செயின்ட் லூசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

செயிண்ட் லூஸியா (Saint Lucia) பசுமையான கரீபியத் தீவு. சுற்றுலா செல்வதற்கேற்ற பயணிகள் தங்குமிடங்கள் நிறைந்த தீவு நாடு. ஏராளமான சுற்றுலா நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து சுற்றுலாக் குழுக்களை அழைத்து வருகின்றன. ஆனாலும் இந்தத் தீவின் பெரும்பகுதி அதன் இயல்பு கெடாமல் கிராமியத்தனமாகவே இருக்கிறது. இதன் தெற்குப் பகுதி இரண்டு எரிமலை முகடுகளுடன் கம்பீரத் தோற்றம் தருகிறது. இந்த எரிமலைகள் கடைசியாக வெடித்தது 1766ல். வெறும் 44கி.மீ. X 23கி.மீ. அளவே கொண்ட இந்த தீவிற்கு இரண்டு விமான தளங்கள் உள்ளன. இங்கிருந்து போர்டோ ரிகோ, மியாமி, நியூயார்க், டொரோண்டோ, லண்டன் ஆகிய இடங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. அருகிலுள்ள கரீபியத் தீவு நாடுகளுக்கும் விமான சேவைகள் உண்டு. தலைநகர் கஸ்ட்ரீஸிலிருந்து மார்டீனிக்கில் உள்ள போர்ட்-டீ-பிரான்ஸ்க்கு படகு சேவை உண்டு. சொந்தப் படகில் பயனிப்பவர்கள் நான்கு சிறு துறைமுகங்களில் இறங்கலாம். கப்பல்கள் கஸ்ட்ரீஸ் துறைமுகத்தில் மட்டும் நிற்கும்.


[தொகு] வரலாறு

அகழ்வாராய்ச்சியில் ஆரவாக் இனத்தவர்கள் இங்கு கி.மு. 1000 - 500 வாக்கில் குடியமர்ந்தார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.பி. 800களில் இடம் பெயர்ந்த கரீபியர்கள், ஆரவாக் இனத்தவர்களை வென்று இங்கு குடியேறினார்கள்.


கொலம்பஸ் புது உலகில் சென்ற நான்கு பயணங்களின் பாதையை விட்டு செயிண்ட் லூஸியா மிகவும் விலகி இருக்கிறது. அநேகமாக ஸ்பானிஷ் நாட்டுக்காரர்களால் கி.பி. 1500 வாக்கில் இத்தீவை முதலில் கண்டறிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 1605ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் முதல் குடியேற்றம் கரீபியர்களால் விரட்டியடிக்கப்பட்டது. மீண்டும் 1638ல் செயிண்ட் கிட்ஸ் தீவிலிருந்து ஆங்கிலேய காலனிக்காரர்கள் இங்கு குடியேற முயற்சித்தார்கள். அந்தக் குடியேற்ற வாசிகள் பெரும்பாலும் கொல்லப்படவே இரண்டு ஆண்டுகளில் அந்த முயற்சியும் கைவிடப்பட்டது.


ஆங்கிலேயர்கள் சென்றபின், ப்ரெஞ்சுக்காரர்கள் குடியேறி கரீபியர்களுடன் ஒப்பந்தம் செய்ய முயன்றார்கள். அவர்கள் 1746ம் ஆண்டு 'சௌஃப்ரியர்' எனும் தீவின் முதல் நகரத்தை நிர்மாணித்து, பிளான்டேஷன் தோட்டங்களை உருவாக்கினார்கள். 1778ல் பிரிட்டிஷ் படைகள் தீவை வென்று குரோஸ் எனும் சிறு தீவில் கடற்படை தளம் அமைத்தது. இது வடக்கே உள்ள ப்ரெஞ்சுத் தீவுகள் மீது போர் தொடுக்க பயன்படுத்தப்பட்டது. ப்ரெஞ்சுக்காரர்களிடமும் ஆங்கிலேயர்களிடமும் செயிண்ட் லூஸியா பலமுறை கைமாறிய பின் 1814ல் பாரீஸ் ஒப்பந்தம் மூலம் பிரிட்டிஷ் வசம் வந்தது. இடைப்பட்ட 150 வருடங்களில் 14 முறை செயிண்ட் லூஸியா கைமாறியிருந்தது.


பிரிட்டிஷ் வசம் வந்தாலும் ப்ரெஞ்சு பழக்கவழக்கங்களே இன்றும் தொடர்கின்றன. 1842ல் தான் ப்ரெஞ்சு மொழிக்குப் பதிலாக ஆங்கிலம் அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டது. இங்கு ப்ரெஞ்சு சார்ந்த படோயிஸ் (Patois) என்ற மொழியே பரவலாக பேசப்படுகிறது. 1967ல் தன்னாட்சியும், பின்னர் 1979ல் பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளின் ஒரு உறுப்பினராக முழு சுதந்திரமும் பெற்றது.


சுதந்திரம் பெற்றது முதல் சுற்றுலா முக்கியத்துவம் பெற்று நாட்டின் வருவாய்க்கு முக்கிய தொழிலாக இருக்கிறது.