பயனர்:செ.சுந்தரேஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அடிப்படை அரங்க வடிவமைப்பு மூலகங்கள்.

அரங்கானது கட்புல, செவிப்புலத் தொடர்பாடல் மூலகங்களைக் தன்னகத்தே கொண்ட ஒரு கலை வடிவமாகும். இவ் வகையில் அரங்கின் காண்பியங்களும், கேட்பியங்களும் நாடகத்திற்குரிய பல்வேறு வியாக்கியானங்களை மேற்கொள்கின்றன. எனவே அரங்கில் இத்தகைய மூலகங்களுடன் உறவாடும் நெறியாளரும், விதானிப்பாளர்களும் தமது வெற்றிகரமான படைப்பாக்கத்திற்கு அடிப்படை அரங்க வடிவமைப்பு மூலகங்களினைப் பற்றிய அறி;தல் அவசியமானதாகும். ஏனெனில் அரங்க வடிவமைப்பு மூலகங்களினைப் பிரயோகிப்பதில் உள்ள பலம், பலவீனம் என்பவை ஆற்றுகையின் தொடர்பாடல் பெறுமானத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றன.

இவ் வகையில் இக் கட்டுரையானது காண்பியம் சார் அரங்க வடிவமைப்பு மூலகங்களைப் பற்றிச் சுருக்கமாக நோக்குகின்றது.

அரங்கக் காண்பியங்கள் எனும் போது அரங்கில் கட்புலனாகின்ற அனைத்து விடயங்களினையும் உள்ளடக்குவதாக இருக்கும். அரங்கின் முதலாம் பட்ச மூலகமான நடிகனும், அவன் தாங்கி நிற்கும் சாதனங்களான ஒப்பனை, வேட முகம், வேட உடை, கைப்பொருட்கள் என்பனவும் நடிகனுக்கு துணை செய்யும் ஏனைய சாதனங்களான, ஆற்றுகை வெளி, அமைப்பு விதானிப்பு, ஒளி விதானிப்பு, போன்றனவற்றையும் அரங்கக் காண்பியங்களாகக் குறிப்பிடலாம்.

கோடுகள், வடிவங்கள், வர்ணங்கள், இழைமானம், செறிவு, கனவளவு, என்பன காண்பியம் சார் தொடர்பாடலோடு சம்பந்தப்பட்டவை ஆகும். இவற்றையே நாம் அரங்க வடிவமைப்புக் கூறுகளாகக் குறிப்பிடுகின்றோம். அரங்கில் இவை தனித்தும், இணைந்தும் செயலாற்றுகின்றன.

“நாடகக் காப்பியத்துள் மனிதர்கள், நிகழ்வுகள், சொற்கள் என்பவை அதன் கூறுகளாயினும் இவை கோடு, நிறம், இழைத்தன்மை என்பவற்றை உள்ளீடாகக் கொண்டுள்ளன. நிகழ்வுக்கலைகளில் கலைஞனின் தனிநிலையான உடல் நிலைகள், உடலியக்கம், குரல் ஆகியவற்றுள்ளும் புறநிலைப் பொருட்களான காட்சியமைப்பு, ஒப்பனை, ஆடையணி, ஒலி, ஒளி, இசை ஆகியவற்றுள்ளும் இத்தனிமங்கள் உள்ளோட்டமாக இடம் பெற்றுள்ளன. தனிமங்களின் தனித் தன்மைகளை உணர்ந்து அவைகளைக் கலையாக்கத்தற்குப் பயன்படுத்துவது இன்றியமையாததாகும்.” எனப் பேராசிரியர் சே.இராமானுஜம் அவர்கள் கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கோடுகள்

