிள்ளை வீட்டாருக்கு அல்லது மாப்பிள்ளைக்குப் பெண்வீட்டார் கொடுக்கும் மணக்கொடை அல்லது வரதட்சணையில் இருந்து இது சற்று வேறுபட்டது. யாழ்ப்பாணச் சீதன முறை, பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி இன்றுள்ள நிலைக்கு வந்துள்ளது. இதன் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கு, வரலாற்றைச் சற்றுத் திரும்பிப் பார்க்க வேண்டும்.

[தொகு] வரலாறு

யாழ்ப்பாணத்துச் சீதன முறையின் மிகப் பழைய நடைமுறைகள் பற்றி அறிந்து கொள்வதற்கான சான்றாக விளங்குவது, யாழ்ப்பாணத்துக்கு உரிய சட்டமான தேசவழமை ஆகும். தேசவழமைச் சட்டம் என்பது, ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்தில் தொகுக்கப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட, யாழ்ப்பாண அரசர் காலத்து நடைமுறைகளின் தொகுப்பு ஆகும். எனினும், இதன் தோற்றம் பற்றியோ, யாழ்ப்பாண அரசர் காலத்தில் இருந்த இதன் வடிவம் பற்றியோ சரியான தகவல்கள் கிடையா. இன்று நமக்குக் கிடைப்பதெல்லாம் ஒல்லாந்தரால் 17 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட சட்டமேயாகும்.