பாபநாசம் சிவன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாபநாசம் சிவன் (செப்டம்பர் 26, 1890 - அக்டோபர் 10, 1973) அவர்கள் கருநாடக இசையில் பல இராகங்களில் 2500 க்கும் அதிகமான கிருதிகளை இயற்றிப் புகழ்சமைத்த இசை அறிஞர் ஆவார்.
இவர் ராமாமிருத ஐயர் அவர்களுக்கும் யோகாம்பாள் அம்மாள் அவர்களுக்கும் இரண்டாவது மகனாகப் பிறதார். இவர் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள பொலகம் என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் ராமைய்யா என்று அழைத்தனர். பாபநாசம் சிவன் என்னும் பெயரானது இவருக்கு தஞ்சாவூரில் உள்ள கணபதி அக்ரஹாரத்தில் உள்ளவர்கள் இட்ட பெயர். 1912ல் பாபநாசம் சிவன் அவர்கள் அதிகாலையில் (வைகறையில்) சிவன் கோயிலின் முன் நின்று அரும் பொன்னே மணியே என்று உருகி நாள்தோறும் பாடியதால் சிவபெருமானே கைலாசத்தில் இருந்து இளைஞர் வடிவம் கொண்டு இரங்கிவந்ததாகப் போற்றி புகழ்ந்ததின் காரணமாக இப்பெயர் பெற்றார்.
புகழ்பெற்ற கருநாடக பாடகர்கள் பலரும் பாபநாசம் சிவன் அவர்களின் பாடல்களை தங்கள் இசை நிகழ்ச்சிகளில் (கச்சேரிகளில்) பாடியுள்ளனர். கருநாடக மும்மூர்திகளுக்குப் பிறகு வந்த இசைப்பாடல்கள் இயற்றியவர்களில் முக்கியமானவர் பாபநாசம் சிவன் அவர்கள். அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர், முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், ஜி.என். பாலசுப்பிரமணியம், மதுரை மணி ஐயர் முதலான புகழ்பெற்ற பாடகர்கள் அனைவரும் பாபநாசம் சிவன் பாடல்களைப் பாடியுள்ளனர். பாபநாசம் சிவன் அவர்கள் கிருதி, வர்ணம், பதம், இசைநாடகங்கள், ஜாவளி ஆகிய பல இசை வடிவங்களிலும் இயற்றியுள்ளார். இவருடைய ஆக்கங்களை ஆறு தொகுப்புகளாக இவருடைய மகள் முனைவர் ருக்மணி ரமணி அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
பாபநாசம் சிவன் அவர்கள் 10 ஆண்டுகள் உழைத்து 1952ல் வடமொழி சொற்கடல் (சம்ஸ்கிருத பாஷா சப்த சமுத்ரா) என்னும் நூலை ஆக்கினார். இவருடைய கடைசி ஆக்கங்களாக இராமாயணத்தைச் சுருக்கி 24 இராகங்களில் 24 பாடல்களாக ஸ்ரீ ராம சரித கீதம் என்னும் நூலையும்,. அதே போல காரைக்கால் அம்மையார் சரிதம் என்னும் நூலையும் கூறுவர்
சிவன் அவர்கள் பல பட்டங்களும் பரிசுகளும் பெற்றுள்ளார். 1950ல் இந்திய பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி சங்கீத சாகித்ய கலா சிகாமணி என்னும் பட்டத்தை அளித்தது. 1971ல் மியூசிக் அக்காடமி சங்கீத கலாநிதி பட்டம் அளித்தது. தமிழ் இசைச் சங்கம் இசைப் பேரறிஞர் பட்டம் அளித்தது. அவருடைய 82 ஆவது அகவையில் இந்திய அரசு பத்ம பூஷன் பட்டம் அளித்துப் பெருமை செய்தது.