ஈழத்து இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இலங்கையிலிருந்து வெளிவந்த தமிழ் இலக்கியங்கள் இலங்கையின் பண்டைய காலத்துத் தமிழ்ப் பெயரான ஈழம் என்னும் பெயரால் ஈழத்து இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.

[தொகு] ஈழத்து இலக்கிய வரலாறு

பழங்காலம் முதற்கொண்டே இலங்கை தமிழ் இலக்கியத்துக்குப்பல பங்களிப்புகளை வழங்கியுள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் புலவர் பலர் வாழ்ந்து தமிழ் நூல்கள் பல இயற்றித் தந்துள்ளனர். இருபது நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈழத்துப் பூதன் தேவனார் என்ற புலவர் அந்த நாட்டினராய்த் தமிழ் வளர்த்திருக்கிறார். அவர் இயற்றிய ஏழு பாட்டுகள் சங்க இலக்கியத்துள் சேர்ந்துள்ளன.

வடமொழி காளிதாசரின் காப்பியத்தின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் இயற்றப்பட்டுள்ள இரகுவம்சம் என்ற காப்பியம் இலங்கையில் இருந்த புலவராகிய அரசகேசரி என்பரால் (பதினாறாம் நூற்றாண்டில்) இயற்றப்பட்டதாகும். ஈராயிரத்து நானூறு செய்யுள் கொண்ட காப்பியம் அது.

தமிழ்நாட்டில் தலபுராணங்கள் பல எழுந்த காலத்தில் இலங்கையிலும் அத்தகைய புராணங்கள் பல இயற்றப்பட்டன. தமிழ்நாட்டில் கோவை, உலா, கலம்பகம், சதகம், தூது, அந்தாதி முதலான நூல் வகைகள் பெருகிய காலத்தில் இலங்கையிலும் அவ்வகையான நூல்கள் படைக்கப்பட்டன. தக்கிண கைலாச புராணம், கோணாசல புராணம், புலியூர்ப் புராணம், சிதம்பர சபாநாத புராணம் முதலியன இயற்றப்பட்டன. சிவராத்திரிப் புராணம், ஏகாதசிப் புராணம் என்பனவும் அங்குப் பிறந்தவைகளே. சூது புராணம், வலைவீசு புராணம் என்பன புதுமையானவை. கனகி புராணம் என்பது ஒரு தாசியின் வாழ்வு பற்றியது.

கிருஸ்துவச் சமயச் சார்பான தமிழ் நூல்களும் இலங்கையில் இயற்றப்பட்டன. முருகேச பண்டிதர் நீதி நூல் முதலிய சிலவகை நூல்களை இயற்றினார். சிவசம்புப் புலவர் என்ற ஒருவர் செய்யுள் நூல்கள் அறுபது இயற்றினார். ஊஞ்சலாடுதல் பற்றிப் பாடும் ஊஞ்சல் நூல்கள் பல இலங்கையில் இயற்றப்பட்டன.

நவாலியூர்ச் சோமசுந்தரப் புலவர் ஏறக்குறையப் பதினைந்தாயிரம் செய்யுள் இயற்றியுள்ளார். ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம் முதலியவற்றைச் சுவையான முறையில் எளிய தமிழில் அவர் பாடியுள்ளார். அவ்வாறு பலவகைப் பக்திப் பாடல்களை அவர் இயற்றிப் புகழ் கொண்டார். கதிர்காமம் என்னும் தலத்து முருகக் கடவுளைப் பாடியுள்ள அவருடைய பாடல்களை இன்னும் மக்களை போற்றி வருகிறார்கள்.

[தொகு] ஈழத்து இலக்கியங்களை வகைப்படுத்தல்

நிலப்பிரிப்பு அமைவிடம் சார்ந்து இலக்கியங்களை வகைப்படுத்தும் போது இலங்கையிலிருந்து வெளிவந்த தமிழ் இலக்கியங்கள் இலங்கையின் பண்டைய காலத்துத் தமிழ்ப் பெயரான ஈழம் என்னும் பெயரால் ஈழத்து இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.

ஈழத்து இலக்கியமானது இனக்குழுக்கள் வதிவிடங்களின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாகப் பாகுபடுத்தப் படக்கூடியது.

இனக்குழும அடிப்படையில் முஸ்லீம் மக்களின் பேச்சு/ எழுத்து மொழி தமிழாக இருப்பினும் தங்களை தனித் தேசிய இனமாக அடையாளப்படுத்திக் கொள்வதால் ஈழத்து முஸ்லீம் இலக்கியம் ஈழத்து இலக்கியத்தின் பெரும் பிரிவுகளில் ஒன்றாக அமையும்.

நிலவியல் சார்ந்து வடக்கு, கிழக்கு, மேற்கு, மலையகம் என்றவாறான பிரிப்புகளை மேற்கொள்ளலாம். எனினும் வடக்கு, கிழக்கு, மேற்கிலிருந்து வெளிவரும் இலக்கியங்கள் மலையக இலக்கியம் போன்று தெளிவான நிலவியல் அடையாளத்தைக் கொண்டிருப்பதில்லை என்பதும் கவனிக்கத் தக்கது. வெளிப்பாட்டு மொழி சார்ந்தும் கலாச்சாரப் பின்புலங்கள் சார்ந்துமே வேறுபாடுகளைக் காணலாம்.

இதைத்தவிர விடுதலைப்போராட்டத்தை அடியொற்றி எழுந்த ஈழப் போராட்ட இலக்கியம், சாதி ஒழிப்புப்போராட்டத்தை அடியொற்றி எழுந்த பஞ்சமர் இலக்கியம் என்பனவும் தங்களளவில் சில சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளன.

இலங்கை இனப்பிரச்சனை காரணமாக பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்களிருந்து வெளிப்படும் இலக்கியம் ஈழப் புலம்பெயர் இலக்கியம் இதே வெளிப்பாட்டு மொழி,கலாச்சாரப் பின்ன்ணணியில் ஈழத்து இலக்கியமாகவே அழைக்கப்படுகின்றது.

காலப்போக்கில் புலம்பெயர் நாட்டின் கலாச்சாரத் தாக்கங்கள் காரணமாக இவ்வாறான இலக்கியங்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள் என்பதிலிருந்து அந்தந்த நாட்டுத் தமிழிலக்கியங்களாக பரிணமிக்கலாம். உதாரணமாக மலேசியத் தமிழ் இலக்கியம், சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

[தொகு] வெளி இணைப்புகள்