அரங்கில் கோடுகளின் பயன்பாடானது முக்கியமாக விளங்குகின்றன. நடிகனாலானாலும் சரி அல்லது அரங்கில் கட்புலனாகின்ற பொருட்களானாலும் சரி கோடுகளினைக் கொண்டே அர்த்தம் பெறுகின்றன. நடிகன் புறவயமாக மேற்கொள்கின்ற அசைவியக்கம் வெளியில் கோடுகளினாலேயே உருவாக்கப்படுகின்றன. ஓர் அசைவில் அவன் எண்ணற்ற கோடுகளினை உருவாக்குகின்றான். இக் கோடுகளின் திசை, வேகம் என்பவற்றின் ஊடாக அவனது உணர்வுகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

கோடுகளினை அதன் போக்குகளினைக் கொண்டு வகைப்படுத்திப் பார்க்கலாம். அவை

1. நேர்கோடு 2. வளைகோடு 3. முறிகோடு

என்பனவாகும். மேலும் நேர்கோட்டினை அதன் போக்கினைக்கொண்டு

1. கிடைக்கோடு 2. நிலைக்குத்துக்கோடு 3. சாய்கோடு

என வகுத்துக் குறிப்பிடலாம். இக் கோடுகள் ஒவ்வொன்றும் அதன் பருமன், மெலிவு, வன்மை, மென்மை என்னும் தன்மையினையும் கொண்டிருக்கும். அரங்கில் இவை தனியாகவும், இணைந்தும் செயலாற்றி பல்வேறு உள்ளார்ந்த கருத்துக்களினை வெளிப்படுத்கின்றன. ஒரு வகையில் இவை குறியீடுகளாகச் கூடச் செயற்படுகின்றன. ஊதாரணமாக கிடைக்கோடு மண்ணையும், உறுதியினையும், நிலைக்குத்துக்கோடு விண்ணையும், எழிற்சியினையும், சாய்கோடு திடமற்ற தன்மையினையும், வளைகோடு நீரையும், குழப்பத்தினையும். முறிகோடுகள் முரனை வெளிப்படுத்துவனவாகவும் இருக்கும்.

ஒன்றுக்குமேற்பட்;ட தன்மைகளினைக் கொண்ட கோடுகளினை அரங்கில் பயன்படுத்துகின்றபோது அவற்றில் எந்த கோட்டின் இயல்புகள் அதிகமாகக் காணப்படுகிறனவோ அதுவே அக் குறிப்பிட்ட காட்சியின்; முதன்மை உணர்வாக இருக்கும். இத்தகைய உத்திகளினைக்கொண்டே அரங்க விதானிப்பாளர்கள் தாம் சொல்லவரும் செய்தியைக் காண்பிய விளைவில் இலகுவாக பார்வையாளர்களுக்கு வழங்கிவிடுகின்றனர். இவ்வகையில் கோடுகள் ஊடாக உணர்;வு, மனநிலை, விளைவு என்பன வெளிப்படுத்தப்படுகின்றன. அரங்கிற் சில சமயம் பெரியளவிலான காட்சிகளினை விட சில கோடுகளே ஆழமான கருத்தினை வெளிப்படுத்தப் போதுமானவையாக இருக்கும்.

வடிவம்

கோடுகளில் இருந்தே வடிவங்கள் உருவாக்குகின்றன. ஒரு வளை கோட்டின் ஒரு முனையானது மையப் புள்ளியில் இருந்து சமமான விட்டத்தில் மறுமுனையுடன் இணைகின்றபோது வட்டம் உருவாகுகின்றது. இது தவிர மூன்று நேர் கோட்டினைக்கொண்டு முக்கோணத்தினை உருவாக்க முடியும். சில சமயம் வேறு வகையான கோடுகள் ஒன்றினைந்தும் வடிவங்களினை உருவாக்குகின்றன.

வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம் என்பவை கோடுகளினால் உருவாக்கப்படுகின்ற அடிப்படை வடிவங்களாகும். இத்தகைய வடிவங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து கூம்பகம், உருளை, கோளம், ஐங்கோணம், அறுகோணம், எண்கோணம் எனப் பல்வேறு சாயல்களினை (ளாயி) உருவாக்குகின்றன.

