Wikipedia:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 2006

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

< Wikipedia:இன்றைய சிறப்புப் படம்

நவம்பர் 3, 2006

ஏர் பூட்டிய குதிரை

ஏர் என்பது நிலத்தைக் கிளறிப் பயிர்ச் செய்கைக்கு உகந்ததாக்குவதற்கு உதவும் ஒரு கருவியாகும். ஏர்கள் விவசாயத்திற்கு மட்டுமன்றி கடலடி கம்பிவடங்கள் பதிப்பதற்கும் எரி எண்ணெய் கண்டுபிடிப்பதற்கும் உதவுகின்றன.

முற்காலத்தில் மனிதனால் இழுத்துச் செல்லப்பட்ட இவை பின்னர் காளைகளாலும் சில நாடுகளில் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்பட்டன. தொழிற்புரட்சி ஏற்பட்டு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு உழுவுந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...

நவம்பர் 12, 2006

சே குவேரா

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) (ஜுன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) ஆஜன்ரீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி என பல முகங்களைக்கொண்டவர்.

அல்பர்டோ கொர்டோ எடுத்த இப்புகைப்படம் உலகெங்கும் பரவலாக அறியப்பட்ட ஒன்று. இப்படம் உலகின் மிகவும் புகழ்பெற்ற புகைப்படம் என்றும் இருபதாம் நூற்றாண்டின் சின்னங்களில் ஒன்று என்றும் Maryland Institute College of Art கருதுகிறது.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...

நவம்பர் 13, 2006

கருங்கடல்

கருங்கடல் நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டுள்ள ஒரு கடல் ஆகும். இது தென்கிழக்கு ஐரோப்பாவுக்கும், அனதோலியாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. இது மத்தியதரைக் கடலூடாக அத்திலாந்திக் பெருங்கடலுடன் தொடர்பு உடையது. இது பொஸ்போரஸ், மற்றும் மர்மாராக் கடல் ஊடாக மத்தியதரைக் கடலுடனும், கேர்ச் நீரிணையூடாக அஸோவ் கடலுடனும் தொடுக்கப்பட்டுள்ளது.

கருங்கடல் 422,000 கிமீ3 பரப்பளவும், 2210 மீட்டர் அதிகூடிய ஆழமும் கொண்டது. பொஸ்போரஸ் ஊடாக கடல் நீர் உள்வரத்து ஆண்டுக்கு 200 கிமீ3 ஆகும். சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து, சிறப்பாக, மத்திய மற்றும் மைய-கிழக்கு ஐரோப்பா பகுதிகளிலிருந்து, 320 கிமீ3 நன்னீர் கருங்கடலினுள் சேருகின்றது. இக் கடலுட் கலக்கும் முக்கியமான ஆறு தன்யூப் (Danube) ஆறு ஆகும்.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...

நவம்பர் 14, 2006

புலிக்கோவில்

புலிக்கோவில் அல்லது வாட் ஃவா லுவாங் டா புவா மேற்குத் தாய்லாந்தில் உள்ள ஒரு புத்தக் கோவில் ஆகும். இக்கோவிலில் புலிகள் உட்பட பல விலங்குகள் கட்டின்றி சுற்றித்திரிகின்றன. இக்கோவிலுக்கு முதலில் கிராம மக்களால் ஒரு புலிக்குட்டி கொடுக்கப்பட்டது. பின்னர் அது இறந்து விட்டது. பின்னர் தாய்ப்புலிகள் வேட்டைக்காரர்களால் கொல்லப்படும்போது விடப்படும் பல புலிக்குட்டிகள் இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன. 2006ஆம் ஆண்டு கணக்கின்படி மொத்தம் 18 புலிகள் உள்ளன. இப்புலிகள் பெரும்பாலன நேரம் கூண்டுகளிலேயே இருக்கின்றன. உலர்ந்த பூனை இறைச்சியும் சமைக்கப்பட்ட கோழியும் இவற்றிற்கு உணவாகக் கொடுக்கப்படுகின்றன. கிப்பன் குரங்கு, மான் ஆகியனவும் இக்கோவிலில் உள்ளன.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...

