யானை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யானை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி விலங்காகும். இவை நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியதும் நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும். இவை மிகவும் வலிமையானவை. யானைகளில் மூன்று சிற்றினங்கள் இன்று புவியில் எஞ்சியுள்ளன. அவை சவான்னா யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், மற்றும் ஆசிய யானைகள் ஆகும். பொதுவாக இவை 70 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கின்றன.
பொருளடக்கம் |
[தொகு] உணவும் வாழிடமும்
யானைகள் தாவர உண்ணிகள் ஆகும். இவை புற்கள், இலைதழைகள், மற்றும் மூங்கில் போன்றவற்றை உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும் இவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது. எனவே இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது.
[தொகு] உடலமைப்பு
ஆண் யானைகள் பொதுவாக எட்டு அடி உயரமும் 900 கிலோகிராம் எடையும் கொண்டவை. யானை வலுவான நான்கு கால்களைக் கொண்டிருக்கிறது. மேலும் இவை தும்பிக்கையைக் கொண்டுள்ளன. இது யானைகளில் மட்டுமே காணப்படுகின்றது. இது மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. தும்பிக்கையால் சிறு குச்சி முதல் பெரிய மரம் வரை தூக்க முடியும். இவை பொதுவாக உணவை எடுப்பதற்கும் நீர் பருகுவதற்கும் உதவுகின்றன. யானைகள் இரண்டு தந்தங்களைக் கொண்டுள்ளன. இவை யானையின் கடைவாய்ப் பற்களின் நீட்சியாகும். யானைகளின் தந்தங்கள் 10 அடி வரை வளரக்கூடியவை. மேலும் இவை 90 கிலோகிராம் எடை வரை இருக்கலாம்.
[தொகு] இனப்பெருக்கம்
யானையின் சினைக்காலம் 22 மாதங்கள் ஆகும். இதுவே பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலம் ஆகும். பொதுவாக இவை ஒரு குட்டியையே ஈனுகின்றன. இரட்டைகள் பிறப்பது மிகவும் அரிது. பிறந்த யானைக்குட்டியானது 90 - 115 கிலோகிராம் எடை வரை இருக்கும். யானை ஈனும் போது அதனைச் சுற்றிலும் மற்ற வளர்ந்த யானைகள் இருந்து உதவுகின்றன. யானைக்குட்டிு பிறந்ததில் இருந்து, அது யானைக்கூட்டத்தாலேயே வளர்க்கப்படுகின்றது.