பாளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாளி ஒரு மத்திய பிராகிருத மொழியாகும். தேரவாத பௌத்தத்தின் சமய நூல்கள் இம்மொழியில் எழுத்தப்பட்டிருப்பதன் காரணமாக இம் மொழி மிகவும் பிரபலமானது. பாளி பல்வேறு வரிவடிவங்களில் எழுதப்பட்டு வந்துள்ளது. தேவநாகரியிலிருந்து லாவோ வரையும், பல்வேறு இந்திய எழுத்து வடிவங்களிலும், பாளி நூற் சபை (Pali Text Society)யைச் சேர்ந்த டி. டபிள்யூ. ஆர். டேவிட் என்பவரால் உருவாக்கப்பட்ட ரோமனாக்கம் செய்யப்பட்ட எழுத்து முறையிலும் பாளி எழுதப்படுகிறது.
சில தேரவாத பௌத்தர்கள் புத்தர் பேசிய மொழி பாளியே என்று கருதுகிறார்கள். எனினும் பாளி மொழி பற்றிப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. சமஸ்கிருதம் உயர் குடியினரதும், படித்தவர்களதும் மொழியாயிருந்தபோது, பாளியே சாதாரண மக்களது மொழியாயிருந்ததெனக் கூறுவோர் ஒருபுறமிருக்க, பாளி எக்காலத்திலும் பேசப்பட்டதில்லை எனக் கருதுவோரும் உள்ளனர்.
பௌத்த நூல்களைக் கற்பதற்கும் ஓதுவதற்குமாகவே பாளி தற்காலத்தில் பயிலப்பட்டுவருகிறது. ஐக்கிய இராச்சியத்திலுள்ள பாளி நூற் சபை, 1881ல் அது நிறுவப்பட்டதிலிருந்து, மேல் நாட்டறிஞர்களின் பாளி மொழி ஆய்வை ஊக்குவிப்பதில் முக்கிய உந்து சக்தியாக உள்ளது.