தமிழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தமிழ் (தமிழ்) | |
---|---|
நாடுகள்: | இந்தியா, இலங்கை மற்றும் சிறிய எண்ணிக்கையில் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் மேலும் பல நாடுகளில் புலம் பெயர்ந்தவர்களும். |
பிரதேசங்கள்: | ஆசியா மற்றும் உலகெங்கணும் ஆங்காங்கே பேசப்படுகின்றது. |
பேசுபவர்கள்: | 74 மில்லியன் (1999-ல்) |
நிலை: | 18 (1996-ல்)[1] |
மொழிக் குடும்பம்: | திராவிட மொழிக் குடும்பம்
தென்பகுதி |
அதிகாரப்பூர்வ அங்கீகார நிலை | |
அரசு அலுவல் மொழி அங்கீகாரம்: | இந்தியா, இலங்கை மற்றும் சிங்கப்பூர் |
Regulated by: | தமிழகத்திலும், இலங்கையிலும் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் அவற்றின் அரசுகள் |
Language codes | |
ISO 639-1 | ta |
ISO 639-2 | tam |
SIL | TCV |
இவற்றையும் பார்க்கவும்: பகுப்பு:மொழிகள் |
தமிழ் (Tamil) திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, மேலும் பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 7 கோடியே 40 இலட்சம் (74 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும். எழுத்தளவில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதால் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திச்சூடி முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
முதன்மைக் கட்டுரை: தமிழ் மொழி வரலாறு
மற்ற திராவிட மொழிகளைப் போல, ஆனால் மற்ற பிற இந்திய மொழிகளைப்போல் அல்லாது, தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தோன்றவில்லை. திராவிட மொழிகளில் மிக நீண்ட இலக்கிய மரபைக் கொண்டது, தமிழ். தமிழ் இலக்கியங்களில் சில பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகின்றன. இருந்தும், கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு. 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும் (மகாதேவன், 2003). பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் பிரதிபண்ணுவது மூலம்) அல்லது வாய்மொழி மூலம் கடத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக்கூடக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடக்கக்கூடிய மிகப்பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன. [2] பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கிபி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.
மொழியியலாளர் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழியை மூன்று காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை, பண்டைக்காலம் (கிமு 200 தொடக்கம் கிபி 700 வரை), மத்திய காலம் (கிபி 700 தொடக்கம் கிபி 1500 வரை), நவீன காலம் (கிபி 1500 தொடக்கம் இன்று வரை) என்பனவாகும். மத்திய காலத்தில் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமால் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மை வாதிகள் இவை தமிழிலிருந்து நீக்கப்பட உழைத்தனர். இவ்வியக்கம், தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் சமஸ்கிருதக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கிபி 800 க்கும் 1000 இடைப்பட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.
[தொகு] மொழிக்குடும்பம்
தமிழ் தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக் குடும்பத்தில், இருளா, Kaikadi, பேட்டா குறும்பா, Sholaga மற்றும் Yerukula என்னும் மொழிகள் அடங்கும். தமிழ் மொழிக் குடும்பம், தமிழ்-மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும். தமிழ்-மலையாளம் மொழிகள், தமிழ்-குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும், தமிழ்-குடகு மொழிக் குடும்பம், தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன. தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட் பிரிவுகளுள் ஒன்றாகும்.
தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும்.
[தொகு] தமிழ் பேசப்படும் இடங்கள்
தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில், கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.
தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின. இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க குடித்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். தொன்னாபிரிக்கா, குயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட்டும் டொபாகோவும் போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.
மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும், ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாக, பல தமிழர்கள் ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஒரு உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்த போதிலும், இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும், ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதை கவனிக்க முடிகின்றது.
[தொகு] ஆட்சி மொழி அங்கீகாரம்
தமிழ், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக உள்ளதுடன், இந்திய அரசியலமைப்பின் கீழ் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையிலும் தமிழ் மூன்று ஆட்சி மொழிகளுள் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ளது. சிங்கப்பூர் நாட்டிலும் தேசிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளதுடன், தென்னாபிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது.
