நாடி சோதிடம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நாடி சோதிடம் என்பது ஒருவருடைய கைரேகை, பிறந்த திகதி ஆகியனவற்றைக்கொண்டு, அவரைப்பற்றி ஏற்கனவே எழுதிவைக்கப்பட்டதாக கருதப்படும் ஏடுகளைக் கண்டுபிடித்து அதிலுள்ள அவர் தொடர்பான விடயங்களை வாசித்து விளக்கி கூறும் ஒரு கலையாகும்.
ஆண்களாயின் வலது கட்டைவிரல்(பெருவிரல்) கைரேகையும் பெண்களாயின் இடது கட்டைவிரற் கைரேகையும் பெறப்படுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] இச்சோதிட முறையைக் குறிக்கப் பயன்படும் சொற்கள்
- காண்டம் / காண்டம் பார்த்தல்
- நாடி வாக்கியம்
[தொகு] அகத்தியர் ஏடுகள்
இந்த ஏடுகளை அகத்தியர் என்று அறியப்படும் ஒருவர் அல்லது பலர் எழுதியிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.
ஒருவர் குறித்து இவ்வாறு எழுதிவைக்கப்படும் ஏடுகள் பல காண்டங்களாக அமைகின்றன. இவற்றில் 12 காண்டங்களும் 4 தனிக்காண்டங்களும் அடக்கம்.
- முதலாவது காண்டம் - வாழ்க்கையின் பொதுப்பலன்களை பொதுவாகக்கூறுவது.
- இரண்டாவது காண்டம் - குடும்பம், வாக்கு, கல்வி, தனம், நேத்திரம் முதலியவை பற்றி கூறுவது.
- மூன்றாவது காண்றம் - சகோதரர்கள் தொடர்பான விடயங்களை கூறுவது
- நான்காவது காண்டம் - தாய், மனை, நிலங்கள், வாகனம், வீடு முதலியவற்றையும் வாழ்க்கையில் அடையும் சுகங்கள் பற்றியும் கூறுவது.
- ஐந்தாவது காண்டம் - பிள்ளைகள் பற்றி கூறுவது
- ஆறாவது காண்டம் - வாழ்க்கையில் ஏற்படும் விரோதி, வியாதி, கடன் வழக்கௌ, எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் பற்றி கூறுவது.
- ஏழாவது காண்டம் - திருமணம் பற்றியும் வாழ்க்கைத்துணைவர் பற்றிய விபரங்களையும் கூறுவது.
- எட்டாவது காண்டம் - உயிர்வாழும் காலம், உயிராபத்துக்கள் பற்றி கூறுவது
- ஒன்பதாவது காண்டம் - தந்தை, செல்வம், யோகம், குரு பற்றி கூறுவது
- பத்தாவது காண்டம் - தொழில்பற்றி கூறுவது
- பதினோராவது காண்டம் - இலாபங்கள் தொடர்பாக கூறுவது
- பன்னிரண்டாவது காண்டம் - செலவு, அடுத்த பிறப்பு, மோட்சம் போன்றவை பற்றி கூறுவது.
- சாந்தி காண்டம் - ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், கர்மவினை போன்றவற்றுக்கான பரிகாரங்கள் பற்றி கூறுவது.
- தீட்சை காண்டம் - மந்திரம் யந்திரம் போன்றவை பற்றியது
- ஔஷத காண்டம் - மருத்துவம் பற்றி கூறுவது
- திசாபுத்தி காண்டம் - வாழ்க்கையில் நடக்கும் திசைகள்பற்றியும் அவற்றின் விளைவுகளையும் விபரங்களையும் கூறுவது
[தொகு] நாடி சோதிடம் குறித்த நம்பிக்கைகள்
ஒரு திறந்த அறிவாக, கல்விக்கூடங்களில் பரவலாக கற்பிக்கப்படும் ஒன்றாக இத்துறை காணப்படாததாலும் பொதுத்தளத்தில் இதுபற்றிய உரையாடல்கள் மிகக்குறைவாகவே இடம்பெறுவதாலும் நாடி சோதிடம் குறித்த தகவல்கள் வாய்ச்சொல் மூலமாகவும் ஊகங்கள் மூலமாகவுமே பெறப்படத்தக்கனவாக உள்ளன.
