நேரிசை வெண்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நேரிசை வெண்பா என்பது தமிழிலுள்ள மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றான வெண்பாவின் துணைப் பா வகையாகும். நேரிசை வெண்பாவுக்கான இலக்கணப்படி இது பின்வரும் அமைப்பைக் கொண்டிருக்கும்.

  • பொதுவான வெண்பாவுக்கு உரிய இலக்கணங்களைக் கொண்டிருத்தல்.
  • நான்கு அடிகளை உடையதாக இருத்தல்.
  • இரண்டாவது அடியில் தனிச்சொல் வருதல்.
  • நான்கு அடிகளும் ஒரே வகையான எதுகை உடையனவாகவோ அல்லது முதல் இரண்டு அடிகளும் ஒருவகை எதுகை உடையனவாக இருக்க, அடுத்த இரண்டும் வேறுவகை எதுகை உடையனவாகவோ இருத்தல்.

[தொகு] எடுத்துக்காட்டு

நளவெண்பாவில் உள்ள பின்வரும் செய்யுள் நேரிசை வெண்பாவுக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

அஞ்சல் மடவனமே உன்ற னணிநடையும்
வஞ்சி யனையார் மணிநடையும் - விஞ்சியது
காணப் பிடித்ததுகா ணென்றான் களிவண்டு
மாணப் பிடித்ததார் மன்

இது நான்கு அடிகளைக் கொண்ட ஒரு வெண்பா. இதன் இரண்டாவது அடியில் விஞ்சியது என்ற சொல் தனிச்சொல் ஆகும். முதல் இரண்டு அடிகளும் ஒருவகை எதுகையையும் (அஞ்சல் - வஞ்சி), மூன்றாம் நான்காம் அடிகள் இன்னொரு வகையான எதுகையையும் (காணப் - மாணப்) கொண்டு அமைந்துள்ளன. இதனால் இது ஒரு நேரிசை வெண்பா ஆகின்றது.

பின் வருவது நான்கு அடிகளிலும் ஒரே வகையான எதுகை வரும் நேரிசை வெண்பாவொன்று ஆகும்.

நெல்லுக்கி றைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்