மந்திரிமனை (நல்லூர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கையின் வடபகுதியிலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரில், அவ்வரசர் காலத்தோடு பொதுவாகச் சம்பந்தப்படுத்தப்படும் ஒரு கட்டிடமே மந்திரிமனை ஆகும். போத்துக்கீசரிடம் யாழ்ப்பாணம் வீழ்வதற்குமுன் அக்கால அமைச்சர் ஒருவரின் இருப்பிடம் இதுவெனக் கூறப்படுகிறது. இக்கட்டிடம் இருக்கும் நிலமும், இதனைச் சுற்றியுள்ள பகுதிகளும், அரசத்தொடர்பு உடையவை என்பதில் ஐயமில்லை. சிறுவனாக இருந்த கடைசி மன்னன் சார்பில் அரசப்பிரதிநிதியாக இருந்த சங்கிலிகுமாரனுடைய அரண்மனையும், அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த நல்லூர் கந்தசுவாமி கோயிலும், வேறும் பல அரசத்தொடர்புள்ளவைகளும், இதற்கு அண்மையாகவேயுள்ளன.
எனினும் இக்கட்டிடத்தின் அமைப்பை நோக்கும்போது, இது, பல யாழ்ப்பானச் சரித்திரவியலாளர் கூறுவது போல் ஒரு ஒல்லாந்தர் காலக் கட்டிடமென்றே கூற முடியும். இக் கட்டிடத்தின் உள்ளே மரத்தாலான சில தூண்கள், போதிகைகள் உட்படச் சில பகுதிகள், யாழ்ப்பாண அரசு காலத்தைச் சேர்ந்தவையெனக் கருதப்படுகிறது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபின், தலைநகரத்தை நல்லூரிலிருந்து யாழ்ப்பாண நகருக்கு மாற்றினாலும், நல்லூரில் எஞ்சியிருந்த அரச கட்டிடங்களும், நிலங்களும் போத்துக்கீசரின் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. பின்னர் வந்த ஒல்லாந்தரும் இவ்வாறே பயன் படுத்தினர். பின்னவர்கள் மேற்சொன்ன நிலங்களிலே புதிய கட்டிடங்களைக் கட்டிய ஆதாரங்களும் உண்டு. மந்திரிமனை என அழைக்கப்படும் இந்தக் கட்டிடமும் இவ்வாறே புதிதாக அமைக்கப்பட்ட அல்லது பெருமளவுக்குத் திருத்தியமைக்கப்பட்ட கட்டிடமாகவே இருக்கவேண்டும்.
இக்கட்டிடம் தற்போதைய உரிமையாளர்களின் கைக்கு வந்தபின்னரும், கடந்த நூற்றாண்டில் திருத்தவேலைகள் நடைபெற்றிருப்பதாகத் தெரிகிறது. எப்படியாயினும், யாழ்ப்பாணத்தில் அதன் காலனித்துவ காலத்துக்கு முற்பட்ட தொடர்புகளைக் கொண்ட, எஞ்சியுள்ள மிகச் சில கட்டிடங்களில் ஒன்று என்றவகையில் இது முக்கியத்துவம் பெறுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்வரை இக்கட்டிடம், அருகிலுள்ள சட்டநாதர் சிவன் கோயிலுடன் தொடர்புடைய குடும்பமொன்றினால் இருப்பிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அக்காலத்திலேயே இதன் பெரும்பகுதி கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தது. அண்மைக்காலத்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் இக்கட்டிடமும் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது.