உயிரியற் பல்வகைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மழைக்காடுகளே பூமியில் அதிகூடிய உயிரியற் பல்வகைமை கொண்ட சூழலியல் முறைமை ஆகும்.
மழைக்காடுகளே பூமியில் அதிகூடிய உயிரியற் பல்வகைமை கொண்ட சூழலியல் முறைமை ஆகும்.

இந்த உலகிலே, பல வடிவங்களிலும் அளவுகளிலும் உயிரினங்கள் வாழுகின்றன. திமிங்கிலங்கள் போன்ற மிகப் பெரிய உயிரினங்களும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும் உள்ளன. பல நூறு ஆண்டுகளுக்கு நிலைத்திருப்பவைகள் முதல் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழுகின்ற உயிரினங்கள் வரை உள்ளன. சுட்டெரிக்கும் பாலைவனங்களில் உயிரினங்கள் வாழுகின்ற அதேவேளை, பனிபடர்ந்த கடுங் குளிர்ப் பிரதேசங்களிலும் அவை காணப்படுகின்றன. உணவுமுறைகள், வாழிடங்கள் போன்ற பல்வேறு அம்சங்களில். கணக்கற்ற வகையில் வேறுபடுகின்ற ஏராளமான உயிரினங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டனவாக இப்புவியில் வாழ்ந்து வருகின்றன. இவ்வாறு உயிர்கள் பல்வகையாக இருக்கும் தன்மையே உயிரியற் பல்வகைமை (Biodiversity) எனப்படுகிறது.

[தொகு] வரைவிலக்கணங்கள்

உயிரியற் பல்வகைமை என்பதற்குக் குறிப்பிட்ட ஒரு வரைவிலக்கணம் கிடையாது. மிகவும் நேரடியான வரைவிலக்கணம், உயிரினங்களின் பல்வேறுபட்டதன்மை என்பதாகும். இது உயிரியல் ஒழுங்கமைப்பின் எல்லா மட்டங்களிலுமான வேறுபாடுகளைக் குறிக்கும். இன்னொரு வரைவிலக்கணம், உயிரியற் பல்வகைமை என்பது, வேறுபட்ட சூழலியல் முறைமைகளில் வாழுகின்ற உயிரினங்கள் மத்தியில் காணப்படும் சார்புப் பல்வகைமையின் அளவீடு ஆகும், என்கிறது. வேறொரு வரைவிலக்கணம் இதனை, ஒரு பிரதேசத்தின் மரபணுக்கள், வகைகள், சூழலியல்முறைமைகள் ஆகியவை அடங்கிய ஒரு முழுமை எனக் கூறுகின்றது. மிகவும் எளிமையானதும், தெளிவானதுமான மேற்படி வரைவிலக்கணம், உயிரியற் பல்வகைமை என்பது பயன்படுகின்ற பெரும்பாலான சந்தர்ப்பங்களை விளக்குகின்றது. அத்துடன், உயிரியற் பல்வகைமை பொதுவாக இனங்காணப்படுகின்ற, மூன்று நிலைகளையும் ஒருங்கிணைக்கும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. இம் மூன்று நிலைகளாவன:

நாய்களில் உள்ளினப் பல்வகைமை
நாய்களில் உள்ளினப் பல்வகைமை

1992 இல் ரியோ டி ஜனேரோவில் நடைபெற்ற, ஐக்கிய நாடுகள் புவி மேல்நிலை மாநாடு (United Nations Earth Summit) இன்னொரு வரைவிலக்கணத்தை வழங்கியது. இதன்படி, உயிரியற் பல்வகைமை என்பது, தாங்களும் ஒரு பகுதியாகவுள்ள நிலம், கடல் மற்றும் ஏனைய நீர்சார் சூழலியல்முறைமைகள் மற்றும் வாழ்சூழலியற் தொகுதிகள் உட்பட்ட எல்லா இடங்களையும் சார்ந்த உயிரினங்கள் மத்தியிலான பல்வகைமை ஆகும். இது உயிர்வகைகளுக்குள்ளும், அவற்றுக்கு இடையிலும், சூழலியல்முறைமை சார்ந்தும் உள்ள பல்வகைமைகளை உள்ளடக்குகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் உயிரியற் பல்வகைமை மகாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணத்தினால், சட்டபூர்வமான அங்கீகாரம் பெறக்கூடிய நிலையிலுள்ளது, கடைசியாகத் தரப்பட்ட வரைவிலக்கணமேயாகும்.