வீரமாமுனிவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கான்ஸ்டன்டைன் ஜோசேப் பெஸ்கி (Father Constantine Joesph Beschi) என்னும் இயற்பெயர் கொண்ட வீரமாமுனிவர், (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1847) இத்தாலி நாட்டிலுள்ள காஸ்திகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் ஜேசுசபையைச் சேர்ந்த ஒரு பாதிரியார் ஆவார். கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார். மதம் பரப்பும் முயற்சிக்காகத் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு சிறப்பான பணிகளை ஆற்றியுள்ளார்.

இவர் காவியம், பிரபந்தம், உரைநடை அகராதி, இலக்கணம், மொழிபெயர்ப்பு என்று பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். சதுரகராதி கொண்டு நிகண்டுக்கு ஒரு மாற்றைக் கொண்டு வந்தவர். தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.

கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும் இரட்டை வழக்கு மொழியான தமிழில் பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே எனல் வேண்டும். கிருத்துவம் தமிழ் மொழிக்குச் செய்த சிறந்த சேவைகளில் ஒன்றாக அமைந்தது இந்த நூல் என்றால் மிகையாகாது.

திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குரு கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர். இதில் பரமார்த்த குரு கதையானது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.

திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள். காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். இவருடைய வருணணைத் திறனுக்குக் கீழ்க்காணும் பாடல் சாட்சியாகிறது.

பயனினால் மறைநூல் ஒக்கும் பகலினை மணியால் ஒக்கும்

வியனினால் உலகம் ஒக்கும் வேலியால் கன்னி ஒக்கும்

முயலினால் அலையை ஒக்கும் முனினி ஒன்னாக் கொக்கும்

நகரினை ஒக்கும் வீடே