கே. வி. எஸ். வாஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கே. வி. எஸ். வாஸ் (1913 - ஓகஸ்ட் 30, 1988) இலங்கையின் தலைசிறந்த பத்திரிகையாளராக, எழுத்தாளராக விளங்கியவர்.
தமது பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு 1933 ஆம் ஆண்டு வீரகேசரி நிறுவனத்தில் ஒரு மொழிபெயர்பாளராக இணைந்து கொண்டார் வாஸ். அவரது அயராத உழைப்பினாலும் எழுத்துத் திறமையினாலும் வீரகேசரி பத்திரிகையின் நிருபராக, உதவி ஆசிரியராக, ஆசிரியராக, பின் பிரதம ஆசிரியராக படிப்படியாகப் பதவி உயர்வு பெற்றார்.
வீரகேசரி பத்திரிகையில் குந்தளப் பிரேமா, நந்தினி, பத்மினி, ஆஷா போன்ற புனைபெயர்களில் பல தொடர்களை எழுதினார். ஈழத்தின் கதை என்ற பெயரில் இலங்கையின் வரலாற்றை ஆனந்த விகடனில் தொடராக எழுதினார். இது பின்னர் நூலாகவும் வெளிவந்தது.
சென்னை த ஹிந்து பத்திரிகையில் 32 ஆண்டுகாலம் இலங்கை நிருபராகப் பணியாற்றினார். கல்கி வாரஇதழில் இலங்கைக் கடிதம் என்ற தலைப்பில் வாராந்தம் இலங்கைச் செய்திகளை வெளியிட்டார்.
1975 ஆம் ஆண்டில் வாஸ் பத்திரிகை ஆசிரியர் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் அவர் தொடர்ந்து 1988இல் இறக்கும்வரை பத்திரிகைகளில் எழுதி வந்தார்.