பின்வருநிலையணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ இவ்விரண்டுமோ பல முறை பின்னரும் வருவது.
இது மூன்று வகைப்படும்:
- சொல் பின்வருநிலையணி
- பொருள் பின்வருநிலையணி
- சொற்பொருள் பின்வருநிலையணி
[தொகு] சொல் பின்வருநிலையணி
சொல் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் வேறு ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது.
எ.கா:
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும் --திருக்குறள (592)
இக்குறட்பாவில் 'உடைமை' என்ற சொல் பெற்றிருத்தல், உடைய, பொருள் என வேறுபட்ட பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொல் பின்வருநிலையணி ஆகும்.
[தொகு] பொருள் பின்வருநிலையணி
பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருவது.
எ.கா:
அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திதழ் விண்டன கொன்றை விரிந்த கருவிளை கொண்டன காந்தள் குலை
இப்பாடலில் மலரதில் என்னும் பொருள் தரக்கூடிய அவிழ்தல், அலர்தல், நெகிழிதல், விள்ளல், விரிதல் ஆகிய சொற்கள் பல முறை வந்துள்ளமையால் இது பொருள் பின்வருநிலையணி ஆகும்
[தொகு] சொற்பொருள் பின்வருநிலையணி
சொற்பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பல முறை வருவது.
எ.கா:
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. --திருக்குறள் (299)
இக்குறட்பாவில் விளக்கு என்னும் சொல் ஒரே பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்