அத்துடன், இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதும் குறிப்பாக, பர்க்லேயிலுள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவரான ஜார்ஜ் எல் ஹார்ட் போன்றவர்களுடைய முயற்சிகளைத் தொடர்ந்து, 2004 ஆம் ஆண்டில், இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. (ஹார்ட் அவர்களின் அறிக்கையை இங்கே காண்க). இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஜூன் 6 ஆம் நாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால், இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது. (குடியரசுத் தலைவரின் பேச்சையும், இந்திய அமைச்சரவையின் முறையான அங்கீகாரம் தொடர்பான பிபிசி செய்தியையும் இங்கே காண்க.)
[தொகு] பேச்சுத்தமிழ் - உரைநடைத்தமிழ் வேறுபாடுகள்

தமிழ், அதன் பல் வேறுபட்ட வட்டார வழக்குகளுக்கு மேலதிகமாக, இலக்கியங்களில் பயன்படும் முறையான செந்தமிழுக்கும், கொடுந்தமிழ் என வழங்கப்படும் பேச்சுத் தமிழுக்கும் இடையே தெளிவான இருவடிவத் தன்மை (diglossia) காணப்படுகின்றது. இங்கே கொடுந்தமிழ் என்பது அனைத்து வட்டாரப் பேச்சுத் தமிழ் வழக்குகளையும் பொதுவாகக் குறிக்கும் ஒரு சொற் பயன்பாடு ஆகும். இந்த இருவடிவத் தன்மை பண்டைக் காலம் முதலே தமிழில் இருந்து வருவதை, கோயில் கல்வெட்டுக்களிற் காணப்படும் தமிழ், சமகால இலக்கியத் தமிழினின்றும் குறிப்பிடத் தக்க அளவு வேறுபட்டுக் காணப்படுவதினின்றும் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு, செந்தமிழ் எந்த வட்டார மொழி வழக்கையும் சாராது இருப்பதனால், எழுத்துத் தமிழ், தமிழ் வழங்கும் பல்வேறு பகுதிகளிலும், ஒன்றாகவே இருப்பதைக் காணலாம்.
தற்காலத்தில், எழுதுவதற்கும், மேடைப் பேச்சுக்கும் செந்தமிழே பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, செந்தமிழ், பாட நூல்களுக்குரிய மொழியாகவும், பெருமளவுக்கு இலக்கிய மொழியாகவும், மேடைப் பேச்சுகளுக்கும், விவாதங்களுக்கும் உரிய மொழியாகவும் விளங்கிவருகிறது. அண்மைக் காலங்களில், மரபு வழியில், செந்தமிழுக்குரிய துறைகளாக இருந்து வந்த பகுதிகளிலும் கொடுந்தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது. பெரும்பாலான தற்காலத் திரைப்படங்கள், மேடை நாடகம் மற்றும் தொலைக் காட்சி, வானொலி முதலியவற்றில் இடம்பெறும் மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் பலவற்றிலும் கொடுந்தமிழ் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். பல அரசியல் வாதிகளும், மக்களுக்கு நெருக்கமாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் நோக்கில் தங்கள் மேடைப் பேச்சுக்களிலும் கொடுந்தமிழைப் பயன்படுத்தி வருகின்றனர்.
செந்தமிழுக்கான இலக்கண விதிகள் இறைவனால் உருவாக்கப் பட்டதாக நம்பப்படுவதால், செந்தமிழே சரியான மொழியாகக் கருதப்பட்டது. இதனால், பேச்சுத் தமிழ் வழக்குகளுக்குச் சிறப்புக் கிடைக்கவில்லை. (எடுத்துக்காட்டு, காங்கேயர் (Kankeyar), 1840). பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுவதற்கு மாறாக, தமிழில், அதன் வரலாற்றின் பெரும் பகுதியிலும், ஒரு பொதுவான பேச்சுமொழி இருந்ததில்லை. தற்காலத்தில் அதிகரித்த கொடுந்தமிழ்ப் பயன்பாடு, அதிகாரபூர்வமற்ற முறையில் பொதுப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தோன்றுவதற்குக் காரணமாகவுள்ளது. இந்தியாவில் பொதுக் கொடுந்தமிழ், 'படித்த, பிராமணரல்லாதவர்'களின் பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது (Schiffman, 1998). எனினும் குறிப்பிடத் தக்க அளவுக்கு, தஞ்சாவூர் மற்றும் மதுரைப் பேச்சு வழக்குகளில் செல்வாக்கு உள்ளது. இலங்கையில், அதிக மக்கள் தொகையைக் கொண்ட யாழ்ப்பாணப் பேச்சு வழக்கையே பெரும்பாலான வெளியார் இலங்கைத் தமிழ்ப் பேச்சு வழக்காக இனங்கண்டு கொள்கின்றனர். [3]
[தொகு] வட்டார மொழி வழக்குகள்
தமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதிலேயே மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, "இங்கே" என்ற சொல், தஞ்சாவூர் பகுதிகளில் "இங்க" என்றும், திருநெல்வேலி பகுதிகளில் "இங்கனெ" என்றும், இராமநாதபுரம் பகுதிகளில் "இங்குட்டு" என்றும், யாழ்ப்பாணம் (இலங்கை) பகுதிகளில் "இங்கை" என்றும் வழங்கப்படுகின்றது.
