தமிழிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தமிழிசை மிகப் பழமையானது. தொல்காப்பியர் இயற்றிய 'தொல்காப்பியம்' என்னும் நூலில் இசையைப் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களை தெளிவாகக் காணலாம். சாத்தனாரின் கூத்த நூலிலும் தமிழரிசை பற்றி அதிகமாக, விரிவாக கூறப்பட்டுள்ளது.

தமிழர், இசையிலும், இயலிலும், நாடகயியலிலும் மேம்பட்டு விளங்கி வந்தனர். ஆனால் பல ஆண்டுகள் பிற மொழி பேசும் அன்னியர் ஆட்சியில் வாழ்ந்ததால் தமிழும், தமிழிசையும் உருமாற்றத்திற்கு ஆளாயின.

வடமொழியான சமஸ்கிருதச் சொற்களின் திணிப்பு பெருகியது. இயல்தமிழ்ச்சுவடிகள் அனல் வாதத்திலும், புனல் வாதத்திலும் பலி கொள்ளப்பட்டன. சிற்றிசை, பேரிசை, இசைநூல், இசைநுணுக்கம், பஞ்சமரபு, தாளசமுத்திரம், ஆளத்தி அமைப்பு போன்ற எத்தனையோ இசைநூல்களும், கூத்துவரி, உளநூல், சயந்தம், செயிற்றியம் விளக்கத்தார் கூத்து, நாட்டியவிளக்கம் ஆகிய நாடக நூல்களும் அழிந்து போயின. அக்கால நாடகவியல் நூல்கள் பெரும்பாலும் தமிழிசைச் செவ்விகளை முதன்மையாகக் கொண்டவை.