ஈழநாடு (பத்திரிகை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஈழநாடு இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்ற ஒரு தினசரிச் செய்திப் பத்திரிகை ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இப் பத்திரிகை பல இடையீடுகளுக்கும், பாதிப்புக்களுக்கும் மத்தியிலும் விடா முயற்சியுடன் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றது.
அக்காலத்தில் இலங்கையில் வெளியிடப்பட்ட தமிழ்ப் பத்திரிகைகள் உட்பட்ட எல்லாப் பத்திரிகைகளும் இலங்கையின் தலைநகரமான கொழும்பிலிருந்தே வெளியிடப்பட்டன. இலங்கைத் தமிழரின் பண்பாட்டு மையமாகக் கருதப்பட்ட யாழ்ப்பாணத்திலிருந்து அவர்களின் குரலைப் பிரதிபலிக்கும் நோக்கத்துடன் பத்திரிகைகள் எதுவும் இல்லாத குறையைப் போக்க 1959 இல் யாழ்ப்பாணத்தில் கே.சி.தங்கராசா மற்றும் டாக்டர் சண்முகரத்தினம் அவர்களால் ஈழநாடு தொடங்கப்பட்டது. இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் பத்திரிகைகள் வெளியிடப்பட்டனவாயினும், கொழும்பு தவிர்ந்த இலங்கை நகரமொன்றிலிருந்து வெளிவந்த முதல் நாளேடு இதுவே.
1981 இலும், பின்னர் 1987 இலும், தாக்குதலுக்கு உள்ளாகிப் பயன்படுத்த முடியாத அளவுக்குச் சேதம் அடைந்தது. ஒவ்வொரு தடவையும் சிறு இடை வெளியின் பின் மீண்டும் வெளிவந்தது.