கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில் கொழும்பு மாநகரில் சரித்திரப்பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இது கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியில் அமைந்துள்ள சிவத்தலமாகும்.

[தொகு] வரலாறு

தென்னிந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான கருங்கல் ஆலயங்கள் யாவும் மூவேந்தராலும் நாயக்க பல்லவ மன்னர்களாலுமே கட்டப்பெற்றது. அதேமாதிரியான அமைப்பில் இலங்கையில் முற்றிலும் கருங்கற்களில் பொளிந்த சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த அழகிய கலைக்கோவிலை 1856ஆம் ஆண்டு் யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து கொழும்பு செட்டியார் தெருவில் வசித்து வந்த கொடைவள்ளலும் தேசபிமானியுமான பொன்னம்பலம் முதலியாரால் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் அவரது புதல்வர் சேர் பொன் இராமநாதன், ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி கும்பாபிஷேகம் செய்வித்தார்.

[தொகு] பூசைகள்

நித்திய, நைமித்திய பூசைகளும் ஆறு காலப் பூசைக்ளும் விரதங்களும், அபிஷேகங்களும், பொங்கல்களும் குளிர்ச்சி போன்றவையும் சிவாகாம முறைப்படி நடைபெற்று வருகின்றன. ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்தாம் நாள் பங்குனி உத்தரத்தன்று நிறைவு பெறும். தேர்த்திருவிழா அன்று சோமாஸ்கந்தர், அம்பாள், சண்டேஸ்வரர் தம் தம் அழகிய சிற்பத் தேர்களிலும் விநாயகர், முருகன் தம் வாகனங்களிலும் ஆரோகணித்து வீதி வலம் வருவர். அம்பாளின் தேரைப் பெண்களே இழுப்பது வழக்கம். சுவாமி வெளிவீதி வரும்பொழுதில் நவசந்தித் திருமுறைகள் ஓதப்படுகின்றன. அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சிப் பராயணத்துடன் பூசைகள் ஆரம்பமாகின்றன. காலை 7:00 மணிக்கும் மாலை 7:00 மணிக்கும் நடைபெறும் பூசையில் நித்தியாக்கினி வளர்க்கப்படும்.

[தொகு] ஆதாரங்கள்

  1. ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்