நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
“கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திய பாடல்களைப் பாடிய நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்கள் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றிறியவர். ‘வந்தே மாதரம்’ பாடலின் மூலம் தமது இளமையிலேயே சுதந்திர உணர்வைத் தூண்டப்பெற்றவர். முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் காந்திஜியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அகிம்மை ஒன்றினால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரஸின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்திமிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரைவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரக்ப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘அரசவைக் கவிஞர்’ பட்டமும் `பத்மபுக்ஷன்’ பட்டமும் பெற்றவர்.
‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லாமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடி கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.