மேரி கியூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

1911 வேதியலுக்கான நோபல் பரிசுக்கான புகைப்படத்தில் மேரி க்யூரி
1911 வேதியலுக்கான நோபல் பரிசுக்கான புகைப்படத்தில் மேரி க்யூரி

மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். இவர் வேதியியல் மற்றும் இயற்பியலுக்காக நோபல் பரிசை முறையே 1911, 1903 ஆம் ஆண்டுகளில் பெற்றார். ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டு பிடித்தார்.

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

மரியா ஸ்லொடஸ்கா (Maria Skłodowska) என்பதே இவரது இயற்பெயராகும். இளமைக்காலத்தில் இவரின் செல்லப்பெயராக மான்யா (Manya) விளங்கியது. இவர் பிறந்தபோது போலந்து ரஷ்யாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. மேரி கியூரியின் பெற்றோர்கள் ஆசிரியர்களாவர். ஐந்தாம் குழந்தையாக மேரி கியூரி பிறந்த பின்பு பெற்றோர் இருவரும் தமது ஆசிரியத் தொழிலை இழந்தனர். பாடசாலையில் அவ்வளவாக பிரகாசிக்காத மேரிக்கு உயர் கல்வி வாய்ப்பும் கிட்டவில்லை; ஏனெனில் அந்நேரம் போலந்தில் பெண்களுக்கு உயர் கல்வி வழங்கப்படவில்லை. இறுதியில் குழந்தைகளைப் பராமரிக்கும் வேலைக்குச் சேர்ந்தார். இவ்வேலை மூலம் கிடைத்த வருமானத்தில் ஒரு பகுதியை பாரிசில் மருத்துவக் கல்வி கற்ற இவரது சகோதரிக்கு அனுப்பினார். 1891இல் இவரது சகோதரி சக வைத்தியர் ஒருவரைத் திருமணம் செய்தார்.

பின்பு இவர் பாரிசில் உள்ள தனது சகோதரியுடன் இணைந்து கொண்டார். இங்கு தனது பெயரை மேரி என மாற்றிக்கொண்டார். தற்போது பாரிஸ் பல்கலைக்கழகம் என அழைக்கப்படும் இடத்தில் (சார்போன்-Sorbonne) இயற்பியல் மற்றும் கணிதத்துறையில் கற்று சிறப்புத் தேர்ச்சி பெற்றார்.

1894இல் பிரஞ்சு விஞ்ஞானியான பியரி கியூரியை (Pierre Curie) திருமணம் செய்து கொண்டார்.

[தொகு] ஆராய்ச்சிகள்

போலந்து நாட்டு நாணயம் - மேரி கியூரி படத்துடன்
போலந்து நாட்டு நாணயம் - மேரி கியூரி படத்துடன்
  • 1896இல் கதிர் வீச்சு தொடர்பான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்.
  • 1898இல் அதிகாரப்பூர்வமாக ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்ததை அறிவித்தார்.
  • 1914இல் முதலாம் உலகப் போரின் போது ஆம்புலன்ஸ் வண்டிகளில் எக்ஸ் கதிர் கருவிகளைப்பொருத்த உதவி செய்தார்.


[தொகு] கணவரின் மரணத்தின் பின்பு

1906 இல் கணவரின் அகால மரணத்தின் பின்பு சார்போனில் கணவரின் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதுடன் அங்கு கல்வி கற்பித்த முதலாவது பெண் எனும் பெருமையையும் பெற்றார். இவர் தனது சக்தி முழுவதையும் ஆராய்ச்சிக்காகவும் தன் பெண் குழந்தைகளை கவனிக்கவும் செலவிட்டார். 1920களில் இவரின் உடல் நலம் சீர்கெடத்தொடங்கியது. 1934 ஜுலை 4 அன்று மேரி கியூரி மரணம் அடைந்தார். கியூரி இறந்து மூன்று மாதங்களின் பின் அவரின் மகளும் மருமகனும் கியூரியின் செயற்கை கதிர் வீச்சு பற்றிய கண்டு பிடிப்பை வெளியிட்டனர்.

Wikimedia Commons logo
விக்கிமீடியா காமன்ஸ் -ல் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: