இளையபெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இளையபெருமாள் லட்சுமணன் (L. Ilayaperumal) (ஜூன் 26, 1924 - செப்டம்பர் 9, 2005) தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட ஒரு தலைவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், இருபது வருடங்கள் (1952 - ) நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். தலித் மக்களுக்காக ஆற்றிய தொண்டிற்காகவும், குறிப்பிட்ட சில பகுதிகளில் தலித் மக்களுக்கு இருந்த இழிநிலையினை ஒழித்ததற்காகவும் இவர் நினைவுக்கூறப்படுவார் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

[தொகு] வாழ்க்கை

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் பிறந்தவர் இளையபெருமாள். பள்ளிகளில் தலித்துகளுக்காக தனி பானையும், மற்றவர்களுக்காக தனி பானையும் இருப்பதை பார்த்திருக்கிறார். எவருக்கும் தெரியாமல், பறையர்களின் பானை என்று எழுதப்பட்டிருக்கும் பானையை தொடர்ந்து உடைத்துக் கொண்டு வந்தார். ஒரு நாள் உடைக்கும் போது பள்ளி முதல்வரிடம் பிடிபட்ட போதும், தன்னுடைய செய்கையின் நியாயத்தினை முன்வைக்கத் தயங்கவில்லை. அவரால் அன்று முதல் மாணாக்கர்களுக்கு இருந்த வந்த இரு குவளை முறை நீக்கப்பட்டது.

இளையபெருமாள் 1945ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1946ல் காட்டுமன்னார்குடிக்கு திரும்பும் போது ஒரு போராட்டத்தினை மேற்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. உடல் நிலை சரியில்லாததால், வேலைக்கு இரு நாள் செல்லாத தலித் ஒருவர், பண்ணையார் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். காயமுற்றவரை இளையபெருமாள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றும், குற்றப்பத்திரிக்கை பதிவு செய்ய மறுத்துள்ளனர். பல தலித்துகளை ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் இளையபெருமாள். துன்புறுத்திய அந்த பண்ணையாரிடமிருந்து நூறு ரூபாய் அபராதம் பெற்று தரும்வரை இளையபெருமாள் ஓயவில்லை.

நிலமற்ற கூலிவேலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், மாட்டிறைச்சி சாப்பிடுவதை எதிர்த்தும், இடைநிலை சாதியினர் சம்பந்தப் பட்ட நிகழ்ச்சிகளை பறையடித்து அறிவிப்பதற்காக மட்டுமே தலித் மக்கள் ஈடுபடுத்தப்படுவதை எதிர்த்தும் அவர் போராட்டங்கள் நடத்தியிருக்கிறார். மேல்சாதி மக்களால் போலிக்குற்றம் சாட்டப்பட்டு ஆறு மாதம் சிறையில் அடைபட்டார். இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு இவருடைய சமூக சேவைக்காக தங்கப் பதக்கம் கொடுக்கப்பட்டது.

[தொகு] வெளி இணைப்புகள்