அரங்கில் தோன்றுகின்ற நடிகனுடைய முகத்தின் சாயல், உடல்வாகு தொடக்கம் கட்புலனாகின்ற அனைத்து விடயங்களிலும் கோடுகளின் ஆளுகை பிரதிபலிப்பதனைக் காணலாம். அரங்கில் மட்டுமன்றி இயற்கையில் காணக்கிடைக்கின்ற அனைத்து வடிவங்களும்; இதன் பாற்பட்டதே ஆகும். அமைப்பு விதானிப்பு, வேட உடை, ஒப்பனை, கைப்பொருட்கள், வேடமுகம் போன்றவற்றில் இத்தகைய சாயல்களுடைய விஸ்தார நிலையினையும், படைப்பாக்கத் தன்மையினையும் காணமுடியும்.

அடிப்படையில் இவ் வடிவங்கள் இருபரிமான (நீளம், உயரம்),முப்பரிமானத் (நீளம், உயரம், ஆழம்) தன்மையை உடையவையாகும். அதாவது இருபரிமானத் தளத்தில் இருந்து கனவளவு, செறிவு என்பவை முப்பரிமான இயல்பை ஏற்படுத்துகின்றனை. “ஸ்பொசல்”; நாடக மரபில் இருபரிமான காட்சித் திரையில் முப்பரிமான காட்சி வரைபுகளினைக் கொண்டு அமைப்பு விதானிப்பினை மேற்கொண்டிருந்தமையையும் காண முடிகின்றது.

கோடுகளில் இருந்து உருவாகும் வடிவங்களும் கோடுகளினைப்போன்று உணர்வுகளினை வெளிப்படுத்தும் இயல்பு கொண்டவையாகும். இவை கோடுகளின் நீட்சியாகவே கருத்துப்புலப்பாட்டினைக் கொண்டிருக்கும். ஊதாரணமாக மேடைச் சம தளத்திலிருந்து செங்குத்தாக நீண்டு உயர்ந்திருக்கும் பொருட்கள் அதிகாரத்தினையோ அல்லது எழிற்சியினையோ வெளிப்படுத்தி நிற்க மேடைச் சம தளத்திற்கு சமாந்தரமான பொருட்கள் உறுதியினையோ அல்லது ஆழ்ந்த அமைதியினையோ வெளிப்படுத்தும். சாய்வாக உள்ள பொருட்கள் உறுதியற்ற அல்லது அந்தரத்தன்மையை வெளிப்படுத்த, முறிகோடுகள் சக்தியினையும் (மின்னல்) மோதலினைம், வளைகோடுகள் நெகிழ்வினையோ அல்லது முடிவற்ற தன்மையினையோ (வட்டம்) வெளிப்படுத்துவதாக அமையும்.

இவ் வகையில் அரங்க காண்பிய விதானிப்பு மூலக்கூறுகளில் வடிவங்களினுடான வியாக்கியானிப்பு என்பது நாடக வெளிப்பாட்டில் முக்கிய இடம்பெறுவதனை நடைமுறையிலும் காணலாம்.

வர்ணங்கள்

காண்பியத் தொடர்பாடலில் வர்ணங்களின் பங்கும் முக்கியமானதாகும். கருத்துக்களினை வெளிப்படுத்துவதற்கு வர்ணங்கள் பல்வேறு பங்காற்றுகின்றன. வர்ணங்களுடைய அர்த்தப்பாடானது பண்பாட்டிற்கு பண்பாடு வேறுபட்டதாகும். எனவே குறிப்பிட்ட சூழலில் எத்தகைய வர்ணம் பயன்படுத்தப்படுகின்றதோ அதனைக் கொண்டே அதன் பொருளினைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். உதாரணமாக மஞ்சள் வர்ணமானது இந்துக்களின் பண்பாட்டில் மங்கலகரத்தையும் சீனப் பண்பாட்டில் பொறாமையினைக் குறிப்பதாகவும் அமையும். கிறிஸ்தவப் பண்பாட்டில் மணப்பெண்னிற்கு வெள்ளை நிற ஆடையினைப் பயன்படுத்துவர் ஆனால் இந்துக்களிற்கோ வெள்ளுடையானது தூய்மைக்கும், விதைவைகளுக்கும் உரியதாகக் காணப்படுகின்றன.

