நித்தி கனகரத்தினம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நித்தி கனகரத்தினம் இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற பொப்பிசைப் பாடகர். பல மொழிப் பாடல்கள் பாடுவதிலே திறமைவாய்ந்தவர். பொப்பிசைச் சக்கரவர்த்தி எனப் பாராட்டுப் பெற்றவர். 70களில் நித்தி கனகரத்தினம் இலங்கை மேடைகளில் கோலோச்சியவர்.
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
ஈழத்தில் யாழ்ப்பாணம் உரும்பராயில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை யாழ் வேம்படி ஆரம்பப் பாடசாலையிலும் பின்னர் யாழ் மத்திய கல்லூரி, அம்பாறை ஹார்டி தொழில் நுட்பக்கல்லூரி ஆகியவற்றில் படித்துப் பின்னர் இந்தியாவில் அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் விவசாய முதுமாணிப் பட்டம் பெற்றார். நித்தி 1986 வரை கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்தின் தலைவராக இருந்தவர். பின்னர் புலம் பெயர்ந்து தற்போது அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருக்கிறார்.
[தொகு] பொப்பிசைப் பாடகர்
1955 ஆம் ஆண்டிலேயே பாட ஆரம்பித்து விட்ட நித்தி நாடகங்களிலும் நடித்திருக்கிறார். ஊர் மேடைகளில் கிண்டல் பாடல்கள் இயற்றியும் பாடியும் பாராட்டுப் பெற்றிருக்கிறார்.
சிங்கள மேடைகளில் இரட்டை அர்த்தங்களுடனான சிங்கள பைலாப் பாடல்கள் புகழ்பெறத் தொடங்கிய காலங்களில் அம்பாறை ஹார்டி கல்லூரியில் 1966 ஆம் ஆண்டு முதன் முதலாக சின்ன மாமியே.. என்ற பாடலைப் பாடியுள்ளார். அப்பாடல் பிறகு பிரபலமாகி இலங்கையின் பட்டி தொட்டிகளெல்லாம் ஒலிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கள்ளுக்கடைப் பக்கம் போகாதே, சோளஞ் சோறு பொங்கட்டுமா முதலான பல பாடல்களைப் பாடிப் புகழ் பெற்றார்.
சிங்களம், ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளிலும் பாடியிருக்கிறார். பல இந்தியத் தமிழ்த் திரைப்படங்களிலும் இவரின் பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.