இரும்புக் காலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இரும்புக் காலம் என்பது, மனிதப் பண்பாட்டு வளர்ச்சியின் ஒரு காலகட்டம் ஆகும். இக்காலகட்டத்திலே இரும்புக் கருவிகளினதும், ஆயுதங்களினதும் பயன்பாடு முன்னணியில் இருக்கும். சில சமூகங்களில், இரும்பின் அறிமுகமும், மாறுபட்ட வேளாண்மைச் செயல் முறைகள், சமய நம்பிக்கைகள், அழகியல் பாணிகள் போன்ற மாற்றங்களும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தன. ஆனாலும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்பதில்லை.
வரலாற்றுக்கு முந்திய சமூகங்களை வகைப்படுத்தும் முக்கால முறையில் இறுதியான முக்கிய கால கட்டம் இதுவாகும். இது வெண்கலக் காலத்தைத் தொடர்ந்து நிலவியது. இது நிலவிய நாடு, புவியியல் பிரதேசம் ஆகியவற்றைப் பொறுத்து இதன் காலமும், சூழலும் மாறுபட்டன. பண்டைய அண்மைக் கிழக்கு, கிரேக்கம், பண்டைய இந்தியா ஆகிய இடங்களில் இரும்புக் காலம் கி.மு. 12 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. இரும்பை உருக்குதல், அதனைக் கருவிகள் தயாரிப்பதற்கேற்ப உருவாக்குதல் என்பவற்றை உள்ளடக்கிய இரும்பின் பயன்பாடு, ஆபிரிக்காவின் நொக் (Nok) பண்பாட்டில், கி.மு 1200 அளவில் தோன்றியது. ஐரோப்பாவின் பிற பகுதிகளில் இது மிகவும் பிந்திய காலத்திலேயே தொடங்கியது. இரும்புக் காலப் பண்பாடு, மத்திய ஐரோப்பாவில் கி.மு. 8 ஆம் நூற்றாண்டிலும், வட ஐரோப்பாவில் கி.மு 6 ஆம் நூற்றாண்டிலும் தோற்றம் பெற்றது. மத்திய தரைக் கடற் பகுதிகளில், கிரேக்க, ரோமப் பேரரசுக் காலத்தில் உருவான வரலாற்று மரபுகளுடனும், இந்தியாவில், பௌத்தம், சமணம் ஆகியவற்றின் எழுச்சியுடனும், சீனாவில் கன்பூசியனிசத்தின் தோற்றத்துடனும் இரும்புக்காலம் முடிவுக்கு வந்தது. வட ஐரோப்பியப் பகுதிகளில் இது மத்திய காலத் தொடக்கப் பகுதி வரை நீடித்தது.