பெரும்பாலான வட்டார மொழி வழக்குகளின் சொல் அகராதியில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்றாலும், சில வழக்குகள் பெரிதும் மாறுபடுகின்றன. இலங்கையில் பேசப்படும் தமிழின் பல சொற்கள்,தமிழகத்தில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப் படுவதில்லை. "பாலக்காடு ஐயர்" தமிழில் பல மலையாள சொற்கள் கலந்திருக்கும். சில இடங்களில் மலையாள வாக்கிய அமைப்பும் கானப்படும். இறுதியாக, ஹெப்பர் மற்றும் மாண்டையம் வட்டாரங்களில் பதினோறாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த வைணவ கோட்பாட்டைப் பின்பற்றும் தமிழர்களால் பேசப்படும் தமிழில் வைணவ பரிபாஷையின் எச்சம் காணப்படுகிறது. வைணவ பரிபாஷை என்பது ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில் உருவான வைணவ சமய மரபுகள் மற்றும் பண்புகளை உள்ளடக்கிய மொழி வழக்காகும்.
தமிழ் மொழி வழக்குகள் வட்டார அடிப்படையில் மட்டுமல்லாது சாதி அடிப்படையிலும் வேறுபடும். பல சாதிகளுக்கென தனியான பேச்சு வழக்குகள் இருந்து வந்தன. தற்போது சாதி மறுப்பு இயக்கங்களின் விளைவாக இவ்வேறுபாடுகள் மறைந்து வந்தாலும், ஒருவரின் பேச்சு வழக்கை வைத்து அவரின் சாதியை சில சமயங்களில் கணிக்க முடிகிறது.
எத்னொலோக் Ethnologue என்ற உலக மொழிகள் பற்றிய பதிப்பு நிறுவணம், தமிழில் 22 வட்டார வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கிறது. அவையாவன ஆதி திராவிடர், ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராஸி, பரிகலா, பாட்டு பாஷை, இலங்கை தமிழ், மலேயா தமிழ், பர்மா தமிழ், தெனாப்பிரிக்கா தமிழ், திகாலு, அரிஜன், சங்கேதி, கெப்பார், மதுரை, திருநெல்வேலி. கொங்கு மற்றும் குமரி ஆவன வேறிரு தெரிந்த வட்டார வழக்குகள்.
புவியியல் தொடர்பான வட்டார வழக்குகள் ஒருபுறமிருக்க, சமுதாய அடைப்படையிலும் பல்வேறு மட்டங்களில் தமிழ் மொழிப் பயன்பாட்டில் வேறுபாடுகளை கவனிக்கலாம். புதிய வழக்காக, தொலைக் காட்சி முதலான தொடர்புச் சாதனங்களும் இன்று பெருமளவுக்கு ஆங்கிலம் கலந்த தமிழைத் தமிழ் மக்கள் மத்தியில் புழக்கத்துக்கு விட்டுள்ளன. மேனாட்டுக் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சி தொடர்பில் புதிய சொல்லாக்கம், கலைச்சொல்லாக்கம் முதலிய அம்சங்களில் ஒருங்கிணைவு அற்ற முயற்சிகள் வேறுபட்ட மொழி வழக்குகளை உருவாக்கியுள்ளன. முக்கியமாக, இலக்கியம் மற்றும் அது போன்ற பண்பாட்டு மற்றும் மரபுவழிப் பயன்பாடுகளுக்கு அப்பால், கல்வி, அறிவியல், நிர்வாகம் மற்றும் இன்னோரன்ன நவீன துறைகளிலும் தமிழ் பயன்படுத்தப்பட்டுவரும் தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளில் உருவாக்கப்படும் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள், ஒரு பகுதியினர் பயன்படுத்தும் தமிழை இன்னொரு பகுதித் தமிழர் புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு வேறுபாடுள்ள மொழி வழக்குகள் உருவாகக் காரணமாக உள்ளன.
[தொகு] எழுத்து முறை
முதன்மைக் கட்டுரை: தமிழ் அரிச்சுவடி
தமிழ் எழுத்துமுறை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய அரிச்சுவடி அசோக மன்னர் காலத்து பிராமி அரிச்சுவடியிலிருந்து வளர்ந்தது. பிராமியின் தென்கிளையிலிருந்து கிரந்த அரிச்சுவடி உருவானது. அக்காலத்தில் தமிழும், சமஸ்கிருதமும் கிரந்த எழுத்துக்களைக் கொண்டே எழுதப்பெற்றன.
எழுத்து முறை வளர்ந்து கொண்டிருக்கையில் சமஸ்கிருதத்திலிருந்து பல சொற்கள் தமிழில் பயன்படுத்தப்படலாயின. அவற்றை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வெட்டெழுத்து" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது. இவ்வெழுத்துக்களை "வட்டெழுத்து" என்றும் வழங்குவர்.
பின்னர், வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977 எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் பெரியாரால் பரிந்துரைக்கப்பட்ட சில மாற்றங்கள் ஏற்கப்பட்டன.
தமிழ் எழுத்து உரு - மாற்றங்கள [ படங்கள் ]:
[தொகு] ஒலிகள்
தமிழில் 12 உயிரெழுத்துகளும், 18 மெய்யெழுத்துகளும் உள்ளன. ஒவ்வொரு உயிரெழுத்தும் 18 மெய்யெழுத்துகளோடும் சேர்வதால் 216 உயிர்மெய்யெழுத்துகள் பிறக்கின்றன. இவற்றோடு ஆய்த எழுத்தும் சேர்த்து தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 ஆகும்.
![]() |
தமிழில் ஒரு நா சுழற்றி (தகவல்) |
நா சுழற்றி வாக்கியம்: "ஏழை கிழவன் வாழைப்பழத்தோல்மேல் சருசருக்கி வழுவழுக்கி கீழே விழுந்தான்." | |
கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். |
[தொகு] உயிர் எழுத்துக்கள்
உயிரெழுத்துகளில் குறுகிய ஓசையுடைய எழுத்துகளான அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள் குற்றெழுத்துகள்(குறில்) எனவும், நீண்ட ஓசையுடைய எழுத்துகளான ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ ஆகிய எழுத்துகள் நெட்டெழுத்துகள்(நெடில்) என்வும் வழங்கப்படும்.
குறிலெழுத்துகள் ஒவ்வொன்றையும் ஒரு மாத்திரை நேரத்திலும், நெட்டெழுத்துகள் ஒவ்வொன்றையும் இரண்டு மாத்திரை நேரத்திலும் ஒலிக்க வேண்டும்.
[தொகு] மெய் எழுத்துக்கள்
மெய்யெழுத்துகளில் வன்மையான ஓசையுடைய எழுத்துகள் வல்லினம் என்றும், மென்மையான ஓசையுடைய எழுத்துகள் மெல்லினம் என்றும், இவை இரண்டிற்க்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துகள் இடையினம் என்றும் வழங்கப்படும்.
- வல்லினம் : க் ச் ட் த் ப் ற்
- மெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்
- இடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்
மெய்யெழுத்துகள் ஒவ்வொன்றும் அரை மாத்திரை நேரத்தில் ஒலிக்கப்படும்
[தொகு] சிறப்பு எழுத்து
ஃ - ஆய்தம், தமிழில் உள்ள ஒரு சிறப்பு எழுத்து ஆகும். ஆய்த எழுத்தை தனியே பயன்படுத்துவது அரிது. பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டாலும், தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே. சில சமயங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. ஆய்த எழுத்தை அகேனம் என்றும் அழைப்பர். ஆய்த எழுத்தில் உள்ள மூன்று புள்ளிகளும் இடைக்காலத்தில் போரில் பயன்படுத்தப்பட்ட கேடயத்தில் காணப்படும் குறியீடுகளுடன் ஒப்பிடத்தக்கவை, ஆகையால் ஆய்த எழுத்து என்று கூறப்பட்டிருக்கலாம்.
