சமஸ்கிருதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சமஸ்கிருதம் இந்தியாவின் மிகப்பழைய மொழிகளுள் ஒன்று. இந்தோ - ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த இது தற்போது வழக்கிலில்லாத இறந்த மொழியாகும். எனினும் இந்து சமயத்துக்கு அடிப்படையான நான்கு வேதங்கள் மற்றும் பல சமய நூல்கள் உட்பட ஏராளமான தொன்மையான இந்திய இலக்கியங்கள் இம் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இந்தியாவின் தேசிய மொழிகள் பதினைந்தில் இதுவும் ஒன்றாகும். ஹிந்தி, வங்காளி, குஜராத்தி, மராட்டி முதலிய நவீன வட இந்திய மொழிகள் பலவற்றுக்கும் இதுவே மூல மொழியாகக் கருதப்படுகின்றது.
சமஸ்கிருதம் (संस्कृतम्) | |
---|---|
பேசப்பட்ட இடம்: | ஆசியா |
பிரதேசம்: | தென்னாசியா, தென்கிழக்காசியாவின் சில பகுதிகள் |
பேசுபவர்களின் எண்ணிக்கை: | கிட்டத்தட்ட எவருமில்லை |
நிலை: | முதல் நூறு மொழிகளுள் அடங்கவில்லை |
Genetic classification: |
இந்தோ-ஐரோப்பியன் இந்தோ-ஈரானியன் |
உத்தியோகபூர்வ நிலை | |
உத்தியோக மொழியாயிருக்கும் நாடு: | இந்தியா |
மொழிக் குறியீடு | |
ISO 639-1 | sa |
ISO 639-2 | san |
SIL | SKT |
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
சமஸ்கிருதம் என்பதன் பொருள் செய்து முடிக்கப்பட்டது, செம்மைப்படுத்தப்பட்டது, பூரணமானது என்பதாகும். சம் (ஒன்றாக) + கிர்தம் (உருவாக்கப்பட்டது). சமஸ்கிருதம் உருவாக்கப்பட்டுப் பல பரம்பரைகளினூடாகப் பூரணத்துவம் அடையும்வரை செம்மைப்படுத்தப்பட்டது என்பதே ஒவ்வொரு சமஸ்கிருத மாணவனும் பாரம்பரியமாகப் படிக்கும் பாடமாகும். சமஸ்கிருதம் பிராகிருதத்தின் (பிரா - முதன்மை, முதல், முன் + கிர்த் - உருவாக்கப்பட்டது) செம்மையான மொழிவடிவம் என்று கருதப்படுகின்றது. பிராகிருதம் என்பது பாளி, அர்தமகதி முதலிய கீழ்மட்ட மக்கள் மொழிகளை உள்ளடக்கும்.
இம் மொழி பல கட்டங்களில் செம்மைப்படுத்தப்பட்டது. இதன் பழைய வேதகால வடிவம், எல்லாப் பிற்கால இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் மூலமான முதல்நிலை-இந்தோ-ஐரோப்பிய மொழிக்குக் கிட்டியதாகும். வேதகால சமஸ்கிருதம் சோரோவாஸ்ட்டிரியனிசத்தின் அவெஸ்தான் மொழியை ஒத்தது. இதன் இலக்கணமும் சொல்லாக்கமும் உறுதியானபின்னர், இது ஒரு அழகியல் ஒழுங்கமைவுக்கு உட்பட்ட மொழியானதுடன், நாடகம், மருத்துவம், அரசியல், வானியல், கணிதம் முதலியவை சார்ந்த இலக்கியங்களும் உருவாயின.
பல நவீன ஐரோப்பிய மொழிகளுடனும், கிரேக்கம், லத்தீன் முதலிய செம்மொழிகளுடனுமான சமஸ்கிருதத்தின் பொது உற்பத்தியை, சமஸ்கிருத மொழியில் தாய் (மாத்ர்), தந்தை (பித்ர்) என்பவற்றுக்கான சொற்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். ஹெயின்றிச் ரோத் மற்றும் ஜொஹான் ஏர்ணெஸ்ட் ஹங்ஸ்லெடன் என்பவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட ஐரோப்பிய சமஸ்கிருத ஆராய்ச்சி, வில்லியம் ஜோன்ஸ் இந்த மொழிக்குடும்பத்தைக் கண்டுபிடிக்க வித்திட்டதுடன், மொழியியலின் வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்தது. உண்மையில், மொழியியல், சமஸ்கிருதத்துக்கான விதிகளை ஒழுங்கமைக்கும் முயற்சியின்போது, இந்திய இலக்கணவியலாளர்களாலேயே முதலில் அபிவிருத்தி செய்யப்பட்டது. பிற்காலத்தில் உலகின் ஏனைய பகுதிகளில் வளர்ந்த நவீன மொழியியல், மேற்படி இலக்கணவியலாளர்களுக்குப் பெருமளவு கடமைப்பட்டுள்ளது.
