முருக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

முருக்கு அல்லது முள்முருக்கு என அழைக்கப்படுவது, ஃபேபேசியே (Fabaceae) தாவரவியற் குடும்பத்தில், எரித்ரைனா (Erythrina) சாதிக்குள் அடங்கிய ஒரு தாவரம் ஆகும். இது எரித்ரைனா இந்திகா (Erythrina indica) என்னும் தாவரவியற் பெயரால் குறிக்கப்படுகின்றது. இதன் கடும்சிவப்பு நிறப் பூவைக் குறித்துப் போலும், இது இந்தியப் பவள மரம் (Indian coral tree) என அழைக்கப்படுகின்றது. இந்தியாவின் தீவக் குறைப் பகுதிக்கு உரியவற்றில் அழகிய நிறப்பூக்களைக் கொண்ட தாவரங்களில் இதுவும் ஒன்று. மார்ச் மாதமளவில் பூக்கத்தொடங்கும் இத் தாவரங்கள் மே மாதம் வரை பூக்களைத் தாங்கியிருக்கும்.

முருக்க மரம், சிறியது முதல் நடுத்தர அளவு வரை வளரக்கூடியது. பொருத்தமான நிலம் அமையும்போது சுமார் 15 மீட்டருக்கு மேல் உயரம் கொண்டதாக வளரும். இதன் கிளைகள் முட்கள் நிரம்பியவை. முதிர்ந்த கிளைகளில் முட்கள் அதிகம் காணப்படுவதில்லை. ஓரளவு பெரிய இதன் இலை ஒரு கூட்டிலையாகும். நீண்ட காம்பில் மூன்று சிற்றிலைகள் அமைந்து இருக்கும். காம்பின் நுனியில் ஒரு சிற்றிலையும், அதற்குச் சற்றுக்கீழே இருபக்கங்களிலும் இரண்டு இலைகளும் அமைந்து இருக்கும். நடுச் சிற்றிலை, ஏனைய இரண்டுடனும் ஒப்பிடும்போது அளவில் குறிப்பிடத்தக்க அளவு பெரியது.

இத் தாவரத்தை விதை மூலமாகவோ அல்லது பதியமுறை (Vegitative) மூலமாகவோ வளர்க்க முடியும். கிளைகளை நட்டு வளர்ப்பதே பொதுவாகக் கையாளப்படுவதும் இலகுவானதுமான முறையாகும்.