யாழ்ப்பாண மாவட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கையின் 25 மாவட்டங்களில், யாழ்ப்பாண மாவட்டம், நாட்டின் வடகோடியில் அமைந்துள்ளது. மேற்கில் மன்னார் குடாவும், வடக்கிலும், கிழக்கிலும் இந்து மாகடலும், தெற்கில் யாழ்ப்பாணக் கடல்நீரேரியாலும் சூழப்பட்டுள்ள, இலங்கையின் தலை போல் அமைந்துள்ள, யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் பெரும்பகுதியை இந்த மாவட்டம் உள்ளடக்கியுள்ளதுடன், தெற்கேயுள்ள பல தீவுகளும் இதனுள் அடங்கும். இத் தீபகற்பத்தினுள்ளிருக்கும், தொண்டமானாறு, உப்பாறு போன்ற கடல்நீரேரிகளால், இம்மாவட்டம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி என அழைக்கப்படுகின்றன. இம் மாவட்டத்தின் தெற்கு எல்லையில், சில ஆண்டுகளுக்குமுன், யாழ்மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட, கிளிநொச்சி மாவட்டம் உள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] காலநிலை
யாழ்ப்பாண மாவட்டம் இலங்கையின் வரண்ட பிரதேசத்தில் அமைந்துள்ளது. வங்காள விரிகுடாவிலிருந்து வரும் வடகீழ்ப் பருவப்பெயற்சிக் காற்றினால் மழையைப் பெறும் இப்பகுதி 1231 மிமீ வருடாந்த மழை வீழ்ச்சியைப் பெறுகிறது. ஆகக்கூடிய மாதாந்த சராசரி வெப்பநிலை 29.5 C ஆகவும், குறைந்த வெப்பநிலை 25.2 C ஆகவும் உள்ளது. சராசரி ஈரப்பதன் --- ஆகும்.
[தொகு] தாவரவகை
யாழ்ப்பாண மாவட்டத்துக்குச் செல்லும் எவருக்கும், அம் மாவட்டத்தின் தனித்துவமான தன்மையாகத் தெரியும் முதல் விடயம், மைல் கணக்கில் பரந்து கிடக்கும் பனந்தோப்புகளாகும்.
[தொகு] மக்கள்
யாழ் மாவட்டம் வரண்டதாகவும், அளவிற் சிறியதாகவும் இருந்தும், இது மிகவும் சனத்தொகைச் செறிவு மிக்கதாகும். ஐந்து மாவட்டங்களையும் 8848.11 ச.கிமீ பரப்பளவையும் கொண்ட வடமாகாணத்தில், 1025.2 ச.கிமீ அளவுக்குள் அடங்கியுள்ள இம்மாவட்டத்தினுள் 66.6% வீதமான மக்கள் வாழ்ந்ததாக 1981 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்புக் காட்டுகிறது. இங்கே தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் எனும் மூவினத்தவரும் வழ்ந்தாலும், யாழ்மாவட்டத்தின் சனத்தொகையில் மிகப்பெரும்பான்மையினர் தமிழர் ஆவர். சமய அடிப்படையில், இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ளனர். பௌத்தர்கள் மிகக் குறைவே.
[தொகு] நிர்வாகம்
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இம்மாவட்டத்தை நிர்வகிக்கும் அதிகாரி, அரசாங்க அதிபர் என அழைக்கப்படுகிறார். இம்மாவட்டம் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் என அழைக்கப்படும் பல துணைப் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவும் ஒரு உதவி அரசாங்க அதிபரின் கீழ் செயல்படுகின்றது. இந்தத் துணைப் பிரிவுகளும் மேலும் பல கிராம சேவை அலுவலர் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன.
இவற்றைவிட மக்களால் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி நிர்வாக அமைப்பில் அடங்கும், மாநகரசபை, நகரசபை, மற்றும் பிரதேச சபைகளாகவும் மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது.