கூத்தநூல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கூத்தநூல் சங்க காலத்தினைத் சேர்ந்த தமிழ் நூலாகும். சாத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பெற்ற இந்நூலானது பாயிரம், சுவை நூல், தொகை நூல் என் முப்பிரிவுகளைக் கொண்டதாகும். பாயிரம் நூல் வந்தவழியினைக் குறிப்பிடுகின்றது. 'சுவை நூல்' 156 நூற்பாக்களினைக் கொண்டு பத்துப் பிரிவுகளாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாடகத்தின் பரிணாமத்தினைப் பற்றி விளக்கும் இப்பிரிவானது இறைவன் ஆடிய ஆதிக்கூத்தில், உடுக்கையிலிருந்து பிறந்தது ஓசை; ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும், அதனின்று ஆட்டமும், ஆட்டத்திலிருந்து கூத்தின் அமைதியும் (ஒழுங்கு), அவ்வமைதியிலிருந்து நாட்டியக் கோப்பும் (ஒழுங்கு) அவ்வித ஒழுங்கிலிருந்து நாடக வகைகளும் தோன்றின என இந்நூலில் உள்ள பின்வரும் பாடல்வரிகள் விளக்குகின்றன.
"மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்
உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே
ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே
இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே
ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே
கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே
நாட்டியம் பிறந்தது நாடக வகையே"
(கூத்தநூல் - தோற்றுவாய்)
கவிஞர். பால பாரதி சு. து. சு. யோகியார் என்பவரால் கூத்தநூல் வெளியிடப்பெற்றது. 'தமிழ் நாடகம் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற தன் நூலில் 39 ஆம் பக்கத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகவிருந்த பேராசிரியர் டாக்டர் ஆறு. அழகப்பன் குறிப்பிடுகின்றார். இந்நூல் தமிழ்நாடு, இயல் - இசை, நாடக மன்றத்தால் 1968 ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றது.