வர்ணங்களினை முதன்மை வர்ணம், துணைவர்ணம்….எனப் பல்வேறு வகையாக வகைப்படுத்துவர். வர்ணக் கலவையில் பொருள்களிற்கான கலவைக்கும், ஒளியமைப்புக்கான வர்ணக் கலைவைக்கும் இடையில் வேறுபாடு உண்டு. ஒளியைப் பொறுத்தவரை சிவப்பு, நீலம், பச்சை என்பவை அடிப்படை வர்ணங்களாகக் காணப்பட, பொருள்களினைப்பொறுத்தவரை சிவப்பு, நீலம், மஞ்சல் (pபைஅநவெ உழடழரச) என்பவை அடிப்படை வர்ணங்களாகக் காணப்படுகின்றன.

துணைநிலை வர்ணம் என்பது இரு அடிப்படை வர்ணங்களின் சேர்க்கையினால் உருவாகுபனவாகும். சிவப்பும், மஞ்சலும் இணைந்து செம்மஞ்சலினையும், நீலமும், மஞ்சலும் இணைந்து பச்சையினையும், சிவப்பும், நீலமும் இணைந்து கபிலநிறத்தினையும் உருவாக்குகின்றன.

வர்ணக் கலவையில் கறுப்பு, வெள்ளை ஆகியவற்றினை வர்ணங்களாகக் குறிப்பிடப்படுவதில்லை. இவற்றை நடுநிலை சார்ததாகக் குறிப்பிடுவர். இவை ஏனைய வர்ணங்களுடன் சேர்கின்றபோது அவற்றின் செறிவினைக் கூட்டுவதாகவே அல்லது குறைப்பதாகவோ அமைகின்றன.

பிரகாசம், மங்கல் எனும் கதிர்வீச்சுநிலையும், செறிவு, நீர்மை எனும் பொறுமான (எயடரந ழக ய உழடழரச) நிலையும் வர்ணங்களில் காணப்படுவதால் இவை எண்ணற்ற வர்ணங்கள் தோன்றுவதற்கு காரணமாக உள்ளன.

வர்ணங்கள் கண்களைத் தாக்கும் தன்மையைக் கொண்டு அவற்றை வெப்பு வர்ணம், குளிர் வர்ணம் என வகைப்படுத்துவர். சிவப்பு, மஞ்சள், செம்மஞ்சல் ஆகியவை வெப்பு வர்ணங்களாகவும், பச்சை, நீலம் போன்றவை குளிர் வர்ணங்களாகவும் காணப்படுகின்றன. அரங்கின் ஒரு கோட்டில் (டiநெ) குளிர் வர்ணத்தையும், வெப்புவர்ணத்தையும் பயன்படுத்தி இருப்போமானால் வெப்பு வர்ணத்தையுடைய பொருட்கள் முன்னே இருப்பது போன்ற தோற்றத்தையும் குளிர் வர்ணத்தை உடைய பொருட்கள் பின்னே இருப்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும்.

இத்தகைய நிலையினைக் கவனத்திற்;கொண்டே வேடை உடை, ஒப்பனை, அமைப்பு விதானிப்பு, ஒளிவிதானிப்பு என்பவற்றின் ஊடாக அரங்கில் வியாக்கியானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

வர்ணங்கள் மனநிலை, உணர்வுகளுடன் தொடர்பு கொண்டவையாகும். முன்னர் குறிப்பிட்டது போன்று அவை பண்பாட்டின் அடியாக நின்று செயலப்;படுகின்றன. எமது கூத்து அரங்கிலும், இந்தியாவின் கதகளி, தெருக்கூத்து, யக்ஷகானம், மற்றும் சீன, யப்பானிய பாரம்பரிய அரங்குகளிலும் பாத்திரங்களுக்கான வர்ணத் தெரிவுக்கும் அவற்றின் குணஇயல்புகளுக்கும் இடையில் தொடர்பு இருப்பதனைக் காணமுடிகின்றன. இவ் வகையில் வர்ணங்களானது குறியீட்டுத் தன்மை கொண்டு பண்பாட்டின் அடியாக வியாக்கியானங்களினை மேற்கொள்கின்றமையைப் புரிந்து கொள்ளலாம்.

