சங்கிலியன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சங்கிலியன் அல்லது சங்கிலி என்பவன் 1519 தொடக்கம் 1560 வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான். இவன் 1440 தொடக்கம் 1450 வரையும், பின்னர் 1467 தொடக்கம் 1478 வரையும் யாழ்ப்பாணத்தை ஆண்ட கனகசூரிய சிங்கையாரியனின் மகனாவான். இவனுக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் இருந்தபோதும், அரசை முறையற்ற விதத்தில் இவன் கைப்பற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
சங்கிலியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலம், போத்துக்கீசர் இலங்கையில் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த காலமாகும். இலங்கையின் அரசியலிலும் தலையிடத் தொடங்கியிருந்தனர். இவர்களுடன் வந்த கத்தோலிக்கக் குருமார்கள் சமயப் பிரசாரங்களிலும், மத மாற்றங்களிலும் ஈடுபட்டிருந்தனர். யாழ்ப்பாண அரசைச் சேர்ந்த மன்னார்ப் பகுதியில் பெருமளவில் மதமாற்றம் நடைபெற்றதைக் கேள்வியுற்று, மதம் மாறிய நூற்றுக் கணக்கானவர்களை சங்கிலியன் சிரச்சேதம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் போத்துக்கீசப் பாதிரிமார்கள் சங்கிலியன் மீது கடும் கோபம் கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்து சங்கிலியனைத் தண்டிக்க வேண்டுமென்று இவர்கள் கோவாவில் இருந்த போத்துக்கீசரின் தலைமையையும், போத்துக்கல் அரசனையும் பலவழிகளிலும் வற்புறுத்தி வந்தனர்.
1560 இல் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்து வந்த அந்திராடே பூர்த்தாடு என்னும் போத்துக்கீசத் தளபதி அதனைக் கைப்பற்றிச் சங்கிலியனைக் கொன்றான்.