இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பொதுவுடமைத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் கட்சி. பொதுவுடமைக் கொள்கையின் ஆதரவாளர்களால் இலங்கையில் தொடங்கப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து ஸ்டாலினிசத்துக்குச் சார்பானவர்கள் பிரிந்து உருவாக்கிய ஐக்கிய சோஷலிசக் கட்சி என்ற பெயரிலான கட்சியின் தொடர்ச்சியாக 1943ல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. வைத்திய கலாநிதியான எஸ். ஏ. விக்கிரமசிங்க தலைமை தாங்கி ஐக்கிய சோஷலிசக் கட்சியையும் பின்னர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியையும் வழிநடத்தினார். 1952 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரான திருமதி டொரீன் விக்கிரமசிங்க இலங்கைப் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
1960ல் கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் மகாஜன எச்சத் பெரமுன என்ற கட்சியும் இணைந்து இடதுசாரிக் கூட்டணியொன்றை உருவாக்கின. ஐக்கிய இடதுசாரிக் கூட்டணி என்று அழைக்கப்பட்ட இக் கூட்டணி, 1964ல் அப்போதைய பிரதம அமைச்சரான சிரிமாவோ பண்டாரநாயக்கா கம்யூனிஸ்ட் கட்சிக்கும், லங்கா சமசமாஜக் கட்சிக்கும் அமைச்சர் பதவிகளைக் கொடுக்க முன்வந்தபோது உடைந்தது.