நவம்பர் 15, 2006

புரூக்ளின் பாலம்

புரூக்ளின் பாலம் (Brooklyn Bridge) ஐக்கிய அமெரிக்காவில், நியூ யார்க் மாநிலத்தில் உள்ள பழைமையான தொங்குபாலங்களில் ஒன்றாகும். 5,989 அடி (1825 மீ) நீளமுள்ள இப்பாலம் கிழக்கு ஆற்றின் மீது மேன்ஹேட்டனில் இருந்து புரூக்ளின் வரை கட்டப்பட்டுள்ளது. இது கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் ஜனவரி 3, 1870-ல் தொடங்கியது. பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மே 24, 1883-ல் இது கட்டிமுடிக்கப்பட்டது. முதல் நாள், மொத்தம் 1,800 ஊர்திகளும் 150,300 மக்களும் இப்பாலத்தைக் கடந்தனர்.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...

நவம்பர் 16, 2006

சிங்கப்பூர் நகர போட் குவே

படத்தில் காணப்படுவது சிங்கப்பூர் நகர போட் குவே பகுதியின் இரவுத் தோற்றமாகும்.

சிங்கப்பூர் குடியரசு, என்பது தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு நாடு. சிங்கப்பூர் தீவிற்கு வடக்கில் மலேசியாவும், தெற்கில் இந்தோனீசிய ரியாஉ (Riau) தீவுகளும் உள்ளன.சிங்கப்பூரின் வரலாறு 14 ஆம் நூற்றாண்டிலிருந்து குறிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன் சிங்கப்பூரும் மலேசியாவும் கடாரம் கொண்ட சோழ மண்டலத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கலாம் என்று தமிழ்நாட்டின் வரலாறு காட்டுகிறது. 14 ஆம் நூற்றாண்டில் அது "துமாசிக்" என்ற பெயர் கொண்ட நகரமாக காட்சியளித்தது. அது சுமாத்திராவில் இயங்கிய ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் ஆட்சிக்கு உட்பட்டது. சிங்கை தீவில் ஒரு நகரம் இருந்தது என்றும் அந்த நகரம் தென்கிழக்காசியாவில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது என்று மலாய் மக்களின் வரலாறு கூறுகிறது.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...

நவம்பர் 17, 2006

பஸ் ஆல்ட்ரின்

அப்பல்லோ 11 பயணத்திட்டத்தின் மூலம் முதன் முதலில் நிலவில் இறங்கிய விண்வெளி வீரர்களில் ஒருவரான பஸ் ஆல்ட்ரின், நிலவில் அமெரிக்கக் கொடியை நட்டு வணக்கம் செலுத்துவதை இப்படம் காட்டுகிறது. அப்பல்லோ 11 பயணத்திட்டமே நிலவில் முதன்முதலில் ஆளிறங்கிய நிகழ்வாகும். இது அப்பல்லோ திட்டத்தில் ஐந்தாவது ஆளேற்றிய பயணத் திட்டமாகும்.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...

நவம்பர் 18, 2006

பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி என்பது கண்ணைக் கவரும் மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள ஒரு பறக்கும் பூச்சி. இப்பூச்சிகள் மலர்களில் இருந்து தேனை உறிஞ்சிப் பருகுவதும், மிக ஒடிசலாக இங்கும் அங்கும் பறப்பதும் பலரும் கண்டு களிப்பது. இப்பூச்சி முட்டையிலிருந்து பட்டாம்பூச்சியாய் வளர்ச்சியடைவதும் மிகவும் வியப்பூட்டுவதாகும். பட்டாம்பூச்சிகள் உயிரின வகைப்பாடுகளில் லெப்பிடோப்டரா (Lepidoptera) என்னும் அறிவியல் பெயர் தாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவை.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...

நவம்பர் 19, 2006

தாமரை மொட்டு

தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். இதன் அறிவியல் பெயர் நெலும்போ நூசிபேரா (Nelumbo nucifera) என்பதாகும். பண்டைய எகிப்து நாட்டில் நைல் நதிக் கரையோரங்களில் பரவலாகக் காணப்பட்ட தாமரை, எகிப்தியர்களால் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்பட்டது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. எகிப்திலிருந்து அசிரியாவுக்குப் பரவிய தாமரை அங்கிருந்து, பாரசீகம், இந்தியா, சீனா முதலிய நாடுகளுக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது.

