கண்ணகி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கண்ணகி தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவியாவாள். கற்பிற் சிறந்தவளாக வர்ணிக்கப்பட்டுள்ள இவள், எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலை செய்யப்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையைப் பாண்டிய அரசனிடம் வாதித்து நிரூபித்தாள். தன் பிழைகண்டு வேதனையடைந்த பாண்டியனும் அவனது அரசியும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர். கோபம் அடங்காத கண்ணகி, மதுரை நகரையும் தன் கற்பின் வலிமையால் எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
சிலப்பதிகாரம் எழுதப்பட்ட சந்தர்ப்பத்தில், சேர நாட்டு மன்னன் செங்குட்டுவனால் கண்ணகிக்கு விழா எடுக்கப்பட்டது. இவ்விழாவில் இலங்கை மன்னன் கஜபாகுவும் கலந்துகொண்டதாக வரலாறு கூறுகிறது. இவன் மூலம் இலங்கையில் கண்ணகியை பத்தினித் தெய்வமாக வணங்கும் வழக்கம் ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.