மிதிவெடி அபாயக் கல்வி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மிதிவெடி அபாயக் கல்வி என்பது மிதிவெடி அபாயத்திலிருந்து மக்களைக் காக்கும் வண்ணம் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகும். இவ்வகை நடவடிக்கைகளை இலங்கையில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் நடத்தி வருகின்றது. மிதிவெடித் தாக்குதலுக்கு உள்ளாவோர் யார், இது குறித்து எந்த வயதுக் குழுவினருக்கு எவ்வாறான கல்வியினை வழங்குதல் வேண்டும் போன்ற முக்கியமான சில விடயங்கள் இதன் மூலம் ஆராயப்படுகின்றது.
மிதிவெடிகள் தொடர்பான தகவற் தளத்தின் (Information Management System for Mine Action - IMSMA, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் மிதிவெடி நடவடிக்கைப் பிரிவு) தரவுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் படி பெரும்பாலும் உழைக்கின்ற ஆண்களே மிதிவெடி அபாயத்திற்கு உள்ளாகின்றனர். விறகு பொறுக்குதல், தோட்டம் கொத்துதல், மாடு மேய்த்தல் போன்ற நடவடிக்கைகளின் போது இவர்கள் காயமடைந்துள்ளனர். இதுவரை வெடிக்காத வெடிப்பொருட்கள் வெடித்ததில் பெரும்பாலும் பதின்ம வயதில் உள்ள பாடசாலை ஆண் சிறார்களே பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் விந்தையான பொருட்கள் போன்று தோன்றும் இதுவரை வெடிக்காத வெடிப்பொருட்கள் ஆய்வதில் ஈடுபடுகையில் அவை வெடிக்க நேர்வதே இதற்குக் காரணமாகும்.
பெரும்பாலும், வறுமை காரணமாக மிதிவெடியுள்ள பகுதியென்று என்று தெரிந்தும் சிலர் விறகு பொறுக்குதல் போன்ற பொருளாதாராக் தேவைகளுக்காச் சென்றபோது பாதிப்படைந்துள்ளனர். ஆசிய வாழ்க்கைமுறையில் வீட்டுக்கு வெளியே பெரும்பாலும் ஆண்களே உழைப்பதால் பெரியவர்கள் பாதிக்கப்பட்டால் பெரும்பாலும் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதைவிட்டு கூலிவேலை மற்றும் சிறுவேலைகளில் ஈடுபட்டுப் தமது படிப்பைக் கைவிடுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. தவிர மிதிவெடியால் பாதிக்கப்பட்டவர் சிறுவர் என்றால் அவர் வளர்ந்து வருவதால் காலத்திற்குக் காலம் செயற்கைக் கால்களை மாற்றும் தேவையும் உள்ளது. வளர்ந்தவர்களுக்கு இவ்வாறு அடிக்கடி மாற்றத் தேவையில்லை.
இக்கல்வி நடைமுறைகளில் பெரும்பாலும் மிதிவெடி அடையாளங்களை இனம் கண்டு அப்பகுதியினைத் தவிர்ப்பது குறித்து சொல்லித் தரப்படுகிறது. அவ்வப்பகுதி வலய மிதிவெடி அலுவலகங்களுடன் இணைந்து இக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.