எட்டயபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

எட்டயபுரம்

எட்டயபுரம்
மாநிலம்
 - மாவட்டங்கள்
தமிழ் நாடு
 - தூத்துக்குடி
அமைவிடம் 9.15° N 77.983° E
பரப்பளவு
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்
172  ச.கி.மீ

 - 60 மீட்டர்
கால வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
மக்கள் தொகை (2001)
 - மக்களடர்த்தி
12,800
 - /ச.கி.மீ
பேரூராட்சி மன்றத் தலைவர் கிருத்திகா ஜெயலட்சுமி[1]
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 628902[2]
 - +04632
 - TN 69 Z
இணையத்தளம்: தமிழ்நாடு அரசு

எட்டயபுரம் (ஆங்கிலம்:Ettayapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஊர் என்பதால் பலராலும் அறியப்படும். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார்.[3] தவிர உமறுப் புலவரும் இங்கு வாழ்ந்திருக்கிறார்.[4]

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏற்த்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று.[5] தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர்.

[தொகு] பாரதியின் பிறப்பிடம்

முழு விவரம்: சுப்பிரமணிய பாரதி

பாரதி பிறந்த வீடு
பாரதி பிறந்த வீடு

மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி இங்கு 1882-ம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11-ம் நாள் பிறந்தார். சிறந்த எழுத்தாளராகவும்

தத்துவவாதியாகவும் இருந்த அவர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார். அவர், இங்குள்ள "இராசா மேல்நிலைப் பள்ளி"யில் பயின்று வந்த பொழுது தன்னுடைய 11-ம் வயதிலேயே கவி புனையும் ஆற்றலைக் கொண்டிருந்தார். அதன் பின்னர், அவர் தனது வாழ்வின் பல கட்டங்களில் எட்டயபுரத்து பாளையக்காரரால் ஆதரிக்கப்பட்டார்.

[தொகு] எட்டப்பன்

எட்டப்பன் அரண்மனை
எட்டப்பன் அரண்மனை

எட்டப்பனைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் பலரும் எட்டப்பனை இழித்துரைப்பர். பிற்பாடு காட்டிக் கொடுக்கும் எவரையும் எட்டப்பன் என்றுரைக்கும் வழக்கம் உருவாயிற்று. எனினும், இவ்வூர் மக்களுக்கு அவர் செய்த நற்பணிகளுக்காகவும், முத்துசாமி தீட்சிதர்,[3] பாரதி போன்றோரை ஆதரித்தமையாலும் இவருக்கு நற்பெயரும் உண்டு.

[தொகு] ஊராண்மை

எட்டயபுரம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு பஞ்சாயத்து ஆகும். தமிழ் நாடு சட்டப் பேரவையில் கோவில்பட்டி தொகுதிக்குட்பட்டது.

[தொகு] மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,800 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். எட்டயபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. எட்டயபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

[தொகு] மக்கள் தொழில்

இங்குள்ள மக்கள் பெரும்பாலும் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தவிர தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர். ஒரு சிலர் வேளாண்மையும் செய்கிறார்கள். இருப்பினும் மேற்கூறிய அனைத்து தொழில்களும் நலிவடைந்துள்ள நிலையில் இவ்வூர்மக்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் பலசரக்குக் கடை, போன்ற இடங்களில் வேலை செய்யத் துவங்கியுள்ளனர்.

[தொகு] நெசவுத் தொழில்

கைத்தறி நெசவு
கைத்தறி நெசவு

இங்குள்ள மக்கள் பெரும்பாலும் பருத்தி இழைகளைக் கொண்டு கைத்தறி ஆடை நெசவு செய்கின்றனர். கைத்தறிகளில் அதிக வேலைப்பாடுகளுடன் நெசவு செய்ய முடிவதில்லை. தற்போது National Institute of Fashion Technology நிறுவனத்தார் இவர்களுக்கு ஜக்கார்டு தறிகளைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளித்து வருகின்றனர். இத்தறிகளில் துளையிடப்பட்ட அட்டைகளின் (Punched cards) துணையுடன் அதிக வேலைப்பாடுகளுடைய ஆடைகளை உருவாக்க முடியும். நெசவு சார்ந்த பிற பணிகளான சாயமிடுதல், பருத்தி நூலைப் பண்படுத்துதல் போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.