[தொகு] ஒலிப்பியல்
பெரும்பாலான இந்திய மொழிகளைப் போலன்றி தமிழில் மூச்சைக்கொண்டு ஒலிக்கும் (aspirated) மெய்யெழுத்துக்கள் கிடையாது. பேச்சில் வழங்கி வரினும், தமிழ் எழுத்து மிடற்றொலிகளையும் (voiced sounds) பிற ஒலிகளையும் வேறுபடுத்துவதில்லை. மிடற்றொலிகளும் அவற்றின் இனமான பிற ஒலிகளும் தமிழில் வகையொலிகள் (allophones) அல்ல. தமிழர் பொதுவாக இவ்வேறுபாட்டை உணர்ந்திருக்கின்றனர். மேலும், தொல்காப்பியத்தில் ஒரு எழுத்தை எப்பொழுது மிடற்றிலிருந்து ஒலிக்க வேண்டும் என்பது பற்றிய வரைமுறை விளக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, "த" எனும் மெய்யொலி சொல்லின் முதலில் வரும்பொழுது மிடற்றொலியாகவும், பிற இடங்களில் ஒற்றிரட்டித்தோ, வேறோரு வல்லெழுத்தால் தொடரப்பட்டோ, அல்லது மிடறு நீங்கியோ ஒலிக்கும்.
சொல்லின் முதலில் சகரம் எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டும் என்ற நெறியைத் தவிர பிற நெறிமுறைகள் செந்தமிழில் பொதுவாகப் பின்பற்றப்படுகின்றன. கொடுந்தமிழ் அல்லது வழக்குத்தமிழில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஏற்ப ஒலிப்புமுறை வேறுபடுகிறது. தென்வட்டார வழக்குகளிலும் இலங்கை வழக்குகளிலும் இம்முறை பெரும்பாலும், ஆனால் முழுமையாகவல்லாமல், பின்பற்றப்படுகிறது. வடபகுதி வட்டார வழக்குகளில் ஒலிப்பெயர்வு ஏற்பட்டு ஒலிப்புநெறிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவை தவிர, சமஸ்கிருதம் மற்றும் பிற வடமொழிகளிலிருந்து பெறப்பட்ட சொற்கள் தமிழில் பெரிதும் உள்ளபடியே பயன்படுத்தப்படுகின்றன.
தமிழ் எழுத்தில் ஏன் மிடற்றொலி மற்றும் பிறவொலி வேறுபாடுகள் இல்லையென்ற கேள்விக்கு ஒலிப்பியலாளர்கள் நடுவே ஒருமித்த கருத்து இல்லை. ஒரு சாரார் தமிழ் மொழியில் கூட்டுமெய்களும் மிடற்றினின்றொலிக்கும் வல்லெழுத்துக்களோ அடிப்படையில் இருந்ததில்லையென்றும் சொற்புணர்ச்சி மற்றும் குறுக்கத்தினால் மட்டுமே இவ்வொலிகள் ஏற்படுகின்றன என்று குறிப்பிடுகின்றனர். அதனால், இந்திய ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் மற்றும் பிற திராவிட மொழிகளைப் போலன்றி தமிழில் இவ்வொலிகளுக்கென தனியெழுத்துக்கள் தேவைப்படவில்லை என்று கருதுகின்றனர். இக்கருத்திலிருந்து மாறுபட்டு மிடற்றொலிகள் அவற்றையொத்த பிற ஒலிகளின் வகையொலிகளாகவே தமிழில் இருந்துள்ளன என்றும் அதனாலேயே அவற்றிற்கென தனியாக எழுத்துக்குறிகள் இல்லையெனவும் ஒரு கருத்தை சிலர் முன்வைக்கின்றனர்.
-
தொடர்புடைய கட்டுரைகள்: யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
[தொகு] குறுக்கம்
குறுக்கம் என்பது சில ஒலிப்பியல் கூறுகள் சில குறிப்பிட்ட ஒலிகளையடுத்து வரும்பொழுது தத்தம் இயல்பான ஒலி அளவுகளிலிருந்து குறைந்து ஒலித்தலைக் குறிக்கும். அவை பின்வருவன.
