வி. தெட்சணாமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வி. தெட்சணாமூர்த்தி
தவில் இசைவித்தகர்
பிறப்பு 1933
இணுவில்,யாழ்ப்பாணம்,இலங்கை
இறப்பு மார்ச் 13, 1975
இலங்கை
பணி தவில் இசைக்கலைஞர்
துணை மனோன்மணி

அளவெட்டி தெட்சணாமூர்த்தி (1933 - மார்ச் 13, 1975) ஈழத்தின் ஒரு குறிப்பிடத்தக்க தவில் இசைக் கலைஞராவார்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணத்து இணுவில் என்னும் ஊரில் புகழ்பெற்ற தவில் மேதை விஸ்வலிங்கம், இரத்தினம் ஆகியோருக்கு மகனாக 1933 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு பெற்றோர் ஞான பண்டிதன் என்ற பெயரையே முதலில் வைத்தார்கள். பின்னர் இவரை தெட்சணாமூர்த்தி என அழைக்க ஆரம்பித்தனர். இப்பெயரே இவரது கலை வாழ்வில் நிலைத்தது.

[தொகு] இசை வாழ்வு

இவர் தனது ஆறாவது வயதில் தந்தையாரிடம் தவில் பயிற்சியை ஆரம்பித்து, யாழ்ப்பாணம் வண்ணை காமாட்சி சுந்தரம் என்பவரிடம் விரிவாகவும் நுணுக்கமாகவும் பயின்று குறுகிய காலத்தில் அரங்குகளில் வாசித்து வந்தார். இவரது தவில் வாசிப்பு, யாவரும் வியக்கும் வண்ணமும், நாத சுகமுள்ளதாகவும், லய வேலைப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்து வந்தது. இந்தியப் பெருங் கலைஞரான நாச்சியார் கோவில் ராகவ் பிள்ளையிடம் மேலும் லய சம்பந்தமான நுணுக்கங்களை பயின்று அவருடன் தவில் வாசிக்கும் பேற்றைப் பெற்றார். தொடர்ந்து இந்திய நாதஸ்வர மேதைகளாகிய காரைக்குறிச்சி அருணாசலம், ஷேக் சின்ன மெளலானா, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், டி. என். ராஜரத்தினம் பிள்ளை, போன்றவர்களுக்கு பெரும்பாலான இசை அரங்கேற்றங்களில் வாசித்து, பாராட்டுக்களையும் தங்கப்பதக்கங்களையும் பெற்றார். ஈழத்திலும் பி.எஸ். ஆறுமுகம்பிள்ளை, என். கே. பத்மநாதன், எம். பஞ்சாபிகேஷன், திருநாவுக்கரசு ஆகியோருக்கும் தவில் வாசித்தது குறிப்பிடத்தக்கது.

[தொகு] திருமண வாழ்வு

இவரது திருமணம் 1957ஆம் ஆண்டு நடைபெற்றது. மனைவி பெயர் மனோன்மணி. பிள்ளைகள் ஐவர். இவர்களில் இருவர் தவில் பயின்றார்கள். உதயசங்கர் தந்தை வழியிலேயே தவில் பயின்று தற்பொழுது தவில் வாசிப்பதில் சிறந்து விளங்கி வருபவர். மற்றவர் ஞானசங்கர்.

[தொகு] பெற்ற விருதுகள்

தெட்சணாமூர்த்தி அவர்கட்கு சென்னையின் "தங்கக் கோபுரம்" பரிசாகக் கிடைத்தது. திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளை அவர்களின் நினைவு விழாவில் தங்கத்தாலான தவிற்கேடயம் வழங்கப்பட்டது. வாழ்நாளின் பிற்பகுதியை இந்தியாவிலே செலவிட்டார். 1970 களில் இலங்கை வந்து 13.03.1975 ல் இயற்கை எய்தினார்.