சுர்ஜித் சிங் பர்னாலா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சர்தார் சுர்ஜித் சிங் பர்னாலா (பிறப்பு - அக்டோபர் 21, 1925) இந்திய அரசியல்வாதி ஆவார். தற்பொழுது, தமிழ்நாடு மாநில ஆளுநராக உள்ளார்.
சுர்ஜித் சிங், ஹரியானா மாநிலத்திலுள்ள அடேலி பேக்பூரில் பிறந்தார். பள்ளி படிப்பை நாபாவில் முடித்தவுடன் உயர் கல்வி கற்க லக்னோ சென்று லக்னோ பல்கலைகழகத்தில் 1946 ம் ஆண்டு சட்டம் பயின்று தேறினார். அவர் 1942 ம் ஆண்டு லக்னோவில் இருந்தபோது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டார். 1967 ம் ஆண்டு பர்னாலாவில் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். அதே ஆண்டு பர்னாலா தொகுதியிலிருந்து சட்டமன்ற பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தத்தொகுதி உறுப்பினராக 1999 ம் ஆண்டு வரை இருந்தார். 1969 ம் ஆண்டு பஞ்சாப் மாநில கல்வி அமைச்சரானார். அமிர்தசரஸிலிருக்கும் குரு நானக் தேவ் பல்கலைகழகம் அமைந்ததில் இவருடைய சேவை குறிப்பிடத்தக்கது. 1977 ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகி மொரார்ஜி தேசாய் தலைமையில் விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சரானார். 1985 ம் ஆண்டு சிரோமணி அகாலி தள் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பஞ்சாப் மாநில முதல்வரானார்.
1990 ம் ஆண்டு தமிழ்நாட்டு ஆளுநராக நியமிக்கப்பட்டார். மக்களவை உறுப்பினராக 1996 மற்றும் 1998 ம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு வேதிப்பொருட்கள், உரம் மற்றும் உணவுத்துறை அமைச்சரானார்.
இந்திய நாட்டு பிரதிநிதியாக ஐக்கிய நாட்டு சபை போன்ற அனைத்துலக நிறுவனங்களில் இடம் பெற்றிருந்தார். இவர் இயற்கையை ரசித்தல், ஓவியம் வரைதல், புத்தகம் படித்தல், எழுதுதல் மற்றும் பயணம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். 1988 ம் ஆண்டு இவருடைய ஓவியங்கள் பாட்டியாலா பல்கலைகழக கலைக்கூடத்தில் கண்காட்சியாக்கப்பட்டது. உத்தராஞ்சல் மாதில ஆளுநராக 2000 முதல் 2004 வரையிலும், ஆந்திரப் பிரதேச ஆளுநராக 2003 முதல் 2004 வரையிலும் இருந்தார்.
தமிழ் நாடு அரசு ஆளுநராக 03. 11. 2004 அன்று பொறுப்பேற்றார்.
[தொகு] ஆதாரம்
- தமிழ்நாடு அரசுக் குறிப்பு. இணைப்பு 2006-09-12 அன்று அணுகப்பட்டது.