- குற்றியலுகரம் - உயிர் உ
- குற்றியலிகரம் - உயிர் இ
- ஐகாரக் குறுக்கம் - கூட்டுயிர் (diphthong} ஐ
- ஔகாரக் குறுக்கம் - கூட்டுயிர் ஔ
- ஆய்தக் குறுக்கம் - சிறப்பெழுத்துஃ (ஆய்தம்)
- மகரக் குறுக்கம் - மெய் ம்
[தொகு] இலக்கணம்
முதன்மைக் கட்டுரை: தமிழ் இலக்கணம்
தமிழ் இலக்கணம் பெருவாரியாக தொல்காப்பியத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. தற்கால தமிழ் இலக்கணம் பெரும்பாலும் நன்னூலைத் தழுவியமைந்துள்ளது. பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நன்னூலில் தொல்காப்பிய நெறிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
[தொகு] சொல் வளம்
- பார்க்கவும்: விக்சனரியில் உள்ள தமிழ் சொற்களின் பட்டியல் மற்றும் தமிழ் மொழியிலிருந்து உருவான சொற்களின் பட்டியல்
தமிழ் நிறைந்த சொல் வளம் கொண்ட மொழி. நவீன தமிழ்மொழி பழந்தமிழ் மொழியில் பயன்படுத்தப்பட்ட அனேக சொற்களை இன்னும் பயன்படுத்துகின்றது. இதனால் சற்று பயற்சியுடன் பழந்தமிழ் இலக்கியங்களை ஒரு தமிழர் வாசித்து அறிய முடியும். திருக்குறள் போன்ற சிறந்த பழந்தமிழ் படைப்புக்கள் தமிழர் மத்தியில் சிறப்பாக கற்கப்படுவதற்கு இத்தொடர்ச்சியான சொற் பயன்பாடு உதவுகின்றது.
சமஸ்கிரத சொற்கள் தொல்காப்பியர் காலம் முதலே தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டு தகுந்த பல தளங்களில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன். சமயம் சார்பான சமஸ்கிரத சொற் பயன்பாடுகள் தமிழில் அதிகம் காணப்படுகின்றன. சமஸ்கிரத உச்சரிப்புக்களை தமிழில் உள்வாங்குவதற்கு கிரந்த எழுத்துக்கள் பயன்படுகின்றன.
தமிழின் நீண்ட வரலாற்றில் பல பிற மொழிச்சொற்கள் தமிழில் கலந்து, தமிழ்படுத்தப்பட்டு தமிழை வளமாக்கியுள்ளன. பாரசிக, அரபு போன்ற செம்மொழிகளில் இருந்தும், பிற திராவிட மொழிகளில் இருந்தும், போர்த்துகீச, டச்சு, பிரேஞ்சு போன்ற காலனித்துவ மொழிகளில் இருந்த்தும், இந்தி, சிங்களம், மலாய் போன்ற தமிழருடன் தொடர்புடைய பிற இனங்களின் மொழிகளில் இருந்த்தும், ஆங்கில மொழியில் இருந்தும் தமிழ் மொழிக்கு பல சொற்கள் வந்தடைந்துள்ளன.
பிறமொழிச் சொற்கள் மட்டுப்படுத்தப்பட்டில் இருப்பது தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கும் தனித்துவத்துக்கும் அவசியம். ஆகையால் பிற மொழிச்சொற்களுக்கு இணையான தமிழ் மொழியின் அடிச்சொற்களில் இருந்து உருவாக்கப்படும் சொற்களை பயன்படுத்துவதே நன்று என்பது பல எளிய தமிழ் ஆதரவாளர்களின் கருத்து. இக்காலத்தில் குறிப்பாக ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் அடிச்சொற்களில் இருந்து உருவாக்கப்பட்ட சொற்கள் பயன்படுத்தப்படவேண்டும் என்பது பல தமிழ் ஆர்வலர்களின் வேண்டுகோளாக அமைகின்றது.
