நிறக்குருடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நிறக்குருடு (Colour blindness) என்பது மனிதர்களில் சிலரால் பெரும்பாலானவர்களைப்போல சில நிறங்களுக்கிடையேயான வேறுபாடுகளை உணர இயலாமையைக் குறிக்கும் சொல். இது பெரும்பாலும் மரபணு அடிப்படையில் ஏற்பட்டாலும், சில சூழல்களில், மூளை, நரம்பு, அல்லது விழிகள் ஆகியவற்றில் ஏற்படும் கோளாறின் விளைவாகவோ சில வேதிப் பொருட்களினாலோ ஏற்படக் கூடும். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் டால்டன் என்பவர் 1794-ம் ஆண்டு எழுதிய நிறங்களின் பார்த்தல் உணர்வைப் பற்றிய சிறப்பு உண்மைகள் என்ற தலைப்பிட்ட ஒரு அறிவியல் கட்டுரையில் இதுபற்றி எழுதினார். இவரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பெயரால் இந்நோய் டால்டனிஸம் என்று நெடுநாள் வழங்கப்பட்டது. எனினும் தற்போது இந்த பெயர் பச்சை நிறத்தை உணர இயலாமையாகிய டியூட்டெரனோபியா என்ற நோயை மட்டும் குறிக்கிறது.


பொதுவாக, இது ஒரு குறைபாடாகவே கருதப்பட்டு வந்தாலும், சில சூழல்களில் இது உதவவும் செய்கிறது. எடுத்துக்காட்டாக, இந்நோய் உடைய வேடர்கள் சிலரால் பின்புலத்தில் உள்ளவற்றினால் வரும் குழப்பத்தைத் தவிர்த்து தங்கள் குறியைச் சரியாக வைக்க முடிகின்றது. அதேபோல், இந்நோய் உடைய போர்வீரர்களில் சிலரால் மறைமுகத்திற்கான பலநிற சிறப்பு உடைகளில் உள்ள எதிரி வீரர்களையும் தளவாடங்களையும் எளிதில் அடையாளம் காண முடியும். ஒரே நிறத்தில் மட்டும் பார்க்க முடிகின்றவர்களால் இருட்டில் உடனடியாகப் பார்க்க முடியும்.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளி இணைப்புகள்