திக்குவல்லை கமால்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திக்குவல்லை கமால். (பிறப்பு: மார்ச் 3, 1950) என்ற முஹம்மத் ஜெலால்தீன் முஹம்மத் கமால், ஈழத்து தமிழ்க் கலை இலக்கிய துறையில் பங்காற்றி வரும் தென்னிலங்கை முஸ்லிம் படைப்பாளிகள் வரிசையில் கவனத்திற்குரிய ஒரு படைப்பாளி ஆவார். இலங்கையின் தென் மாகாணம், மாத்தறைபிரதேசத்தில் அமைந்துள்ள திக்குவல்லை எனும் பிறந்த கமால், அக்கிராமத்து மக்களின் பேச்சு வழக்கினை கொண்ட படைப்புக்களை ஈழத்து படைப்பிலகிற்கு வழங்கியவர்களில் முன்னோடிகளில் ஒருவராவார்.
தர்கா நகர் ஸஹிரா மகா வித்தியாலயம் வெளியிட்ட தட்டெழுத்து கவிதை ஏடான சுவை மூலம் இலக்கிய உலகுக்கு பிரவேசம் செய்த கடமைப் புரிந்த கமால், ஏ. இக்பால், இரா சந்திரசேகரன், எம். எச். எம். ஷம்ஸ், யோனகபுர ஹம்ஸா, டொமினிக் ஜீவா, போன்றவர்களால் ஊக்கம் பெற்ற கமால், பல சிறுகதைகள், நாவல்கள், புதுக்கவிதைகள், வானொலி நாடகங்கள் என பல்வேறு வடிவங்களில் தனது இலக்கிய பங்களிப்பை ஆற்றி இருக்கிறார்.
சிரித்திரன், இன்ஸான், வீரகேசரி, தினபதி, ராதா, தினகரன், மல்லிகை, ஞானம் போன்ற பல்வேறு பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளி வந்திருக்கும் இவரது படைப்புக்கள், சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது ""எலிக்கூடு"" எனும் புதுக்கவிதைத் தொகுப்பு ஈழத்தில் வெளிவந்த புதுக்கவிதைத் தொகுப்புகளில் ஆரம்ப தொகுப்புகளில் ஓன்றாக திகழ்கிறது.
திக்குவல்லை எழுத்தாளர் சங்கம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மல்லிகைப்பந்தல் போன்ற கலை இலக்கிய அமைப்புகளுடன் தொடர்பு கொண்ட கமால், ஓரு பயிற்றுவிக்கப்பட்ட விஞ்ஞானத்துறை ஆசிரியராவார்.
[தொகு] வெளிவந்த நூல்கள்
- எலிக்கூடு (புதுக்கவிதை, 1973)
- கோடையும் வரம்புகளை உடைக்கும் (சிறுகதைகள், 1984)
- குருட்டு வெளிச்சம் (சிறுகதைகள், 1993)
- ஒளி பரவுகிறது (நாவல், இலங்கை சாகித்திய மண்டல பரிசு 1995)
- விடுதலை (சிறுகதைகள், 1996)
- விடை பிழைத்த கணக்கு (சிறுகதைகள், 1996)
- புதியபாதை (சிறுகதைகள், 1997)
- நச்சு மரமும் நறுமலர்களும் (நாவல், 1998)
- வரண்டு போன மேகங்கள் (சிறுகதைகள், 1999)
- பாதை தெரியாத பயணம் (நாவல், 2000)
- புகையில் கருகிய பூ (வானொலி நாடகங்கள், 2001)
- பிறந்த நாள் (சிறுவர் இலக்கியம், 2003)
- மல்லிகை ஜீவா மனப்பதிவுகள் (கட்டுரை, 2004)
- நிராசை (வானொலி நாடகங்கள், 2005)
- உதயபுரம் (சிறுவர் இலக்கியம், இலங்கை சாகித்திய மண்டல பரிசு, 2005)
- உதயக் கதிர்கள் (நாவல், 2006)
[தொகு] விருதுகள் பட்டங்கள்
- முஸ்லிம் கலாசார அலுவல்கள் அமைச்சு இவருக்கு ""இலக்கிய வித்தகர்"" எனும் பட்டம் அளித்துள்ளது.
- இலங்கை கலாசார அலுவல்கள் அமைச்சு ""கலாபூஷணம்"" வழங்கியுள்ளது.
[தொகு] இவரை பற்றிய ஆய்வு
- பேராதனை பல்கலைக்கழகத்தில் 2004-2005 ஆண்டுக்கான தமிழ்ச் சிறப்பு பட்ட ஆய்வுக்காக செல்வி எஸ். றிம்ஸா "திக்குவல்லை கமாலின் சிறுகதைகள்" எனும் தலைப்பில் ஆய்வு செய்துள்ளார்.