[தொகு] தீப்பெட்டித் தொழில்

நெசவிற்கு அடுத்தபடியாக தீப்பெட்டித் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தீப்பெட்டிகளைத் தயாரிப்பதிலும், எரிமருந்தை குச்சிகளில் ஏற்றுவதிலும், மருந்துடன் கூடிய குச்சிகளை பெட்டிகளில் அடைப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் பெரும்பாலும் மகளிரும் சிறார்களும் பணி புரிகின்றனர். தானியங்கி தீப்பெட்டித் தொழிற்சாலைகளின் வருகையினாலும், தீப்பெட்டிகளின் பயன்பாடு குறைந்துள்ளதாலும் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

[தொகு] வேளாண்மை

எட்டயபுரத்தின் காய்ந்த நிலப்பரப்பின் ஒரு தோற்றம்
எட்டயபுரத்தின் காய்ந்த நிலப்பரப்பின் ஒரு தோற்றம்

தொடர்ச்சியான வறட்சி மற்றும் ஊட்டம் குறைவான மண் வகையின் விளைவாக விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தி, சூரிய காந்தி போன்ற பயிர்கள் விளையும் கருப்பு மண் வகை நிலம் இங்கு அதிகம்.

[தொகு] சுற்றுலா

வரலாற்றுச் சிறப்புடைய இவ்வூருக்கு இரயில் மூலமாகச் சென்னையிலிருந்தும் பெங்களூரிலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் கோவில்பட்டி வரை வந்து பிற்பாடு சாலை வழியாக (15 கி.மீ. தொலைவு) வரலாம். மதுரை (82 கி.மீ. தொலைவு) , தூத்துக்குடி (50 கி.மீ. தொலைவு) மற்றும் திருநெல்வேலி (கோவில்பட்டி வழியாக) நகரங்களுடன் சாலை இணைப்பும் உள்ளது.

[தொகு] இவ்வூரில் காணத்தக்க இடங்கள்

  1. பாரதி நினைவு மணி மண்டபம்[4]
  2. பாரதி பிறந்த வீடு
  3. முத்துசாமி தீட்சிதர் நினைவிடம்
  4. உமறுப் புலவர் தர்கா
  5. எட்டப்பன் அரண்மனை

[தொகு] அருகாமையிலுள்ள சுற்றுலா இடங்கள்

  1. பாஞ்சாலங்குறிச்சி கோட்டை
  2. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்
  3. சங்கரன் கோவில்
  4. குற்றாலம் நீர்வீழ்ச்சிகள்
  5. திருச்செந்தூர் முருகன் கோவில்

[தொகு] மேற்கோள்கள்

  1. (2006-07-07) பேரூராட்சிகள் மற்றும் அவற்றின் மன்றத் தலைவர்களைப் பற்றிய தகவல்கள். தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகள்.
  2. http://www.bandvalley.com/postalcode.xls
  3. 3.0 3.1 முத்துசாமி தீட்சிதரை எட்டப்பன் ஆதரித்தமையைப் பற்றிய எழுத்தாக்கம்
  4. 4.0 4.1 உமறுப் புலவர் தர்கா, முத்துசாமி தீட்சிதர் நினைவிடம், பாரதி பிறந்த வீடு முதலியவற்றின் புகைப்படங்கள் (தமிழ்நாடு அரசு வலைத்தளம்)
  5. எட்டயபுரம் 1565-ம் ஆண்டு இப்பெயர் பெற்றது.
  6. இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு. இணைப்பு அக்டோபர் 20, 2006 அன்று அணுகப்பட்டது.

[தொகு] வெளி இணைப்புகள்