சில்லையூர் செல்வராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சில்லையூர் செல்வராசன் (சில்லாலை, யாழ்ப்பாணம்) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், வானொலி நாடகம், மொழிபெயர்ப்பு, விளம்பரம் எனப் பரவலான பங்களிப்புச் செய்தவர். தான் பிறந்த ஊரின் பெயரை முதல் நிலைப்படுத்தி தனது பெயரை சில்லையூர் செல்வராஜன் எனச் சூடிக்கொண்டார்.

பொருளடக்கம்

[தொகு] கவிஞர்

தான்தோன்றிக் கவிராயர் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். அங்கதப் பாணிக் கவிதைகள் எழுதிய இவரது கவிதைகள் கவியரங்குகளில் பெரு வரவேற்புப் பெற்றன. விளம்பரத்தைக் கவிதை இலக்கியமாக ஆக்கிய பெருமையும் அவரைச் சாரும். 20 ஆம் நூற்றாண்டின் மகா கவிஞராகத் திகழ்ந்த சில்லையூர் செல்வராஜன் தணியாத தாகம் என்ற வானொலி நாடகத்தை இலங்கை வானொலியில் தொடர்ந்து இயக்கிச் சாதனை படைத்தார்.

[தொகு] மொழிபெயர்ப்பாளர்

ஆங்கிலப் படத்திலும் நடித்து தன் திறமையை வெளிக்காட்டியுள்ளார். ஷேக்ஸ்பியர் கவிதைகளை தமிழில் சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். 1987 ஆம் ஆண்டு கோபல் நகரில் (பாரத்பவன்) நடைபெற்ற உலகக் கவிஞர்கள் மகாநாட்டில் பங்குபற்றிய ஒரேயொரு தமிழன் இவராவார்.

[தொகு] முற்போக்கு எழுத்தாளர்

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய அங்கத்தவராக இருந்து இலக்கியச் செயற்பாடுகளில் முன்னின்றார். 1950 இல் பொதுவுடைமைவாதியாக காலடி வைத்த சில்லையூர் செல்வராஜன் அதைப் பற்றுறுதியுடன் கடைசி மூச்சுவரை பற்றிக் கொண்டார். பண்டித வர்க்கத்தினரால் இழிசனர் வழக்கு என்று கொச்சைப்படுத்தியவர்களுக்கு எதிராக தன் கவித்துறை திறமையால் சாடி கவிதைகளைப் படைத்தார். இழிசனர் மரபு வாதத்தில் ஊறிநின்று ஓரங்க நாடகத்தைச் செய்து காட்டி அவர்களுக்குச் சாட்டையடி கொடுத்தார்.

ஆறுமுக நாவலரைப் பற்றி மேல்தட்டு வர்க்கத்தினர் கொண்டிருந்த கொள்கைகளுக்கு மாறாக, நாவலரின் மனிதநேயத்தை எடுத்தியம்பி கவியரங்குகளில் அவரின் தனித்துவத்தை நிலைநாட்டி வந்தார். பண்டித பரம்பரையினரை சாடி புதுக்கவிதைப் பரம்பரையைச் சில்லையூரான் முன்வைத்தார்.

[தொகு] அங்கதக் கவிஞர்

யாழ்ப்பாணச் சாதி முறைக்கு எதிராக புதிய வர்க்க பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க அங்கத மொழியில் செல்வராஜன் சங்கநாததத்துடன் கவிதையால் எடுத்தியம்பியுள்ளார். சமுதாய அடக்குமுறைக்கு, அநியாயங்களுக்கு, மூடக் கொள்கைகளுக்கு எதிராக அவற்றை ஒழித்துக்கட்ட கவிதையால் சாடினார். அங்கதக் கவிதைகள் புதுமைக் கருத்தை இலக்கியத்தில் புகுத்தின. தலைவர்கள் வாழ்க மாதோ என்ற அங்கதக் கவிதை மூலம் அரசியல் தலைவர்களை சில்லையூரான் சாடினார்.

[தொகு] பத்திரிகை ஆசிரியர்

பரந்த கலைப் பரப்பை கொண்டிருந்த செல்வராஜன் பத்திரிகைத் துறையிலும் தடம் பதித்திருந்தார். சுதந்திரன், அடுத்து வீரகேசரி ஞாயிறு பதிப்பில் சிலகாலம் பொறுப்பாசிரியராக இருந்து இலங்கை எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தார்.

[தொகு] இவரது நூல்கள்

  • ஊரடங்கப் பாடல்கள்
  • ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

[தொகு] வெளி இணைப்புக்கள்