இவ்வாறாக பரவலாக இத்துறைகுறித்து காணப்படும் நம்பிக்கைகள் வருமாறு
- மனிதர்களின் வாழ்வும், வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகளும் முன்கூட்டியே எதிர்வுகூறப்படக்கூடியன. எல்லா மனிதர்களது வாழ்க்கையும் குறித்த ஏதோவோர் கோலத்தினடிப்படையில் அமைகின்றது.
- கலியுகத்தில் பிறக்கும் அத்தனை பேருக்குமான இத்தகைய ஏடுகள் அகத்தியரால் எழுதப்படுள்ளன.
- ஒவ்வொருவருக்கும் அவர்கள் எந்த திகதியில் குறிப்பாக இந்த ஏட்டினை படிக்க வருவார்கள் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருப்பதோடு. ஏடு படிக்க வரும் திகதி குறித்த தகவல்களும்கூட அகத்தியரால் அவ்வவர்களுக்கென குறிக்கப்பட்டுள்ளது.
- இவ்வேடுகள் யாவும் சிதம்பரத்தில் பூட்டிவைக்கப்பட்டிருந்தவை. சிதம்பரத்திலிருந்தே இவை பெறப்படுகின்றன.
[தொகு] நாடி சோதிடம் பார்ப்பவர்களால் வழங்கப்படும் தகவல்கள்
கைரேகைகளைக் கொண்டு குறித்த நபர்களுக்குரிய ஏடுகளை கண்டுபிடித்து அவற்றை படித்து விளக்கங்கூறும் பணியினை செய்வதற்கென பல இடங்களிலும் பலர் உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் தம்மை விளம்பரப்படுத்தி தொழில் செய்கின்றனர்.
இத்தகைய நாடி சோதிட பார்ப்பவர்கள், அவர்களிடம் சென்று கைரேகை கொடுத்து ஏடு பெற்றவர்களுக்கு அவ்வேடுகளை படித்து விளக்கம் கூறுகின்றனர். இவ்வாறான விளக்கங்களில் இருக்கும் பொதுத்தன்மைகள் கீழே பட்டியலிடப்படுகின்றன.
- வயது, பெயர் , பெற்றோர்பெயர், தொழில் போன்றன அச்சொட்டாக கூறப்படுதல்
[தொகு] நாடி சோதிடம் குறித்த எதிர்நிலை கருத்துக்கள்
நாடி சோதிடம் ஒரு மூட நம்பிக்கையாகவே ஒரு பிரிவினரால் நோக்கப்படுகின்றது. நாடி சோதிடத்தினை விஞ்ஞான முறையாக, தர்க்க றிவியல் கோட்பாட்டு ரீதியில் விளக்க முடியாமையினை இப்பிரிவினர் தமது கருத்துக்களுக்கு அடிப்படையாக கொள்கின்றனர்.
மாய வித்தைக் கலைகள் போன்று ஒரு பொழுதுபோக்காகவோ அல்லது psuedo ஈடுபாடகவே இதைக் கருதலாம் என்ற கருத்தும் உண்டு.
மனவோட்டப் படிப்பின் மூலம் முன்னாலுள்ளவரிடம் சில கேள்விகளை கேட்டு அவர்கள் மனவோட்டத்தினை படித்து அதன்மூலம் பெயர், பெற்றோர் பெயர் தொழில் போன்றன அச்சொட்டாக கூறப்படுகிறது என்ற விளக்கமும் சிலரிடம் உண்டு
[தொகு] நாடி சோதிடம் குறித்த சார்புநிலைக் கருத்துக்கள்
இயற்கைப்பொருட்கள் தொடக்கம் பிரபஞ்ச இயக்கம் வரைக்கும் ஒவ்வொன்றிலும், எல்லாவற்றிலும், ஒட்டுமொத்தமாகவும் ஒரு கோலம் இருக்கிறது என்ற அடிப்படையில், மனித வாழ்க்கை குறித்த ஒரு கோலத்தினடிப்படியைல் நிகழ்வதாகக்கொண்டு, அதனை முன்கூட்டியே உய்த்தறியலாம் என்ற வாதம் இக்கலைக்கு சார்பாக முன்வைக்கப்படுகிறது.
தர்க்க முறை அறிவியலின் போதாமைகள் குறித்து விமர்சிக்கும் சில கருத்துமுதல்வாதிகளும், அறிவியலாளர்களும் தர்க்கம் தாண்டிய விஞ்ஞானமுறைகளூடாக இதனை நிரூபிக்கலாம் எனக் கருதுகிறார்கள்.