மணிக்கொடி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மணிக்கொடி என்பது 1930களில் வெளிவந்த வரலாற்றுப் புகழ்மிக்க சிற்றிதழ். இது முதலில் மாதம் இருமுறையும், பின்னர் வார(கிழமை) இதழாகவும் வெளிவந்தது, ஆனால் 1935ல் நின்றுவிட்டது. பி.எஸ். ராமையா அவர்களின் முயற்சியால், மேலும் சில ஆண்டுகள் இவ்வரிய சிற்றிதழ் பல்வேறு இதழ்களுடனும், நிறுவனங்களுடனும் சேர்ந்து 1939 ஆம் ஆண்டு இறுதிவரை வந்து பின்னர் நின்றுவிட்டது. மணிக்கொடிக்கு, பி.எஸ். ராமையா ஆசிரியராகவும், கி.ராமசந்திரன் (கி.ரா) துணையாசிரியராகவும் இர்ந்தனர். மணிக்கொடி வந்துகொண்டிருந்த அக்காலத்தில் பிற இதழ்களும் வந்துகொண்டிருந்த போதிலும், மணிக்கொடியின் சிறப்பான புகழுக்கு அதில் பங்கு கொண்டு இலக்கிய வரலாறு படைத்த எழுத்தாளர்களே காரணம். புதுமைப்பித்தனின் துன்பக்கேணி, சி.சு.செல்லப்பாவின் ஸரசாவின் பொம்மை போன்ற படைப்புகளும் இவ்விதழில் வெளியாயின. புகழ்பெற்ற எழுத்தாளர்களாகிய ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், பி.எஸ். ராமையா, ந.சிதம்பரசுப்பிரமணியன், சி.சு. செல்லப்பா, கா.நா. சுப்பிரமண்யம், லா.சா. ராமாமிர்தம், ஆர். சண்முகசுந்தரம், ஆகியோரின் படைப்புகள் மணிக்கொடியின் புகழுக்குக் காரணம். இவ் விதழ் வெளியான காலத்தையும், அதனால் ஏற்பட்ட இலக்கிய விழிப்புணர்வையும் குறிக்கும் வகையாக மணிக்கொடிக் காலம் என்னும் தொடர் சிற்றிதழ் இலக்கிய வட்டாரங்களில் பயிலப்படுகின்றது.