கொல்லிமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கொல்லி மலை, இந்தியாவின் தெற்கு பகுதியில் உள்ள தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடர்ச்சியாகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டதாகும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது.

பொருளடக்கம்

[தொகு] பெயர்க் காரணம்

இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது.

[தொகு] வரலாற்றுக் குறிப்புகள்

பழந்தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லி மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் கி.பி. 200-ல், இந்த பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தான். ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து பல பாடல்கள் உள்ளன.

இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.

[தொகு] கொல்லிப் பாவை

முனிவர்கள் தங்கள் தவத்தினை அமைதியான இடத்தில் செய்ய விரும்பி கொல்லி மலையைத் தேர்ந்தெடுத்ததாகவும், அவர்களின் தவத்தைக் கலைக்க நினைத்த தீய சக்திகளிடமிருந்து தங்களை காக்குமாறு கொல்லிப் பாவையிடம் வேண்டியதாகவும் கதைகள் உள்ளன. அதற்கிணங்கி கொல்லிப் பாவை தனது வசியப் புன்னகையால் தீய சக்திகளை விரட்டியதாகவும் கூறுகின்றனர். கொல்லி மலையில், கொல்லிப் பாவைக்கு இன்றும் ஒரு கோவில் உள்ளது.

[தொகு] சுற்றுலாத் தலங்கள்

[தொகு] ஆகாச கங்கை நீர் வீழ்ச்சி

கொல்லி மலையில் ஆகாய கங்கை எனும் நீர் வீழ்ச்சி உள்ளது. 200 அடி உயரமுடைய இந்நீர் வீழ்ச்சியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது.

[தொகு] கொல்லிப் பாவைக் கோவில்

கொல்லி மலையில் கொல்லிப் பாவைக்கு ஒரு கோவில் உள்ளது.

[தொகு] அறப்பளீஸ்வரர் கோவில்

சதுரகிரி எனும் மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர் பாடியுள்ளார்.

[தொகு] முருகன் கோவில்

அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வேடர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சிவன், பார்வதி, விஷ்ணு, இடும்பன் மற்றும் விநாயகருக்கும் இங்கு ஆலயங்கள் உள்ளன.

[தொகு] வல்வில் ஓரி பண்டிகை

வருடம் தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரியின் நினைவாக ஒரு பண்டிகை கொண்டாடப்படுகிறது.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

ஏனைய மொழிகள்