அடிலெய்ட் கணேஷர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஸ்ரீ கணேஷர் கோயில் தெற்கு அவுஸ்திரேலியா மாநில தலைநகர் அடிலெய்டில் (Adelaide) உள்ள ஓக்லண்ட்ஸ் பார்க் (Oaklands Park) என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
[தொகு] வரலாறு
கோயிலை அமைப்பதற்கு முன்னோடியாக 1985 அடிலெய்டில் இயங்கி வந்த இந்து சங்கம் ஒரு தேவாலயத்தை வாங்கியது. பின்னர் கோயிலாக்கப்பட்ட அந்த தேவாலயத்தில் ஸ்ரீ கணேஷரை முதன்மைத் தெய்வமாகத் தாபிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி மாமல்லபுரத்தில் செய்யப்பட்டுக் கொண்டுவரப்பட்ட கருங்கல்லாலான கணேஷர் அங்கு தாபிக்கப்பட்டு 1986 ஜூலை மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அது கோயிலாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததுடன் இந்து தத்துவம், பண்பாடு, இந்திய மொழிகள் போன்றவற்றையும் போதிப்பதற்கான இடமாகவும் திகழ்ந்தது. அந்தக் காலகட்டத்தில் இதுவே அவுஸ்திரேலியாவில் அமைக்கப்பட்ட இரண்டாவது கோயிலாக இருந்தது.
1993 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் கோயிலுக்கு அருகில் இருந்த நிலம் வாங்கப்பட்டு, 1998 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் புதிய கோயில் ஒன்றைக் கட்டுவதற்காக அத்திவாரம் இடப்பட்டது. கோயிலை உருவாக்குவதற்காக இந்தியாவிலிருந்து சிறந்த ஸ்தபதி வரவழைக்கப்பட்டார். கோயில் கட்டப்பட்டு 2000 ஆம் ஆண்டு நவம்பரில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தென்னிந்திய மரபின்படி கருங்கல், வெண்கலம் ஆகியவற்றாலான விக்கிரகங்களும், வட இந்திய மரபின்படி பளிங்கிலான விக்கிரகங்களும் அமைந்திருப்பது இக்கோயிலுக்குரிய தனித்தன்மையாகும்.
[தொகு] அமைப்பு
வளத்தையும் செல்வத்தையும் வழங்கும் சித்தி கணேஷர் மூலஸ்தானத்திலும், சிவலிங்கம், வள்ளி தெய்வானை சமேதராக முருகன், துர்க்கை, லக்ஷ்மி, நாராயணன் ஆகியோர் பரிவார தெய்வங்களாகவும் இக்கோயிலில் அமர்ந்திருந்து அருள் பாலிக்கின்றனர். அத்துடன் நவக்கிரகங்கள், வைரவர், அநுமன் ஆகியோரும் அவரவர்க்குரிய இடங்களில் தாபிக்கப்பட்டுள்ளனர்.