பள்ளு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பள்ளு எனும் நூல்வகை தமிழ் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. பள்ளு இலக்கியங்கள், பழந்தமிழ் வேளாண்மைக் குடிகளான பள்ளர்களின் வாழ்க்கை பற்றியவை. தமிழில் பெருந்தொகையான பள்ளு இலக்கியங்கள் உள்ளன. தமிழ் சிற்றிலக்கிய வகைகளிலே பள்ளு இலக்கியங்களே அதிகமாக உள்ளன எனக் கூறப்படுகின்றது.
பள்ளு இலக்கியங்களிலிருந்து பள்ளர்களின் வாழ்க்கை நிலையை மட்டுமன்றி, அக்காலப் பொதுவான நாட்டு நிலைமைகளையும் பண்பாட்டுத் தகவல்களையும் கூடப் பெற்றுக்கொள்ளமுடிகின்றது. பல பள்ளு நூல்கள் இலக்கியச் சுவை மிக்கவை.
[தொகு] எடுத்துக்காட்டுகள்
ஒரு பள்ளனுடைய இரண்டு மனைவியரில் ஒருத்தி சைவ சமயத்தவள். மற்றவள் வைஷ்ணவ சமயத்தைச் சேர்ந்தவள். இவ்விருவருக்கும் ஏற்படுகின்ற சண்டையில் சிவனதும், திருமாலினதும் தலைகள் உருளுவதை முக்கூடற் பள்ளு ஆசிரியர் நகைச்சுவையுடன் எடுத்துக்கூறுகிறார்.
- சுற்றிக்கட்ட ஒரு முழத்துண்டு மில்லாமல் புலித்
- தோலை உடுத்தானுங்கள் சோதி அல்லோடி.
என்று இளைய மனைவியின் இறைவனாகிய சிவனை, உடுத்துவதற்கு ஒரு முழத்துண்டு கூட இல்லாமல் புலித்தோலை உடுத்திருக்கிறான் என்று ஏசுகிறாள். அதற்கு இளையவள் திருமால் மரவுரியும் சேலையும் கட்டிக்கொண்டது பற்றி இவ்வாறு சுட்டிக்காட்டுகிறாள்.
- கற்றைச் சடைகட்டி மரவுரியும் சேலைதான் பண்டு
- கட்டிக்கொண்டான் உங்கள் சங்குக் கையன் அல்லோடி
சிவன் நஞ்சுண்ட கதையைத் திரித்துப் பதிலடி கொடுக்கிறாள் மூத்தவள்.
- நாட்டுக்குள் இரந்தும் பசிக்காற்ற மாட்டாமல் வாரி
- நஞ்சையுண்டான் உங்கள் நாதனல்லோடி
இளையவளிடமிருந்து பதில் வருகிறது இவ்வாறு:
- மாட்டுப் பிறகே திரிந்தும் சோற்றுக்கில்லாமல் வெறும்
- மண்ணையுண்டான் உங்கள் முகில் வண்ணணல்லோடி
[தொகு] பள்ளு நூல்கள்
- முக்கூடற் பள்ளு
- குருகூர்ப் பள்ளு
- திருமலைப் பள்ளு
- சீர்காழிப் பள்ளு
- திருவிடைமருதூர்ப் பள்ளு
- தஞ்சைப் பள்ளு
- புதுவைப் பள்ளு
- சண்பகராமன் பள்ளு
- வையாபுரிப் பள்ளு
- திருச்செந்தில் பள்ளு
- மாந்தைப் பள்ளு
- கொடுமாளூர்ப் பள்ளு
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- இலக்கிய நூல் வகைகள்
- தமிழ் சிற்றிலக்கியங்கள்