சமஸ்கிருதமே இந்தோ-ஆரியனின் ஒரு கிளையான இந்தோ-ஈரானியனின் மிக மூத்த உறுப்பு மொழியாகும்.
வேதங்களும், தொன்மையான சமஸ்கிருத நூல்களும் எழுதப்பட்ட வேதகால சமஸ்கிருதமே இம் மொழியின் மிகப்பழைய வடிவமாகும். மிகப் பழைய வேதமான இருக்கு வேதம் கி.மு இரண்டாவது ஆயிரவாண்டின் மத்தியில் இயற்றப்பட்டது. வேதகால வடிவம் கி.மு முதலாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதிவரை வழக்கிலிருந்தது. ஏறத்தாழ இக் காலப்பகுதியில் சமஸ்கிருதம், சமயம் மற்றும் கல்வியைப் பொறுத்தவரை தனது முதல் நிலையிலிருந்து இரண்டாவது நிலைக்கு இறங்கியது. இக்காலப்பகுதியில் நிகழ்ந்த சமஸ்கிருதத்தின் அமைப்புப் பற்றிய ஆய்வுகள் மொழியியலின் ஆரம்பத்துக்கு வழி சமைத்தன. இப்பொழுது கிடக்க்கும் மிகத் தொன்மையான சமஸ்கிருத இலக்கணம் பாணினியின் c. கி.மு 500 அஷ்டாத்தியாயி ("8 அத்தியாய இலக்கணம்"). காப்பிய சமஸ்கிருதம் என்று அழைக்கப்படும் ஒரு சமஸ்கிருத வடிவத்தை மகாபாரதம் மற்றும் ஏனைய இந்துக் காப்பியங்களில் காணலாம்.
கீழ் மட்ட சமஸ்கிருதமே பிராகிருதமாகவும் (ஆரம்ப கால பௌத்த நூல்கள் இம் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன), நவீன இந்திய மொழிகளாகவும் வளர்ச்சியடைந்திருக்கக்கூடும். சமஸ்கிருதத்துக்கும் தென்னிந்தியாவின் திராவிட மொழிகளுக்கிடையேயும்கூட இருவழிச் செல்வாக்கு இருந்துள்ளது.
[தொகு] எழுத்து
வரலாற்றுரீதியில் சமஸ்கிருதத்துக்கு ஒரு எழுத்துமுறை இருந்ததில்லை. பண்டைய பிராமி எழுத்துக்கள் அசோகச் சக்கரவர்த்தியின் தூண் கல்வெட்டுக்களின் காலம் வரை கூடப் புழக்கத்திலிருந்தது. பின்னர், கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டதுடன், தெற்கே கன்னடம் போன்ற எழுத்துக்களும், வடக்கே வங்காளம் மற்றும் ஏனைய வட இந்திய எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டன. எனினும் பல வருடங்களாக, விசேடமாக அண்மைக் காலங்களில் தேவநாகரி எழுத்துக்களே பரவலாக சமஸ்கிருதத்துடன் தொடர்புபட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில், முக்கியமாக தேவநாகரி எழுத்துக்கள் உள்ளூர் எழுத்து முறைமையாக இல்லாத பகுதிகளில் கிரந்த எழுத்துக்கள் அல்லது உள்ளூர் எழுத்துக்கள் பயன்பாட்டிலுள்ளன.