[தொகு] கலைச்சொற்கள்
தமிழ் மொழியில் அறிவியலை படைக்க கலைச்சொல்லாக்கம் முக்கியம். இது தமிழ் மொழியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடுதான். இக்காலத்தில் தமிழக இலங்கை அரசுகளின் பல்கலைக்கழகங்கள் ஊடாகவும் தமிழ் தன்னார்வலர்களாலும் இப்பணி தொடர்கின்றது.
[தொகு] குறிப்புகள்
[தொகு] தற்காலக் குறிப்புகள்
- காங்கேயர் (1840). உரிச்சொல் நிகண்டுரை. புதுவை, குவேரன்மா அச்சுக்கூடம்.
- ஐராவதம் மகாதேவன் (2003). Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D. Cambridge, Harvard University Press. ISBN 0674012275.
- நடராசன், T. (1977), The language of Sangam literature and Tolkāppiyam. Madurai, Madurai Publishing House.
- ஜி.யு. போப்பு (1862). First catechism of Tamil grammar: Ilakkaṇa vin̲aviṭai - mutar̲puttakam. Madras, Public Instruction Press.
- ஜி.யு. போப்பு (1868). A Tamil hand-book, or, Full introduction to the common dialect of that language. (3rd ed.). Madras, Higginbotham & Co.
- வி.எஸ்.இராசம் (1992). A Reference Grammar of Classical Tamil Poetry. Philadelphia, The American Philosophical Society. ISBN 087169199X.
- Schiffman, Harold F. (1998). "Standardization or restandardization: The case for 'Standard' Spoken Tamil". Language in Society 27, 359–385.
- Schiffman, Harold F. (1999). A Reference Grammar of Spoken Tamil. Cambridge, Cambridge University Press. ISBN 0521640741.
- Asher, Ron and E. Annamalai (2002) Colloquial Tamil: The Complete Course for Beginners Routledge. ISBN: 0415187885
[தொகு] பழங்காலக் குறிப்புகள்
- பவநந்தி முனிவர், நன்னூல் மூலமும் விருத்தியுரையும் , (ஏ. தாமோதரன் ed., 1999), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
- பவநந்தி முனிவர், நன்னூல் மூலமும் கூழாங்கைத்தம்பிரான் உரையும் (ஏ. தாமோதரன் ed., 1980). Wiesbaden, Franz Steiner Verlag.
- தண்டியாசிரியர், தண்டியாசிரியர் இயற்றிய தண்டியலங்காரம்: சுப்பிரமணிய தேசிகர் உரையுடன். (கு. முத்துராசன் ed., 1994). தர்மபுரி, வசந்த செல்வி பதிப்பகம்.
- தொல்காப்பியர், தொல்காப்பியம் இளம்பூரணர் உரையுடன் (1967 மறு அச்சு). சென்னை, TTSS.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- தமிழ் அரிச்சுவடி
- தமிழ் இலக்கியம்
- தமிழ் இலக்கணம்
- ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் தமிழ்ச் சொற்கள்
- தமிழ் அகராதி
[தொகு] வெளி இணைப்புகள்
[தொகு] பொது
- எத்னோலாக்கின் அறிக்கை
- ஆம்னிக்லாட் தரவு
- ரோஸெட்டா திட்டத் தொகுப்பு
- மொழி அருங்காட்சியகத்திலுள்ள உரை
- யுசிஎல்ஏ தரவு
- வரலாறு மற்றும் பண்புகள் பற்றிய விமர்சனம்
- தமிழ் கருத்துக்களம்
- உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்
- தமிழ் மொழி மற்றும் இலக்கியம்
- தமிழ் இசை
[தொகு] தமிழ் மொழி கற்றுக்கொள்ள உதவும் ஆதாரங்கள்
- யூபென் பாடப் பக்கம் - பென்சில்வேனியா பல்கலைக்கழக இணையவழித் தமிழ்ப்பாடத்தரவுகள்
- தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இங்கு தமிழ் இலக்கியப் படைப்புகளின் மிகப்பெறிய மின் தொகுப்பும் பல பாடங்களும் உள்ளன
- ஐஐடிஎஸ் - இந்தியவியல் மற்றும் தமிழ்க் கல்விக் கழகம், கோலோன் பல்கலைக்கழகம், ஜெர்மனி
- கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகம், பெர்க்ளி
- தமிழ்ப் புத்தகங்கள் கிடைக்கும் நூலகங்களைத் தேட
- http://www.tamil-online.info/