சிலேடை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒரு சொல் அல்லது தொடர்ச்சொல் பல பொருள் படும்படி அமைவது சிலேடை எனப்படும். மொழிக்கு உரிய அணிகளுள் இதுவும் ஒன்று. செய்யுள்களிலும், உரை நடையிலும், மேடைப் பேச்சுக்களிலும், சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன. சில அறிஞர்கள் சாதாரணமாக மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது கூடச் சிலேடையாகப் பேசுவதுண்டு.
[தொகு] சிலேடையின் வகைகள்
தொடர்ச் சொல் பலபொருள் வெளிப்படுத்தும் விதத்தின் அடிப்படையில், சிலேடை இரண்டு வகைப்படும். அவை,
- செம்மொழிச் சிலேடை
- பிரிமொழிச் சிலேடை
என்பனவாகும். செம்மொழிச் சிலேடை என்பது, தொடர்ச் சொற்கள் ஒரே விதமாக இருந்து கொண்டே பலபொருள் தருவதாகும். நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்த கி. வா. ஜெகந்நாதன் அவர்களுக்குக் கொடுத்த பாலிலே இறந்த எறும்பு மிதப்பதைக் கண்டு,
- சீனிவாசன் பாற்கடலில் துயில் கொள்கிறான்
என்றாராம். இத்தொடர் எவ்விதமான மாற்றமும் இன்றியே இரண்டு விதமாகப் பொருள் தரக்கூடியது. ஒருவகையில், சீனியில் (சர்க்கரையில்) வாசம் செய்யும் எறும்பு பாலில் இறந்து மிதக்கிறது எனவும், இன்னொரு வகையில், சீனிவாசனாகிய விஷ்ணு பகவான் பாற்கடலில் துயில் கொள்கிறார் எனவும் பொருள்படுகின்றது. இங்கே, தொடர்சொல் எவ்வித மாற்றத்துக்கு உள்ளாகாமலேயே இரு பொருள் தருவதால் இது செம்மொழிச் சிலேடை ஆகும்.
ஒரு வகையில் பொருள்தரும் தொடர்ச் சொல், வேறு வகையில் பிரித்து எழுதும்போது வேறு பொருள் தருமாயின் அது பிரிமொழிச் சிலேடை எனப்படும்.