படத்தில் தாமரை மொட்டு ஒன்று காட்டப்பட்டுள்ளது.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...

நவம்பர் 20, 2006

F/A-18C விமானம் ஒலித்தடையை தாண்டுதல்

ஒலி முழக்கம் என்பது, வளியில் ஏற்படும் அதிர்வலை ஒன்றின் செவிப்புலனாகக்கூடிய கூறாகும். இச்சொல்லானது பொதுவாக மீயொலி விமானங்கள், விண்வெளி ஓடங்கள் போன்றனவற்றின் பறப்பின் காரணமாக ஏற்படும் வளி அதிர்ச்சியை குறிக்கவே பயன்படுகிறது. இவ் ஒலி முழக்கமானது மிகப் பெருமளவிலான ஒலி வலுவினை உற்பத்திசெய்கிறது. இதன் போது ஏற்படும் முழக்கம் குண்டு வெடிப்பினை போன்று மிகப்பெரும் ஓசையுடையதாய் இருக்கும். சாதாரணமாக இவ்வதிர்வலைகள் சதுர மீட்டருக்கு 167 மெகா வாட்டுக்களாகவும், 200 டெசிபலை அண்மித்ததாகவும் இருக்கும்.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...

நவம்பர் 21, 2006

கழுகு என்பது ஒரு வலுவான பெரிய பறவையையும் அதன் இனத்தையும் குறிக்கும். இப்பறவைகளுக்கு பெரிய கண்களும் கூரிய நுனியுடைய வளைந்த அலகும், வலுவான உகிர்களைக் (உகிர் = நகம்) கொண்ட கால்களும், அகண்டு நீண்ட இறக்கைகளும் உள்ளன. இவைகளின் கண் பார்வை மிகவும் கூரியது. மிக உயரத்திலே பறந்தாலும், தரையில் நகரும் எலி, கோழிக்குஞ்சு போன்ற சிறு விலங்குகளைக் கண்டால், சடார் என்று கீழே பாய்ந்து தம் வல்லுகிரால் கவ்விக் கொண்டு போய் கொன்று உண்ணும். சிறு விலங்குகளை இவ்வாறு கொன்று தின்பதால், இப் பறவைகளைக் கொன்றுண்ணிப் பறவைகள் என்று சொல்வதுண்டு.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...

நவம்பர் 22, 2006

சிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. சிங்கத்தைத் தமிழில் அரிமா என்றும் ஆண் சிங்கத்தை ஏறு என்றும் கூறுவது வழக்கம். ஏறுகளின் கழுத்தில் பிடரி இருப்பது சிறப்பாகும். பிடரியை உளை என்றும் உளை மயிர் என்றும் கூறுவதுண்டு. அரிமா பூனைப் பேரினத்தைச் சேர்ந்தது. பூனை பேரினத்திலேயே, புலிக்கு (வரிப்புலிக்கு) அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250 கிலோகிராம் வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் அரிமா 120-150 கிலோ கிராம் எடை கொண்டதாக இருக்கும். இவ்விலங்கு இன்று ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...

நவம்பர் 23, 2006

பூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் பூனைகள் சைவ உணவையும் உண்கின்றன. இவை பொதுவாக 2.5 லிருந்து 7 கிலோ வரை எடை கொண்டவையாக இருக்கின்றன. பூனைகள் இரவில் நன்றாகப் பார்க்கும் திறன் கொண்டவை.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...

