க. பசுபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

க. பசுபதி (1925 - 1965) முற்போக்கு இடதுசாரி இலக்கிய இயக்க செல்நெறிகளில் ஆழக்கால் பதித்த ஈழத்துக் கவிஞர். யாழ்ப்பாணக் கவிராயர் என்ற புனை பெயரில் தனது கவிதைகளை எழுதினார்.

பொருளடக்கம்

[தொகு] வாழ்க்கைக் குறிப்பு

1925 ஆம் ஆண்டு பருத்தித்துறையிலுள்ள வராத்துப்பளை என்னும் கிராமத்தில் கந்தையா - அன்னம் தம்பதியருக்குப் பிள்ளையாகப் பிறந்தார். காலஞ்சென்ற தமிழறிஞர் கந்த முருகேசனாரிடம் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்ற பசுபதி தம் கவிப்புலமையை விருத்தி செய்துகொண்டார்.

[தொகு] கவிதை இயற்றல்

இளமைக் காலத்திலிருந்தே கவிதைகளைப் படைத்துவந்த இவர், இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வெளிவரும் பல பத்திரிகைகளில் தனது ஆக்கங்களை வெளியிட்டு வந்துள்ளார். பல நூறு கவிதைகளை எழுதியுள்ள கவிஞர், இலக்கிய உலகில் இருப்பவர்களிடையே காணப்பெறும் பாடோபத்தனம் சிறிதும் இன்றி சாதாரண மனிதநேயம் கொண்ட எழுத்தாளராகவே வாழ்ந்து காட்டினார். போராட்ட வீரர். அவர் கவிதைகளில் கேலியும் குத்தும் கேள்விக் கணைகளும் போராட்ட உணர்வும் நிறைந்திருக்கும்.

[தொகு] சாதிப் போராட்டம்

பசுபதி தனது ஆரம்ப கல்வியைக் கற்கத் தொடங்கிய காலம் தொடக்கம், பாடசாலைகளில் சாதிக்கொடுமையால் பாதிப்புகள் பலவற்றைச் சந்திக்க நேர்ந்ததால் கல்வியில் எதிர்நீச்சல் போடவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். இத்தகைய சோதனைகள் நிறைந்த கால கட்டத்தைத் தரிசிக்க நேர்ந்ததால், இளமைக் காலத்தில் இருந்து சாதிக் கொடுமைக்கு எதிரான போராட்ட உணர்வும் சமூக சேவையில் நாட்டமும் வரப்பெற்றார். அந்நாட்களில் யாழ்ப்பாணத்திலும் பருத்தித்துறையிலும் செயற்பட்ட சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம், நல்வழி ஐக்கிய சேவாசங்கம் போன்ற சமூக சீர்திருத்த ஸ்தாபனங்களுடன் இணைந்து சேவை செய்தார்.

தமிழறிஞர் கந்தமுருகேசனார் பகுத்தறிவு வாதியாக இருந்தமையால் தனது மாணவரான பசுபதிக்கும் அவ் அறிவுகளைப் போதித்திருந்தமையால் அவரும் பகுத்தறிவுக் கொள்கையில் ஊறி தன்னையும் பகுத்தறிவு வாதியாக மாற்றிக்கொண்டு ஒரு நாஸ்திகராகவே வாழ்ந்தார்.

1956 தொடக்கம் [1963]] வரை அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகா சபையின் இணைச் செயலாளராகவும் நிர்வாகச் செயலாளராகவும் கடமையாற்றினார். இக் காலகட்டத்தில் மகா சபையின் முயற்சியால் யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பல பகுதியிலும் ஒடுக்கப்பட்ட சிறுவர்கள் கல்வி கற்பதற்காக சுமார் 16 அரசாங்கப் பாடசாலைகள் நிறுவப்பட்டமை பெரும் பேறாகும். இந்த முயற்சியின் பின்னணியில் கவிஞர் பசுபதியும் செயற்பட்டார். மேலும், மகாசபையின் தலைமையில் நடத்தப்பட்ட தேநீர்க் கடைப் பிரவேசம், மனித உரிமைப் போராட்டம் என்பவற்றில் தீவிரமாக ஈடுபட்டுழைத்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்து வரும் இன்னல்கள், அவர்களுடைய பிரச்சினைகள், எதிர்கால நடவடிக்கைள் என்பவற்றை வளர்ச்சி பூர்வமாக விளக்கி, 1959 இல் வெளியிடப்பட்ட மகாசபை மலர் என்னும் கணக்கெடுப்பு ஏட்டிற்குப் பொறுப்பாசிரியராக இருந்து பசுபதி பணியாற்றினார். 1956 இல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஓர் உறுப்பினராக சேர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் உழைக்கும் பாட்டாளி மக்களின் விடுதலைக்காகவும் உளசுத்தியுடன் உழைத்தார். கம்யூனிஸ்டாக வாழ்ந்து கம்யூனிஸ்டாகவே இறந்தார்.

[தொகு] ஆசிரியப் பணி

நல்லூர் ஆசிரிய கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று முதலில் இரத்மலானையிலும் பின்னர் கைதடியிலுள்ள செவிடர் குருடர் பாடசாலையில் பொறுப்பாசிரியராகக் கடமையாற்றினார்.

[தொகு] முற்போக்குக் கவிஞர்

முற்போக்குக் கவிஞராக இருந்த பசுபதி சமூகக் கொடுமைகளுக்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராகக் குரல் எழுப்பினார். சமூக அமைப்பில் ஏற்றத் தாழ்வற்ற புதிய சமுதாயத்தைக் காண முனைந்தார். அது பொதுவுடமைச் சமுதாயத்தினால் அமையும் என நம்பினார்.

கொழும்புப் பத்திரிகைகளில் பாலர் பகுதியில் சிறுவர்களுக்கான பாக்களையும் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவருடைய கவிதைப் படைப்புகள் குடும்ப நிகழ்வுகள், காதல் விவகாரங்கள், சமூகக் கொடுமைகள், சமூக முன்னேற்றத்திற்கான செயற்பாடுகள் என்பவற்றை உள்ளடக்கியனவாக இருந்தன என்று எழுத்தாளர் என். கே. ரகுநாதன் தெளிவுபடுத்தியுள்ளார்.

பசுபதி தனது 40வது வயதில் காலமானார்.

[தொகு] வெளிவந்த நூல்கள்

  • புது உலகம் (பசுபதி கவிதைகள், 1965)
"http://ta.wikipedia.org../../../%E0%AE%95/2E/_/%E0%AE%95._%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF.html" இலிருந்து மீள்விக்கப்பட்டது