பின்வருநிலையணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ இவ்விரண்டுமோ பல முறை பின்னரும் வருவது.

இது மூன்று வகைப்படும்:

  • சொல் பின்வருநிலையணி
  • பொருள் பின்வருநிலையணி
  • சொற்பொருள் பின்வருநிலையணி

[தொகு] சொல் பின்வருநிலையணி

சொல் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் வேறு ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது.

எ.கா:

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்
                                --திருக்குறள (592)

இக்குறட்பாவில் 'உடைமை' என்ற சொல் பெற்றிருத்தல், உடைய, பொருள் என வேறுபட்ட பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொல் பின்வருநிலையணி ஆகும்.

[தொகு] பொருள் பின்வருநிலையணி

பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருவது.

எ.கா:

அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா
நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திதழ்
விண்டன கொன்றை விரிந்த கருவிளை
கொண்டன காந்தள் குலை

இப்பாடலில் மலரதில் என்னும் பொருள் தரக்கூடிய அவிழ்தல், அலர்தல், நெகிழிதல், விள்ளல், விரிதல் ஆகிய சொற்கள் பல முறை வந்துள்ளமையால் இது பொருள் பின்வருநிலையணி ஆகும்

[தொகு] சொற்பொருள் பின்வருநிலையணி

சொற்பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பல முறை வருவது.

எ.கா:

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
                             --திருக்குறள் (299)

இக்குறட்பாவில் விளக்கு என்னும் சொல் ஒரே பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்