நவம்பர் 24, 2006

ஆப்பிள் ஒரு குளிர் பகுதிப் பழம் ஆகும். பழுத்த ஆப்பிள் வெளிப்புறம் பெரும்பாலும் சிவப்பாகவும், சில இரகங்களில் இளம்பச்சை அல்லது மஞ்சளாகவோ காணப்படும். ஆப்பிள் பழத்தின் தோல் மெல்லியதாயும், பழச்சதை உறுதியாகவும் இருக்கும். சதையின் உள்ளே சில சிறு விதைகள் இருக்கும். மத்திய ஆசியாவில் தான் ஆப்பிள் முதலில் பயிர் செய்யப்பட்டது. தற்போது, ஆப்பிள் உலகின் எல்லா குளிர் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. ஆப்பிளின் அறிவியல் பெயர் Malus sp. ஆப்பிள் மற்ற பழங்களைப் போல பெரும்பாலும் சமைக்கப்படாமலேயே சாப்பிடப்பட்டாலும் அது பல பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிளைக் கொண்டு பழரசங்களும், சிடர் என்ற பானமும் தயாரிக்கப்படுகின்றன.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...

நவம்பர் 25, 2006

இலை ஒளிச்சேர்க்கைக்கு உதவும் ஒரு தாவரப் பகுதியாகும்.சூரிய ஒளியைப் பெற வேண்டி இலைகள் தட்டையாகவும் நீண்டும் இருக்கின்றன. பச்சையம் என்ற நிறமியின் காரணமாக இலைகள் பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கின்றன. இலைகள் பொதுவாக உணவையும் நீரையும் சேமித்து வைப்பினும் சில தாவரங்களில் வேறு விதங்களிலும் பயன்படுகின்றன.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...

நவம்பர் 26, 2006

சுற்றிழுப்பசைவு (peristalsis) என்பது அடுத்தடுத்து நிகழும் தசைச்சுருக்கங்களால் ஒரு குழாய் வழியாக ஏற்படும் பொருட்களின் நகர்ச்சியைக் குறிக்கும். விலங்குகளின் உணவுக்குழாய் வழியே உணவு நகர்தல் இம்முறையின் பொதுவான எடுத்துக்காட்டு ஆகும். முட்டைக் குழாய் (oviduct) வழியே கருவுறு முட்டைகள் நகர்தல், சிறுநீரக நாளம் (ureter) வழியாக சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பை வரை சிறுநீர் நகர்தல், புணர்ச்சிப் பரவசநிலையின் போது விந்து தள்ளப்படுதல் முதலியவை இவ்வசைவினால் தான்.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...

நவம்பர் 27, 2006

இயக்கமூட்டல் (Animation) என்பது நிலையான படிமங்களை அடுத்தடுத்துக் காட்சியளிக்க வைப்பதன் மூலம் படத்திலுள்ள பொருள் இயங்குவது போன்ற மாயத் தோற்றத்தை உருவாகுவதாகும். திரைப்படங்கள் மற்றும் வீடியோ தயாரிப்புகளில், இது திரைப்படம் அல்லது அசையும் படத்திலுள்ள ஒவ்வொரு சட்டத்தையும் தனித்தனி உருவாக்க உதவும் தொழில் நுட்பத்தைக் குறிக்கிறது. இச் சட்டங்கள் கணினியின் உதவியுடனும் உருவாக்கப்படலாம், அல்லது கையால் வரையப்பட்ட படங்களைப் படம் பிடிக்கலாம், அல்லது ஒரு மாதிரிக் கூறு ஒன்றுக்கு அடுத்தடுத்துச் சிறிய மாற்றங்களைச் செய்து அதனைச் சிறப்பு இயக்கமூட்டல் நிழற்படக் கருவி மூலம் படம் பிடிக்கலாம். இவ்வாறு உருவாக்கப்பட்ட படங்களைத் தொடராக அடுக்கி ஓடவிடுவதன் மூலம், persistence of vision எனப்படும் தோற்றப்பாடு காரணமாக படம் தொடர்ச்சியாக இயங்குவது போன்ற மாயத்தோற்றம் ஏற்படும்.


படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...

நவம்பர் 28, 2006

சீனப் பெருஞ் சுவர் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவில் இருந்தும், மஞ்சூரியாவில் இருந்தும் வந்த 'காட்டுமிராண்டி'களின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காகக் கட்டப்பட்ட அரண் ஆகும். சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அன்று; அவர்கள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே நோக்கம் ஆகும். இது யாலு நதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது.

படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்...