மெய்கண்ட சாத்திரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தமிழ் நாட்டிலே சைவ சமயத்துக்குரிய அடிப்படையான தத்துவமாக எழுந்தது சைவ சித்தாந்தம். இந்தத் தத்துவத்தை விளக்க, 12 தொடக்கம் 14 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தோன்றிய பதிநான்கு நூல்கள் ஒருங்கே மெய்கண்ட சாத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை,

  1. சிவஞான போதம்
  2. சிவஞான சித்தியார்
  3. இருபா இருபது
  4. திருவுந்தியார்
  5. திருக்களிற்றுப்படியார்
  6. உண்மை விளக்கம்
  7. சிவப்பிரகாசம்
  8. வினா வெண்பா
  9. திருவருட் பயன்
  10. போற்றிப் பஃறொடை
  11. நெஞ்சுவிடுதூது
  12. கொடிக்கவி
  13. உண்மை நெறி விளக்கம்
  14. சங்கற்ப நிராகரணம்

என்பனவாம். இந்தப் 14 நூல்களுள்ளும் தலை சிறந்ததாகக் கருதப்படுவது மெய்கண்டார் இயற்றிய சிவஞான போதம் ஆகும். இந்தப் 14 நூல்களும் பல்வேறு ஆசிரியர்களால் இயற்றப்பட்டிருப்பினும், இவற்றுட் தலையாய நூலை எழுதிய மெய்கண்டார் பெயரிலேயே முழுத் தொகுதியையும் மெய்கண்ட சாத்திரம் என்கின்றனர். சிவஞான சித்தியார், இருபா இருபது ஆகிய இரு நூல்களையும் இயற்றியவர் அருள்நந்தி சிவாச்சாரியார். திருவுந்தியார் திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் என்பவராலும், திருக்களிற்றுப்படியார் திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் என்பவராலும் எழுதப்பட்டவை. உண்மை விளக்கம் என்ற நூல் திருவதிகை மனவாசகங் கடந்தார் என்பவரால் எழுதப்பட்டது. சிவப்பிரகாசம் முதல் சங்கற்ப நிராகரணம் ஈறாகவுள்ள எட்டு நூல்களையும் இயற்றியவர் உமாபதி சிவாசாரியார் ஆவார்.