இணுவில் சிவகாமி அம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இலங்கை, யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே 'சிவகாமி அம்மன் கோயில் முக்கியமான ஒன்று. இது கிழக்கு இணுவில் பகுதியில் அமைந்துள்ளது.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

யாழ்ப்பாண அரசு அமைந்த தொடக்க காலத்தில், நாட்டின் பல பகுதிகளுக்குப் பொறுப்பாக இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட தலைவர்களில் ஒருவன் குடியேறிய பகுதியாக, இணுவில் குறிப்பிடப்படுகின்றது. இவன் தமிழ் நாட்டின் திருக்கோவிலூரைச் சேர்ந்த பேராயிரவன் என்று யாழ்ப்பாண வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இவன் சிதம்பரத்திலிருந்து அம்மன் திருவுருவத்தைத் தருவித்து வழிபட்டதாகக் கூறப்படுகின்றது. இவ்வூரிலிருந்து ஆட்சி செலுத்திய தலைவர்களும் இக்கோயிலுக்குச் சிறப்புச் செய்து வந்தனர்.

பிற்காலத்தில் யாழ்ப்பாணம் போத்துக்கீசர் வசமானபோது, இக்கோயிலையும் இடித்துத் தள்ளினர். பின் வந்த ஒல்லாந்தரின் 138 ஆண்டுகால ஆட்சியின் இறுதிக் காலத்தில் அவர்களது இந்து எதிர்ப்புக் கொள்கை சற்றுத் தளர்ந்தபோது, மீண்டும் இவ்விடத்தில் அம்மன் வழிபாடு ஆரம்பமானது.

[தொகு] திருவிழா

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இக்கோயிலுக்கெனப் புதிய கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு விரிவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இக்கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை 12 நாட்கள் திருவிழா நடைபெறும். பத்தாம், பதினோராம் நாட்களில் முறையே தேர், தீர்த்தத் திருவிழாக்களும் இறுதி நாளில் திருக்கல்யாணமும் நடைபெறுகின்றது.

நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் அம்மன் மகிடாசுரனை அழித்த நிகழ்வு கொண்டாடப்படுகின்றது. இது சூரன் போர் என மக்களால் அழைக்கப்படுகின்றது. அடுத்த நாள், விஜயதசமியன்று இக் கோயிலில் நடைபெறும் மானம்புத் திருவிழா புகழ் பெற்றதாகும்.

[தொகு] பிரபந்தங்கள்

ஒல்லாந்தர் காலத்தில் வாழ்ந்த இணுவில் சின்னத்தம்பிப் புலவர் இச் சிவகாமி அம்மன் தொடர்பான பல நூல்களை எழுதியுள்ளார். அவையாவன:

  • சிவகாமியம்மை பதிகம்
  • சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்
  • சிவகாமியம்மை சதகம், ஊஞ்சல், இரட்டைமணிமாலை
  • சிவகாமியம்மை துதி

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

  • இணுவில் கந்தசுவாமி கோயில்

[தொகு] வெளி இணைப்புக்கள்