சமஸ்கிருதத் தொடர்பில் எழுத்து அறிமுகப் படுத்தப்பட்டது பிற்காலத்திலே ஆகும். பரம்பரை பரம்பரையாக அறிவு வாய் மொழி மூலமே கடத்தப்பட்டு வந்தது. எழுத்து மத்தைய கிழக்கிலிருந்து வணிகர்களூடாக இந்தியாவுக்கு அறிமுகப் படுத்தப்பட்டிருக்கலாம் என்று ரைஸ் டேவிட் (Rhys Davids) என்பார் கருதுகின்றார். எனினும், சமஸ்கிருதம் தொடந்தும் பல காலம் வாய்மூல மொழியாகவே புழங்கி வந்தது. எனினும், ஒலிகள் தொடர்பான வேத தத்துவங்களும், எழுத்திலக்கணமும், இந்துக் குறியீட்டு முறையில் வகிக்கும் பங்கு கவனிக்கத் தக்கதாகும். 51 எழுத்துக்களைக் கொண்ட வர்ணமாலா என்று அழைக்கப்படும் ஒலிமாலை, காளியின் 51 மண்டையோடுகளைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
[தொகு] செல்வாக்கு
[தொகு] நவீன இந்தியா
சமஸ்கிருதத்தின் சொற்தொகுதியையும், இலக்கண அடிப்படையையும் கொண்டு உருவான தற்காலத்து மொழிகள் மீதான அம் மொழியின் தாக்கம் மிகவும் பெரியது. சிறப்பாக, இந்தியச் சமுதாயத்தில் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் மத்தியில், சமஸ்கிருதம், இந்து சமய நூல்களின் களஞ்சியமாகவும், வழிபாட்டுக்குரிய மொழியாகவும் போற்றப்படுகின்றது. வழிபாடுகளில் நாட்டார் மற்றும் பிரதேச வழக்காறுகளும் பரவலாகக் காணப்பட்டபோதிலும், கோடிக்கணக்கான இந்துக்கள் சம்ஸ்கிருத மந்திரங்களை ஓதி வருவதுடன், பெரும்பாலான கோயில்களில் கிரியைகளும் சமஸ்கிருத மொழியிலேயே இன்றும் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பிரதேச மொழிகளான வங்காளி, குஜராத்தி, ஹிந்தி முதலியவற்றின், தூய நிலை எனக் கருதப்படும், உயர்நிலை வடிவங்கள் பெருமளவில் சமஸ்கிருதப் படுத்தப்பட்டவையாகக் காணப்படுகின்றன. தற்கால இந்திய மொழிகளில், ஹிந்தி பேச்சு வழக்கில் அரபி மற்றும் பாரசீக மொழிகளின் தாக்கத்தைப் பெருமளவில் கொண்டிருந்தபோதும், வங்காளி, மராத்தி போன்ற மொழிகள் கூடிய அளவில் சமஸ்கிருத சொல் மூலங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. இந்தியாவின் தேசியப் பாடலாகவும், சுதந்திரப் பாடலாகவும் முறையே கருதப்படும் ஜன கண மன, வந்தே மாதரம் ஆகிய பாடல்கள் பெருமளவில் சமஸ்கிருதப் படுத்தப்பட்ட வங்காள மொழியின் உயர்நிலை வடிவங்களில் இயற்றப்பட்டவை. இந்து சமயம் தொடர்பான கல்வியைப் பொறுத்தவரை, சமுதாயத்தின் உயர்மட்டத்திலுள்ள படித்தவர்கள் மத்தியில் சமஸ்கிருதம் இன்னும் கற்கை மொழியாகப் போற்றப்படுகின்றது.
சீன மொழியிலும், பண்பாட்டிலும் கூடச் சமஸ்கிருத மொழியின் தாக்கங்கள் காணப்படுகின்றன. பௌத்த சமயம் சீனாவுக்குப் பரவியபோது சமஸ்கிருதம் கலந்த பிராகிருத மொழி நூல்களூடாகவே பரவியது. பௌத்த நூல்கள் சீன மொழியில் எழுதப்பட்டபோது, சமஸ்கிருதச் சொற்களை ஒலிமாற்றம் செய்தே எழுதினர். இதனால் பல சமஸ்கிருத மொழிச் சொற்கள் சீன மொழியிலும் கலந்தன.
இந்திய மொழிகளல்லாத வேறும் பல மொழிகளிலும் சமஸ்கிருதச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாகத் தாய் மொழியில் பல சமஸ்கிருதச் சொற்கள் உள்ளன. இந்துக் கடலோடிகளின் வழியாகப் பிலிப்பைன் நாட்டிலும் கூட அவர்களது தகாலாக் (Tagalog) மொழியிலும் குரு (ஆசிரியர்) போன்ற சொற்கள் வழக்கில் உள்ளன.
[தொகு] ஒலியனியலும் எழுத்து முறைமையும்
சமஸ்கிருதம் 48 ஒலியன்களைக் கொண்டது (வேதகாலத்தில் 49 ஒலியன்கள் இருந்தன). பெரும்பாலான இந்திய மொழிகளின் எழுத்து வடிவங்கள் சமஸ்கிருதத்தின் அசையெழுத்து வடிவத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். உருது மற்றும் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவற்றின் எழுத்து வடிவங்கள் இதற்கு விதி விலக்காகும்.
[தொகு] வெளியிணைப்புகள்
- சமஸ்கிருதமும் லத்தீனும்- இரண்டுக்கும் உள்ள ஒற்றுமைகளை விளக்கும் கட்டுரை (தமிழ்)
- Sanskrit Documents Despite the name, a metasite with links to translations, dictionaries, tutorials, tools and other Sanskrit resources.
- GiirvaaNi - Sanskrit Classical Literature with translation
- Sanskrit Alphabet in Devanagari Script and Pronunciation Key
- The Sanskrit Alphabet
- The earliest dated illustrated Sanskrit manuscript in the world
- A list of Chinese words originated from Sanskrit
- Transliteration of Indic Languages & Scripts - including devanagari for sanskrit
- Monier-Williams Dictionary - Searchable
- Monier-Wililams Dictionary - Downloadable
- Monier-Williams Dictionary - Printable
- Online Itrans
- Samskrita Bharati