இழைமானம்

அடிப்படை அரங்க வடிவமைப்பு கூறுகளில் இழைமானமும் முக்கியமானதாகும். இழைமானம் என்பது அடிப்படையில் தொடுபரப்புடன் தொடர்புடையதாகும். எனினும் அது ஒளி, ஒலி என்பவற்றுடனும் தொடர்புகொண்டதாகவும் விளங்குகின்றது.

தொடுபரப்புடன் கூடிய இழைமானத்தினை வன்மை, மென்மை என இருவகைப்படுத்துவர். அதே வேளை இவ் இரண்டிற்கும் இடையில் எண்ணற்ற நிலைகளும் காணப்படுகின்றன.

இழைமானம் தொடுபரப்புடன் தொடர்புடையதாக இருப்பினும் அவற்றை பார்வைப்புலனுடாகவும் உணர்ந்து கொள்ள முடிகின்றது. பார்வையாளர் அரங்கில் உள்ள பொருட்களினைத் தொட்டுப்பார்ப்பதில்லை ஆனால் தொலைவில் இருந்தே குறிப்பிட்ட பொருள் எத்தகைய தன்மை கொண்டவை எனப் புரிந்து கொண்டுவிடுவர்.

இழைமானத்திற்கும் ஒளி, வர்ணத்திற்கும் இடையில் தொடர்பு காணப்படுகின்றது. அதாவது மென்மையான இழைமானம் ஒளியினை பட்டுத்தெறிப்படையச் செய்வதில் பெரும் பங்காற்றுகின்ற வேளை வன்மையான இழைமானம் ஒளியினை அதிகம் தெறிப்படையச் செய்யாது. ஆனால் வன்மையான இழைமானத்திற்கு அதிகம் பட்டுத்தெறிக்கக் கூடிய வர்ணத்தை தெரிவு செய்வோமாயின் இழைமானத்தின் இயல்பினை அது மாற்றிவிடும். எனவே அரங்கில் ஒளி, வர்ணம், இழைமானம் என்பவை ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாகக் காணப்படுகின்றன.

அரங்கில் இழைமானமானது நாடகக் கதை இடம்பெறும் காலம், களம், மோடி, பாத்திரத்தன்மை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு வேடஉடை, ஒப்பனை, கைப்பொருட்கள், அமைப்பு விதானிப்பு, ஒளிவிதானிப்பு போன்றவற்றின் ஊடாக வெளிப்படுத்தப்படுகின்றன. இவ் வகையில் இழைமானம் என்பதும் மனநிலை, உணர்வு என்பவற்றை வெளிப்படுத்தும் சாதனமாக விளங்குகின்றது.

அரங்க அடிப்படை வடிவமைப்பு கூறுகள் அனைத்தும் தனித்தும், இணைந்தும் அரங்கிற் செயற்பட்டு பார்வையாளருடன் தொடர்பாடலினை மேற்கொள்கின்றன. ஒரு சிறந்த அரங்கவியளாளனின் கற்பனைக்கும், படைப்பாக்க ஆற்றலுக்கும் உட்பட்டு இத்தகைய அரங்க அடிப்படை வடிவமைப்பு மூலகங்கள் பெரும்காட்சிப் பண்பினையும், பல்வேறு வியாக்கியானங்களினையும், அழகியல் உணர்வினையும் பார்வையாளரின் மனங்களில் ஏற்படுத்தி விடுகின்றன.