நார்த்தாமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பொருளடக்கம்

[தொகு] அறிமுகம்

வளமில்லா மாவட்டம் வளர்ச்சி பெறாத மாவட்டம் என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது இந்தக் குன்று. இன்ற பிரதான சாலையிலிருந்து தள்ளியிருக்கும் அந்தக் குன்றில் கலையழகு மிகுந்த கோயில்களைக் கட்ட ஒருவர் மாற்றி ஒருவராக மூன்று அரச வம்சங்களைச் சேர்ந்த மன்னர்கள் ஏறி இறங்கியிருக்கிறார்கள்.

மூன்று கால கட்டங்களைச் சேர்ந்த கோயில்களை ஒரு சேரப் பார்க்க வாய்ப்பளிக்கும் அந்த இடம் நார்த்தாமலை.


[தொகு] அமைவிடம்

திருச்சிராப்பள்ளி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் திருச்சிராப்பள்ளியிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும் புதுக்கோட்டையிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது நார்த்தாமலை (பொம்மாடிமலை) பேருந்து நிறுத்தம்.


[தொகு] கடம்பர் கோயில்

அங்கிருந்து. உள்ளே 2 கி.மீ தொலைவில், ஊர் நுழைவாயிலுக்கு வலது பக்கத்தில் உள்ளது கடம்பர் மலைக்குன்று. இங்கு முதலாம் இராஜராஜ சோழன் (10 ஆம் நூற்றாண்டு) காலத்திய சிவன் கோயில் ஒன்று பிரதானமாக உள்ளது. இக்கோயிலில் மலைக்கடம்பூர் தேவர் வீற்றிருக்கிறார். இதற்க அருகில் நகரீஸ்வரம் என்ற சிவன் கோயிலும் மங்களாம்பிகை அம்மன் கோயிலும் இருக்கின்றன. இந்தக் கோயில்கள் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (13 நூ.ஆ) காலத்தில் கட்டப்பட்டவை. இப்பகுதியில் மங்கள தீர்த்தம் என்ற குளம் உள்ளது.

குன்றின் அடிவாரப்பகுதியில் பாறை குழிவாகக் குடையப்பட்டு பெரியதொரு கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. அதில் சில இடங்கள் சேதமடைந்துள்ளன. முதலாம் ராஜராஜன் காலம் முதல் சோழ அரசர்களில் கடைசி மன்னனான மூன்றாம் ராஜேந்திர சோழன் காலம் வரையிலான கல்வெட்டுக்கள் இந்த வளாகத்தில் உள்ளன.


[தொகு] நார்த்தாமலை குன்றுக் கூட்டம்

நார்த்தாமலையின் அற்புதங்களுக்கு இந்த கடம்பர் கோயில் ஒரு தொடக்கம் மட்டுமே. நார்த்தாமலையில் மொத்தம் ஒன்பது குன்றுகள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை கடம்பர்மலை, மேலமலை, ஆளுருட்டிமலை என்பன.


[தொகு] மேலமலை

ஊரிலிருந்து அன்னவாசல் செல்லும் சாலையில் இருக்கிறது மேலமலை. அதன் அடிவாரத்தில் சிறு குளம் இருக்கிறது. அங்கிருந்து சிறிது சிறிதாக உயர்ந்து செல்கிறது குன்று.

முதலில் பிள்ளையார் கோயில் உள்ளது. அதன் பின்புறம் தலையருவிசிங்கம் என்ற சுனை உள்ளது. அங்கிருந்து பார்க்கும்போது சுற்றிலும் உள்ள மற்ற குன்றுகள் தெரிகின்றன. ஊரின் தென்கிழக்கே மரங்கள் அடர்ந்த சிறுமலைகள் இருக்கின்றன. இந்தக் காடுகள் ஆண்டு முழுவதும் பசுமை மாறாத முட்புதர் காடுகளாகும். இவை இந்தியாவில் மிக அரிதாகவே காணப்படுகின்றன.


[தொகு] சமணர் குடகு

நீண்டு செல்லும் குன்றின் முக்கால் பங்கு உயரத்தில் விஜயாலய சோழீஸ்வரம் கோயிலும் சுற்றி ஆறு சிறு கோயில் கட்டுமானங்களும் உள்ளன. பிரதானக் கோயிலில் நந்திக்குப் பின்னால் இரு குடைவரை கோயில்கள் உள்ளன. முதலாவது சமணர் குடகு அல்லது பதினெண்பூமி விண்ணகரம் என்று அழைக்கப்படும் பெரிய குகை.

ஏழாம் நூற்றாண்டில் சமணர் குகையாக இருந்த இந்த இந்த குடைவரைக் கோயில் பிற்காலத்தில் விஷ்ணு கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. இதன் அர்த்த மண்டபத்தில் 2 ஆளுயர விஷ்ணு சிலைகள் உள்ளன.

இந்த மண்டபத்திற்கு முன்னுள்ள மேடையின் பீடத்தில் யாளி, யானை, சிங்கம் உள்ளிட்ட உருவங்களை வரிசையாகக் கொண்ட சிற்பத்தொகுதி உள்ளது. இவற்றில் சிற்பிகளின் அற்புத கலைத் திறனைக் காணமுடிகிறது.


[தொகு] பழியிலி ஈஸ்வரம்

தெற்கே உள்ள பழியிலி ஈஸ்வரம் என்ற சிறிய குடைவரை சிவன் கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவராயர்களின் ஆட்சியின் கீழ் முத்தரையர் தலைவன் சாத்தன் பழியிலி கட்டியது.


[தொகு] விஜயாலய சோழீஸ்வரம்

விஜயாலய சோழீஸ்வரம் கோயிலை முத்தரையர் தலைவர் இளங்கோ அடி அரையன் கட்டியுள்ளார். சோழர் காலத்தில் கட்டப்பட்ட முற்பட்ட சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று. பிரதான கோயிலின் வாயிலில் கலையழகு மிளிரும் இரு துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. கோபுரத்தில் நடன மங்கைகள் உள்பட பல அற்புதச் சிலைகள் உள்ளன.

பிரதானக் கோயிலின் கருவறை வட்ட வடிவில் உள்ளது தனிச்சிறப்பு. உள்ளே பெரிய சிவலிங்கம் உள்ளது. பிரதான கோயிலின் அர்த்த மண்டபத்தில் சாந்து பூசப்பட்டு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று கருதப்படுகிறது.


[தொகு] முடிவு

குன்றிலிருந்து கீழே செல்லும் பாதையில் அய்யனார் கிராம தெய்வ கோயில் அமைந்துள்ளது. மேலமலையில் குளிர்ச்சி தரும் பாறைகளின் நடுவே மரங்களின் சூழலை அனுபவிப்பதற்காக பலர் இந்த இடத்துக்கு வருகிறார்கள். ஆனால் நார்த்தாமலையில் மயில்களின் அகவல்கள் இனிமையாக ஒலித்துக்கொண்டிருக்கும் அதே நேரம் பாறைகளை உடைத்து விற்கும் கிரானைட் நிறுவனங்களின் வெடிச் சப்தமும் கேட்கிறது.