கனகசூரிய சிங்கையாரியன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கனகசூரிய சிங்கையாரியன் 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசர்களுள் ஒருவன். இவனது தந்தையாகிய குணவீர சிங்கையாரியனின் குறுகிய கால ஆட்சிக்குப் பின் 1440 ஆம் ஆண்டு இவன் பதவிக்கு வந்ததான். 10 வருடங்களுக்குப் பின் இலங்கையின் தென்பகுதியில் அப்போது பலமாக இருந்த கோட்டே அரசின் பிரதிநிதியாகப் படையெடுத்து வந்த சண்பகப் பெருமாள் என அழைக்கப்படும் சப்புமால் குமாரயா என்பான் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவே கனகசூரியன் தனது மூன்று புதல்வர்களோடும், குடும்பத்தோடும் இந்தியாவுக்குத் தப்பி ஓடினான்.
சப்புமால் குமாரயா 17 வருடங்கள் யாழ்ப்பாணத்தை நிர்வகித்தான். 1467ல் கோட்டே அரசன் இறக்கவே, கோட்டே அரச பதவியில் கண் வைத்திருந்த சப்புமால் குமாரயா யாழ்ப்பாணத்திலிருந்து கோட்டே சென்றதாகத் தெரிகிறது. இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய கனகசூரியன் படைகளுடன் யாழ்ப்பாணம் வந்து மீண்டும் அதனைத் தன் வசப்படுத்திக் கொண்டான். பின்னரும் 1478 வரை 11 ஆண்டுகள் அவன் ஆட்சி நடத்தினான்.